கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, இன்று டி.டி.வி. தினகரனை திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, சசிகலா பக்கம் சீக்கிரம் வாருங்கள் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அலர்ட் செய்திருப்பது அக்கட்சியினர் இடையே பரபரப்பை கூட்டியிருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-வில் பூகம்பம் வெடித்தது. இரண்டாகப் பிரிந்த அ.தி.மு.க-வில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவிக்க, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அதன் பிறகு, டி.டி.வி. தினகரன் தரப்புடன் மோதல் ஏற்படவே, ஓ.பி.எஸ்ஸுடன் சேர்ந்து ஆட்சி நடத்திவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இருப்பினும், டி.டி.வி-யை ஆதரித்து 18 எம்.எல்.ஏ-க்கள் அவருடன் சேர்ந்தனர். இதனால், 18 எம்.எல்.ஏ-க்களை அதிரடியாக தகுதிநீக்கம் செய்த எடப்பாடி தரப்பு, 112 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி நடத்திவருகிறது.
இந்த நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அவ்வப்போது டி.டி.வி.தினகரனை சந்திப்பதும், தினகரன் அணியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் எடப்பாடி தரப்பை சந்திப்பதும் வாடிக்கையாக இருந்துவந்தது. அதன்படி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அ.பிரபு, இன்று டி.டி.வி.தினகரனை சந்தித்துப் பேசினார். அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பழனியப்பன், இந்த சந்திப்பின்போது உடனிருந்தார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பிரபு, “அ.தி.மு.க-விலிருந்து மக்கள் சேவைகளைச் செய்யமுடியவில்லை. அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எம்.எல்.ஏ., பணிகளைச் செய்ய மாவட்டத்தில் பல முட்டுக்கட்டை போடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் என்ன பிரச்னை என்பது முதல்வருக்கு நன்றாகத் தெரியும்.
கள்ளக்குறிச்சியைத் தலைமை இடமாகக்கொண்டு புது மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனப் பல தடவை கோரிக்கை விடுத்தும் முதல்வர் செவிசாய்க்கவில்லை. அதனால்தான், தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். தமிழகத்தை வழிநடத்த, மக்கள் ஆதரவுபெற்ற டி.டி.வி. தினகரன் பின்னால் செல்ல வேண்டும். மக்கள் ஆதரவு தினகரனுக்கு உள்ளது என்பது ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகளிலேயே தெரிகிறது. அ.தி.மு.க கட்சியையும் ஆட்சியையும் திறம்பட வழிநடத்த சசிகலா, தினகரனால் மட்டுமே முடியும். அனைவரும் சசிகலா அணிக்கு விரைவில் வர வேண்டும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவர், முதல்வராக வாய்ப்பு உள்ளது” என்றார்.