விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் ரிஷபம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சந்திரனும் புதனும் இருக்கின்ற நேரத்தில் `விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பது ஒரு பாக்கியம் என்றே சொல்லலாம். `சந்திரனும் புதனும் சேர்ந்திருந்தால், இந்திரனைப்போல் வாழ்வான்’ என்று ஒரு பழம் பாடல் இருக்கிறது.
உங்களுக்கு தைரியஸ்தானத்துக்கு உரியவராக சந்திரனும் பூர்வப் புண்ணியஸ்தானதிபதியாக புதனும் வருகிறார்கள். இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து உங்களுக்கு பலத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக மூளை பலத்தைக்கொண்டு புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அந்தஸ்து உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.
ஆனால், புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குரு பகவான் 6 – ம் வீட்டில் மறைந்து இருப்பதால், பணப்பற்றாக்குறை எப்போதும் இருக்கும் அதற்கேற்ப பணமும் வந்துகொண்டே இருக்கும். செலவுகள் செய்யும்போது கொஞ்சம் சிக்கனமாகச் செய்வது நல்லது.
4.10.18 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் 7 – ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், போட்டி, பொறாமைகள் நீங்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.
கணவன் – மனைவிக்கிடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள்.
வருடம் பிறக்கும்போது செவ்வாயும் சனியும் 8 -ம் வீட்டில் சேர்ந்து இருப்பதால், அலைச்சல் அதிகரிக்கும். வண்டி வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்படாமல், கவனமாகக் கையாள்வது நல்லது. ஆண்டு முழுவதும் சனிபகவான் அஷ்டமச் சனியாகத் தொடர்வதால், அவ்வப்போது படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்துபோகும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.
விலையுயர்ந்த பொருள்களை இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கொடுக்கவேண்டாம். கணவன் – மனைவிக்கிடையில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நீங்கள் நம்பியவர்களே உங்களை ஏமாற்றக்கூடும். சொத்து வாங்கும்போது, தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும்.
31.8.18 முதல் 31.12.18 வரை ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவதால், உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.
12.2.19 வரை ராகு 3 -வீட்டிலும் இருப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். எதையும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் திறமை ஏற்படும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை. அப்படிப்பட்ட ராகு உங்களுக்கு, எடுத்த காரியங்களில் எல்லாம் துணிச்சலாகச் செய்து முடித்து வெற்றியைத்தேடித் தருவார்.
பெண்கள் தங்களின் உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. மாணவ மாணவிகளுக்குப் படிப்பு இந்த ஆண்டு மிகவும் அமோகமாக இருக்கும். அதேநேரம் அஷ்டமச்சனி நடப்பதால், பாடங்களை ஒருமுறைக்கு இரண்டு முறை எழுதிப் பார்த்து மனப்பாடம் செய்வது நல்லது.
வியாபாரிகளைப் பொறுத்தவரை புதிதாக எதிலும் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. கூட்டுத்தொழில் நிச்சயமாக நீங்கள் செய்யக் கூடாது. பங்குதாரர்களால் உங்களுக்குப் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. அப்படியே முதலீடு செய்வதாக இருந்தாலும், அக்டோபருக்குப் பிறகு அதாவது குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டுக்கு வரும்போது முதலீடு செய்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். உங்களுக்கு மேல் அதிகாரிகளாக இருப்பவர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. சக ஊழியர்களிடம் பழகும்போது மிகவும் கவனமாக இருங்கள். எவ்வளவோ வேலை பார்த்தும் நமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இந்த நிலை மாறும்.
கலைஞர்களைப் பொறுத்தவரை டிசம்பர் மாதம் வரை பெரிய வாய்ப்புகள் இருக்காது. கலைகளுக்கு அதிபதியான சுக்கிரன் 6 – ம் வீட்டில் மறைகிறார். ஜனவரி மாதத்திலிருந்து இந்த நிலையில் மாறுதல் ஏற்படும்.
விவசாயிகளுக்கு மரப்பயிர்கள், தோட்டப் பயிர்கள் நல்ல லாபம் தரும். பூச்சித் தொல்லைகள் அதிகமிருக்கும் உரிய முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள். பக்கத்து வயல்க்காரர்களுடன் வரப்புத் தகராறு, வாய்க்கால் தகராறு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே ஏற்பட்டாலும் பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள்.
ஆக மொத்தத்தில் இந்த விளம்பி வருடம் கொஞ்சம் அலைச்சல் திரிச்சல், பணப்பற்றாக்குறை இருந்தாலும், அக்டோபருக்குப் பிறகு எல்லாமே சிறப்பாக அமையும்.
பரிகாரம்
தஞ்சை மாவட்டம், மணலூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு மாரியம்மனை, ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். நன்மைகள் பெருகும்.