மகாராஷ்டிராவில் மணமக்கள் உட்பட திருமணத்திற்கு வந்த உறவினர்கள் 700 பேர் உடல் உறுப்புத் தானம் செய்த புதுமையான திருமணம் நடந்துள்ளது.இவ்வாறு நடந்தால் நாட்டில் குணமடையும் நிலையில் இருக்கும் ஊனமுற்றவர்களே இருக்கமாட்டார்கள் என கல்யாணத்திற்கு வந்தவர்கள் கூறினார்கள்.
மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள நாஷிக் பகுதியைச் சேர்ந்தவர்கள் வர்ஷா பாகர் மற்றும் ஸ்வப்நில் கொதவாடே. இருவருமே அரசு ஊழியர்கள் ஆவர்.
மக்களுக்கு சேவை செய்யும் அரசு பணியில் உள்ள மணமக்கள் இருவருக்கும் சமூகசேவையிலும் ஈடுபாடு அதிகம். எனவே, தங்களது திருமணத்தையும் முன்னுதாரண நிகழ்வாக்க அவர்கள் விரும்பினர்.
அதன்படி, கடந்த ஞாயிறன்று நடந்த இவர்களது திருமணத்தில் மணமக்கள் இருவரும் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் மற்றும் உறவினர்களும் தங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக பதிவு செய்தனர். மணமக்களையும் சேர்த்து மொத்தம் 700 பேர் வரை உடலுறுப்பு தானம் செய்திருக்கின்றனர்.
அத்துடன் திருமண விழாவில் ரத்த தானம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் 60 பேர் ரத்த தானம் அளித்தனர்.






