48 மணி நேரத்துக்குமேல் உணவு அருந்தாமல் இருந்தால்?

காற்று, நீர், உணவு… இவை மூன்றும் உயிர் வாழ மிகவும் அவசியம். காற்றில்லாமல் சில நொடிகள் வாழலாம். நீர் அருந்தாமல் அதிகபட்சம் இரண்டு நாள்கள்… உணவில்லாமல் எத்தனை நாள்கள் வாழமுடியும்?

உணவு

ஒரு சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று இரண்டு, மூன்று நாள்கள் கூட சாப்பிடாமல் இருக்கிறார்கள். போலவே விரதம் இருக்கிறேன் என்றும் இப்படி சாப்பிடாமல் இருப்பவர்களும் உண்டு…  அப்படி இருக்கலாமா? சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..?

” சாப்பிடாமல் இருப்பதன் விளைவுகள், ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்து வேறுபடும். பொதுவாகச் சொல்வதென்றால்,  ஒருவேளை கூட உணவு  இல்லாமல்  அதிகபட்சம் 48 மணி நேரம் தாக்குப் பிடிக்கலாம்…” என்கிறார் பொதுநல மருத்துவர் மருத்துவர் சிவராமக் கண்ணன்சிவராமக்கண்ணன்.

மேலும் இதுகுறித்து விரிவாகப் பேசியவர், “இரண்டு நாள்களுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால், தசைகளில் உள்ள கிளைக்கோஜனையும் (Glycogen), கல்லீரலில் உள்ள குளுக்கோசையும் (Glucose) நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இவை இரண்டும் குறைந்துவிட்டால் அடுத்ததாக உடலில் உள்ள கொழுப்புகள் கரையத் தொடங்கும். இறுதியாக, செல்களில் உள்ள புரதத்தை நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இது மிகவும் அபாயகரமான நிலை.  இந்தநிலைக்கு  ‘கெடோசிஸ்’ (ketosis) என்று பெயர்.

உடல் இந்த நிலையை எட்டிவிட்டால்,  மிகவும் பலகீனமடைந்து விடுவோம். கடும்  சோர்வு உண்டாகும். தசைகள் வலுவிழக்கும். எலும்புகள் பலமிழந்து உடையத் தொடங்கும். இதயத் தசைகள் வலுவிழப்பதால் ரத்தத்தை பம்ப் செய்யும் ஆற்றல் குறையும். அதன் காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் உண்டாகும். பல்ஸ் ரேட் குறையும். அல்சர் பாதிப்பு ஏற்படும். உடல் குளிர்ச்சியடையும். முடி கொட்டும்.

மனித உடல்

72 மணி நேரத்தைக் கடந்துவிட்டால்  உடலில் ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்துவிடும். இதற்குப் பிறகு நிகழ்பவை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வுகள்தான். முதலில் சிறுநீரகம், இதயம் ஆகியவையும் பாதிப்படைய ஆரம்பிக்கும். அடுத்ததாக, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களாக செயலிழக்கத் தொடங்கும்.

இது பொதுவான கருத்து, ஆனால்,  உணவில்லாமல் எழுபது நாள்கள் வரை உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஐரீஷ் நாட்டு அரசியல் கைதியான  டெரன்ஸ் மேக்ஸ்வைனி (Terence MacSwiney) அதிகபட்சமாக 73 நாள்கள் சாப்பிடாமல் இருந்துள்ளார். அவருடன் போராட்டத்தில் இருந்த பலர் 46 நாள்கள் வரைத் தாக்குப்பிடித்து பிறகு இறந்திருக்கிறார்கள். மெட்ராஸ் மாகாணத்திற்கு,  ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக்கோரி சங்கரலிங்கனார் 76 நாள்கள் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்திருக்கிறார்.

எனவே உணவில்லாமல் ஒருவர்  எத்தனை நாள்கள் உயிர்வாழலாம் என்பதை அவரின்  உடல்நலம், உயரம்,  சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும்தான்  தீர்மானிக்கிறது. பி.எம்.ஐ 12- 12.5 என்ற அளவில் இருப்பவர்கள் பட்டினியாக இருக்கவே கூடாது. அதுபோல, போதிய அளவு  சாப்பிடாவிட்டாலும் இது போன்ற பிரச்னைகள் உண்டாகும்.  ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ (eating disorders) பாதிப்புகள் ஏற்படும்.

விரதம் இருக்கவேண்டும் என்றால், நல்ல ஆரோக்கியம் கொண்ட ஒருவர்  அதிகபட்சம் 8  மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை அவரது இயல்பைப் பொறுத்து விரதம் இருக்கலாமே தவிர, அதற்குமேல் உணவருந்தாமல் இருக்கக்கூடாது. ” என்றார்.

இப்படியான விரதங்களால் உண்டாகும் நன்மைகள்:

உடற்பருமன் ஏற்படாது.

சர்க்கரை நோய் வராது.

இன்சுலின் உணர்திறன் மேம்படும்.

உடற்பருமன்

நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.

டிரைகிளிசிரைடு (Triglycerides) அளவு குறையும்.

மூளை விரைவில் சோர்வடையாது.