‘‘வெயில் காலத்தில் அழகையும் காக்க வேண்டும்; அதன்மூலம் ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும் என்றால் இவற்றையெல்லாம் பின்பற்றுங்கள்’’ என்கிறார் நறுமண சிகிச்சை மற்றும் அழகுக்கலை நிபுணரான கீதா.
கூந்தல் பராமரிப்பு
வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக வேலைசெய்யும் காலம் இது. இதனால் கூந்தலின் வேர்ப்பகுதியில் உள்ள துவாரங்களில் அழுக்கும், எண்ணெய்ப்பசையும் சேர்ந்து அடைத்துக் கொண்டுவிடும். இதன் எதிரொலியாக ரத்த ஓட்டம் தடைபடுவதாலும், போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததாலும் கொத்துக் கொத்தாக முடி கொட்டத் தொடங்கும்.
அதனால் வெயிலில் செல்லும்போது தொப்பி, ஸ்கார்ஃப் கொண்டு தலையை நன்றாக கவர் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நேரடியாக வெயில் தலையில் படும்போது மெலனின் குறைபாடும், தலைமுடி மெலிவதும் ஏற்படும்.பலருக்கு பொடுகுத்தொல்லை அதிகமாவதும் வெயில் காலத்தில்தான். மெழுகுபோன்ற திரவம் தலையில் சுரப்பதே இதற்கு காரணம்.
முதல்நாள் இரவு 5 மி.லி விளக்கெண்ணெய் மற்றும் 5 மி.லி நல்லெண்ணெய் இரண்டையும் கலந்து முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்துவிட்டு, மறுநாள் காலை அதிக கெமிக்கல் இல்லாத மைல்டு ஷாம்பூ போட்டு, இதமான நீரில் தினசரி தலைக்கு குளிக்க வேண்டும். குளிக்கும் நீரில் ஆப்பிள் சிடர் வினிகர்(Apple cider vinegar) அல்லது எலுமிச்சைச்சாறு 10 ட்ராப்ஸ் போட்டு குளிப்பதால் தலையில் பிசுபிசுப்பு இருக்காது.
தினசரி தலைக்கு குளித்தால் முடி கொட்டும் என்று நினைப்பார்கள். அது தவறு. தினசரி தலைக்குக் குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தைத் தணிப்பதால் முடி கொட்டுவது நின்றுவிடும். வார இறுதி நாட்களில் திக்கான தேங்காய் பால் 2 டேபிள் ஸ்பூன், அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஈவினிங் ப்ரைம்ரோஸ் ஆயில் 1 கேப்சூல் கட் செய்து மூன்றையும் கலந்து முடியின் வேர்க்கால்களில் தடவி 2 மணிநேரம் ஊறவைத்து குளிப்பதால் வாரம் முழுவதும் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை சமப்படுத்தலாம்.
சோற்றுக்கற்றாழையை பிளந்து உள்ளே ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் வைத்து ஸ்டஃப் செய்து கயிறால் நன்றாக கட்டி வைத்துவிட வேண்டும். இரண்டு நாள் கழித்து வெந்தயம் முளை விட்டிருக்கும். ஒரு ஸ்பூனால் கற்றாழை ஜெல்லோடு வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன்நல்லெண்ணெய் மற்றும் 1/4 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து தலைப்பகுதியில் தடவி 2 மணிநேரம் கழித்து குளித்தால் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
10 செம்பருத்திப்பூக்களோடு தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு, குளிர்தாமரைத் தைலம் 2 டீஸ்பூன் கலந்து தலையில் தடவி குளிப்பதால் உச்சந்தலை குளிர்ந்து, முடி வறண்டு உடைவது தடைபடும்.முகப் பராமரிப்பு…
காலை 10 மணிவரையிலும் உள்ள இளம் வெயிலால் வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் உடலுக்கு நல்லது. அதனால் அப்போது வெளியில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படாது. நண்பகல் வெய்யில்தான் மேற்புறத்தோலை பதம் பார்க்கிறது. வெயிலில் வேலை செய்பவர்களாக இருந்தால் வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீனைக் காட்டிலும் SPH 30 அளவுள்ள சன் ப்ளாக் லோஷனை(Sunblock lotion) உபயோகிக்க வேண்டும்.
சருமத்துக்கு தீங்கினை ஏற்படுத்தக்கூடிய சூரியக்கதிரானது தோலுக்கு அடிப்புறத்தில் இருக்கும் திசுக்களில் ஊடுருவாமல் சன்ப்ளாக்கில் உள்ள டைட்டானியம் டயாஃபைடு மற்றும் சின்க் ஆக்ஸைடு இரண்டும் முற்றிலும் தடுக்கிறது. 2 மணி நேரம் வரைதான் பாதுகாப்பு கொடுக்கும் என்பதால் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை சன் பிளாக்கை முகத்தைக் கழுவியபின் போட்டுக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே சன்பிளாக் போட்டுக் கொள்ளும்போதுதான் தோலின் அடிப்புறத்திலும் ஊடுருவி செட்டாகும். வீட்டிற்குள் இருப்பவர்களும் லேசாக போட்டுக் கொள்ளலாம்.
இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் தொடர்ந்து வெயில் காலம் முழுவதும் அப்படியே விட்டுவிட்டால், முகம் மற்றும் கை,கால்களில் ஏற்படும் கருமை அப்படியே திட்டுகளாக படிந்துவிடும். இதுவே மங்கு என்று சொல்லும் ஹைபர் பிக்மன்டேஷனில் கொண்டுவிடும் அபாயம் உண்டு. எனவே, கோடைக்காலம் முழுவதுமே வீட்டுக்கு வந்தபிறகு அந்தந்த நாளில் ஏற்படும் கருமையை போக்கிவிட வேண்டும்.
இதற்கு, காலமைன் லோஷனை 1/2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, 2 சொட்டு எலுமிச்சைசாறு, 2 சொட்டு தண்ணீர் விட்டு நன்றாக குழைத்து முகம், கை, கால்களில் தடவிக்கொண்டு உறங்கச் செல்லலாம். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் முதல்நாள் முகத்தில் ஏற்பட்ட கருமை நீங்கி, முகம் பளிச்சென்று ஆகிவிடும். இதை கோடைகாலம் முழுவதுமே செய்து வரவேண்டும். இவை அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். இவை தவிர வீட்டிலேயே செய்யக்கூடிய பின்வரும் ஃபேஸ்பேக்குகளை தயாரிக்கலாம்…
வாட்டர் மெலான் ஃபேஸ்பேக்
தர்பூசணியின் சதைப்பகுதி மற்றும் விதைகள் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, 1/4 டீஸ்பூன் கடலைமாவு, 1/4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் கை கால்களில் பேக் மாதிரி போட்டுக் கொள்ள வேண்டும். 1/2 மணிநேரம் கழித்து முகத்தைக்கழுவலாம்.
கிரேப்ஸ் ஃபேஸ்பேக்
கருப்பு திராட்சையை(விதை உள்ளது) விதையோடு ஈரம் போக நன்றாக துடைத்துவிட்டு ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து, அந்த விழுதுடன் 1/4 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு 2 நாட்கள் அப்படியே வைத்துவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. 2 நாட்கள் கழித்து பார்த்தால் மேலாக வெள்ளை நிறத்தில் ஏடுபோல் படிந்து இருக்கும்.
இதுதான் அல்ட்ரா ஹைட்ராசில் ஆசிட். இது தோலில் ஏற்படும் கருமையை உடனடினியாக குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. 2 நாட்களுக்கு ஒருமுறை கண்களைச் சுற்றி, முகம், கழுத்து, கை, கால்களில் போடும்போது தோலில் ஏற்படும் சுருக்கம், கருமையை நீக்கிவிடும். வெயில் காலத்தில் கண்களில் ஏற்படும் சோர்வையும் போக்கிவிடும்.
பைனாப்பிள் ஃபேஸ்பேக்
நன்றாக பழுத்த பைனாப்பிளின் மேல்தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை அரைத்து ஒரு மெல்லிய துணியால் வடிகட்டி சாறினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு வெள்ளை சோளமாவு 1 டீஸ்பூன், தயிர் 1/2 டீஸ்பூன், லெமன் ஆயில் 5 சொட்டுகள் கலந்து 3 மணிநேரம் அப்படியே வைத்துவிட வேண்டும். பைனாப்பிள் ஜூஸில் இருக்கும் என்சைம் மற்றும் சோளமாவு கலந்த இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.
மேற்சொன்ன எல்லா ஃபேஸ்பேக்குகளையுமே தயாரித்து 10 நாள்வரை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். இது எல்லாவற்றையுமே முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து முதலில் சற்று சூடான நீரிலும், பின்னர் குளிர்ந்த நீரிலும் கழுவ வேண்டும்.
பாதங்களைப் பாதுகாக்க…
சிலருக்கு, வெயில் பாதங்களில் படும்போது தோல் உரிந்து வெடிப்பு ஏற்பட்டு எரிச்சல் உண்டாக்கும். முறையாக பராமரித்தால் பட்டுப்போன்ற பாதங்களை பெறலாம். கடையில் கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடை வாங்கி கால்விரல்களின் நகங்களில் சொட்டு சொட்டாக விடவேண்டும். சிலநிமிடங்களில் நகக்கண்களில் உள்ள அழுக்குகள் நுரையாக வெளியே வந்துவிடும். இந்த அழுக்குகளை நீக்கி, கால்களை நன்றாக துடைத்துவிடவேண்டும்.
அடுத்து, சமையல் சோடா 2 டீஸ்பூன் 1 டீஸ்பூன் மோர், 1/2 டீஸ்பூன் சர்க்கரை கலந்து பாதங்களில் பூசவேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு துடைத்துவிட்டு 1/2 பக்கெட் சுடு தண்ணீரில் 2 துண்டுகள் இமாலயன் சால்ட், ஒரு கைப்பிடி சமையல் உப்பு, 30 மிலி விளக்கெண்ணெய், 2 எலுமிச்சைப்பழம் கட் செய்து தோலுடன் மற்றும் மைல்ட் ஷாம்பூ 1 டீஸ்பூன் போட்டு கலக்கி, காலை அதனுள் வைத்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் கால்களில் ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்துவிட்டு, க்யூனிக் ஸ்டானாலும் தேய்க்க வேண்டும். ஸ்க்ரப்பரால் தேய்த்து அப்படியே விட்டால் தோல் உரியும். எமரிக் பேப்பரால் மேலே தேய்த்துவிட்டால் உரிந்த தோல் படிந்து மென்மையாகிவிடும். காலை நன்றாக துடைத்துவிட்டு, மாய்சரைஸ் க்ரீம் அப்ளை செய்து, படுக்கும் போது சாக்ஸ் போட்டுக் கொண்டு படுக்கச் செல்லலாம். இதை வாரத்துக்கு ஒரு முறை செய்வதால், ரோஜாப்பூ பாதம் போல் மாறிவிடும்.