பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
52 வயதான இவர் ஒரு கட்டபிரம்மச்சாரி, இன்றுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும், இவரை திருமணம் செய்துகொள்வதற்காக பாலிவுட்டின் சில நடிகைகள் காத்திருக்கின்றனர்.
பாலிவுட் திரையுலகில் கோடிக்கணக்கில் வசூல் செய்யும் ஹீரோ என்றாலும், இவரை சுற்றி பல சர்ச்சைகள் வலம் வருகின்றன. பாலிவுட் திரையுலகில் அதிக சர்ச்சைகளுக்கு ஆளான நடிகர் என்றால் அது இவர்தான்.
மான் வேட்டை
1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹேன் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது சல்மான் கான் அரியவகை BlackBuck ரக மானை வேட்டையாடியுள்ளார்.
இந்தியாவின் பாரம்பரிய மான் வகையான இது, அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலிலும் இருந்தது. இதனால், சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், சல்மான் கானுக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கார் விபத்து
2002ம் ஆண்டு சல்மான் மும்பையில் கார் வேகமாக ஒட்டி சென்று, சாலையில் படுத்திருந்த 5 பேர் மீது காரை மோதியுள்ளார்.
இதில், ஒருவர் உயிரிழந்தார், நான்கு பேர் படுகாயமடைந்தனர். விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிவானது. ஆனால், சாட்சிகள் இவருக்கு சாதகமாக இல்லாத காரணத்தால், கடந்த ஆண்டு இவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.
ஐஸ்வர்யா ராய்- சல்மான்
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் நடிக்க தொடங்கியவுடன் நடிகர் சல்மான் கானுடன் மிக நெருக்கமாக பழகினார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவுசெய்தனர். ஆனால், ஐஸ்வர்யாவை எப்போதும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்பிய சல்மான், அவர் மீது வன்முறை தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஐஸ்வர்யாவின் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று அவருடன் சண்டைபோடுவது, ஐஸ்வர்யாவின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டுவது என இவரது எல்லைகள் வரம்புமீறி போகவே, தனது உறவை முறித்துக்கொள்ள ஐஸ்வர்யா முடிவு செய்தார்.
ஒரு முறை ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு குடிபோதையில் சென்ற சல்மான் கான், இரவில் இருந்து நள்ளிரவு 3 மணிவரை அவரது வீட்டின் காலிங் பெல்லை அடித்துக்கொண்டே இருந்துள்ளார். அதன்பின்னர் கதவை திறந்த ஐஸ்வர்யாவின் வீட்டுக்குள் சென்று பொருட்களை சேதப்படுத்தி சண்டைபோட்டுள்ளார். இந்த செய்தி பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது.
உறவை முறித்துக்கொண்ட பின்னரும், சல்மான் தொலைபேசி வாயிலாக ஐஸ்வர்யாவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார், இந்த உரையாடலை பதிவு செய்து கொண்ட ஐஸ்வர்யா, இதுகுறித்து பொலிசிலும் புகார் அளித்தார்.
சல்மான் கானுக்கு பின்னர் ஐஸ்வர்யா, நடிகர் விவேக் ஒபராயுடன் நெருங்கி பழகியது சல்மான்கானுக்கு பிடிக்கவில்லை. இதனால், திட்டம்போட்டு விவேக் ஒபராயின் படவாய்ப்புகளை தட்டிவிட்டார். இதனை ஒரு முறை பத்திரிகையாளர்களிடமே தெரிவித்தார்.
வளர்ந்து வரும் நாயகனாக இருந்த விவேக் ஒபராய்க்கு, சரிவு ஏற்பட காரணம் சல்மான் கான் தான்.
கத்ரினா பார்ட்டியில் சண்டை
2008 ஆம் ஆண்டு கத்ரினாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டபோது குடிபோதையில் ஷாருக்கானுடன் சண்டைபோட்டுள்ளார், வார்த்தை போரில் ஈடுப்பட்ட இவர்கள் இருவரும் இதற்கு பிறகு நீண்ட காலம் பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.
பிறகு, 2013ம் ஆண்டு பாபா சித்திக் வைத்து இப்தர் விருந்தில் இருவரும் சுமூகமாக பேசி தங்கள் சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இவற்றையும் தாண்டி, பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் தெரியாமல் வார்த்தைகளை விட்டு பலமுறை சிக்கலில் சிக்கியுள்ளார் சல்மான் கான்.