போலீஸ் நிலையத்தில் இருந்து சிறுமியை கற்பழித்த 2 பேரை தூக்கிச் சென்று மக்கள் அடித்து கொன்றனர்..

அருணாசலப்பிரதேச மாநிலம் லோகித் மாவட்டம் தேசு என்ற இடத்தின் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 12-ந்தேதி திடீர் என்று மாயமாகி விட்டாள்.

நேற்று காலை சிறுமி நம்கோ கிராமத்தில் காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். போலீசார் விசாரணை நடத்தி தேயிலை தோட்ட ஊழியர்கள் சஞ்சய் கோபர் (30), ஜெகதிஷ் லேகர் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இருவரையும் வாக்ரோ போலீஸ் நிலையத்தில் லாக்கப்பில் அடைத்து வைத்து விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். கற்பழிப்பு குற்றவாளிகள் கைதான தகவல் அறிந்த கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டனர்.

திடீரென்று ஆவேசம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தனர். லாக்கப்பை உடைத்து 2 குற்றவாளிகளையும் அங்கிருந்து தூக்கிச் சென்று சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினார்கள்.

இதில் இருவரும் துடி துடித்து இறந்தனர். பின்னர் இருவரது பிணங்களையும் தீ வைத்து எரிக்க முயன்றனர். இதற்குள் அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி மாநில போலீஸ் டி.ஜி.பி. சந்தீப் கோயல் கூறுகையில், போலீஸ் நிலையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால் 2 குற்றவாளிகளையும் பாதுகாக்க முடியவில்லை. தடுத்த போலீஸ்காரர்களையும் தாக்கி விட்டு 2 பேரையும் தூக்கிச் சென்றுவிட்டனர் என்றார்.