நீதிமன்ற தடையுத்தரவுகளால் மந்தகதியில் லசந்த கொலை தொடர்பான விசாரணை!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதைத் தடுத்து நீதிமன்றம் தொடர்ந்தும் வழங்கி வரும் தடையுத்தரவுகளால், அந்த கொலை தொடர்பான விசாரணைகள் சீர்குலையும் நிலைமை உருவாகியிருப்பதாக தெரியவருகிறது.

இந்த பின்னணியில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர்களை கைதுசெய்து வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வது விசாரணைகளை நடத்தி வரும் அணியினருக்கு விசாரணைகளை நடத்தவும் தகவல்களை பெற்றுக்கொள்ளவும் இலகுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில் தான் கைது செய்யப்பவதை தடுக்குமாறு கோரி முன்னாள் பொலிஸ்மா அதிபர் அண்மையில் நீதிமன்றத்தில் தடையுத்தரவை பெற்றுக்கொண்டார்.

அதனை தவிர முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தன்னை கைது செய்ய நீதிமன்றத்தில் தடைகோரும் போது தடைகோரும் தரப்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பெயரும் குறிப்பிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.