யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்க தீர்மானம்!

யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்குவதற்கு பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக – ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நாடுமுழுவதும் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உடன்பாட்டிற்கு இசைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை, அப்பதவிகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளில் காணப்படும் சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்யும்படி போதனைசார ஊழியர்களால் வழங்கப்பட்ட அழுத்தத்தை கவனத்தில்கொள்ளாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகின்றது.

அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்த தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் நாளை முதல் பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அவர்களுக்கு யாழ். பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்களும் ஆதரவளிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல் உள்ளிட்ட பிரதான வாயிற் கதவுகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.