இறுதி வரை களத்தில் நின்ற கோலி!

ஐ.பி.எல்   2018 -ல் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதும்  14 -வது லீக் போட்டி நடைபெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் ஷர்மா

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 213 ரன்களை குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 52 பந்துகளில் 94 ரன்களை எடுத்தார். 214 ரன்கள் என்கிற இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்குச் சரியான தொடக்கம் அமையவில்லை. குறிப்பாக நான்காவது ஓவர் பெங்களூர் அணிக்கு மிகப்  பெரிய அடியாக வந்து விழுந்தது. தொடக்க வீரர் டி காக் 19 ரன்களில் நடையை காட்டினார். அடுத்து வந்த அதிரடி டிவில்லியர்ஸும் தன்னுடைய பங்காக 1 ரன் மட்டுமே எடுத்து அதே ஓவரில் பெவிலியன் திரும்பினார். இரண்டு விக்கெட்டுகளையும் மெக்லாகன் வீழ்த்தினார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருக்க விராட் கோலி அணியை சரிவிலிருந்து மீட்க தொடர்ந்து போராடினார். மறுமுனையில் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். குருனல் பாண்ட்யா வீசிய 9 வது ஓவரில், மன்தீப் சிங் மற்றும் கோரி ஆண்டர்சனை வீழ்த்தினார். யாரவது ஒருவர் நின்று விலையாடுவார்கள் என எதிர்பார்த்த கோலிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வாஷிங்டன் சுந்தர் 7 ரங்களில் வெளியேறினார். இந்த தொடரில் ஏலத்திற்கு முன்பாகவே தக்கவைக்கப்பட்ட வீரர் சர்ப்ராஸ்கான் இந்த போட்டியிலும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து  ஏமாற்றினார்.

கிறிஸ் வோக்ஸ் 11 ரன்னிலும் உமேஷ் யாதவ் 1 ரன்னிலும் பும்ரா வெளியேற்றினார். கடைசி வரை போராடிய கோலி, விக்கெட்டை இழக்காமல் 62 பந்துகளில் 92 ரன்களை  எடுத்தார். மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக குருனல் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இறுதியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விகளுக்கு மும்பை அணி முற்று புள்ளி வைத்தது. நான்கு போட்டிகளில் விளையாடிய பெங்களூர் அணிக்கு இது மூன்றாவது தோல்வியாக அமைந்தது. ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.