பந்தை சேதப்படுத்திய வோர்னரின் மோசமான நடத்தைக்கு தானே காரணம் என்று அவரது மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இச் சம்பவத்தால் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு பலமுனைகளிலிருந்தும் விமர்சனக் கணைகள் தொடர்ந்து தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் குறித்த விவகாரத்தில் வோர்னரின் மனைவி கேன்டிஸ் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
பந்தின் தன்மையை மாற்றி வெற்றி காணும் தவறான திட்டம் எனது கணவரின் மனதில் உதித்தமைக்கு நானே காரணமென்று உணர்கிறேன். அக்குற்ற உணர்ச்சி என்னை கொன்று விடும் போலிருக்கிறது. எனது கணவரின் செயலுக்கு நான் மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் தென்னாபிரிக்க தொடரின் போது என் மீதும் குழந்தைகள் மீதும் விழுந்த அவதூறு பேச்சு களுக்கு பதிலடி கொடுக்கவே அவர் அவ்வாறு செய்து விட்டதாகத் தோன்றுகிறது. போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியை பார்க்கச் சென்ற போது சில ரசிகர்கள் எனது முன்னாள் காதலரின் முகமூடியை அணிந்து கொண்டு என்னை கீழ்த்தரமாக கேலி செய்தனர். என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் வோர்னரை வெகுவாக தடுமாற வைத்து விட்டது என்று கேன்டிஸ் கூறியுள்ளார்.






