`ஜெய் ஸ்ரீராம்!’ என கூச்சலிட்டபடி காதலர்களைக் கலங்கடித்த பஜ்ரங் தள்..

பஜ்ரங் தள் அமைப்பினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிட்டபடி, அகமதாபாத்தில் சபர்பதி ஆற்றங்கரையருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்களை மிரட்டி ரகளை செய்தனர்.

உலகம் முழுக்க இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதைக் கொண்டாடுவதற்கு சிவசேனா மற்றும் சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் சபர்பதி ஆற்றங்கரையில் உள்ள பூங்காவில் இன்று காதல் ஜோடிகள் மற்றும் பொதுமக்கள் கூடி இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தடிகளுடன் வந்த பஜ்ரங் தள் அமைப்பினர், ‘ஜெய் ஸ்ரீராம்’  என்று கூச்சலிட்டபடி, ஆற்றங்கரையருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்களை மிரட்டி ரகளை செய்தனர். ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்த சிலரை விரட்டியடித்தனர். பயந்துபோன காதல் ஜோடிகள் அங்கிருந்து ஓடினார்கள். 10 நிமிடங்கள் அவர்கள் அந்தப் பகுதியில் கலாட்டா செய்தனர்.


இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிந்ததும் அவர்கள் அந்தப் பகுதிக்கு வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் ரகளை செய்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீஸார் அவர்களைத் துரத்திப் பிடித்தனர். எனினும், சிலர் தப்பியோடிவிட்டார்கள். பஜ்ரங் தள் அமைப்பின் அகமதாபாத் நகர துணைத்தலைவர் நிகுன்ஜ் பரேக் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான நிகுன்ஜ் பரேக் கூறும்போது, “இது காதலுக்கு எதிரான போராட்டம் அல்ல. பொது இடத்தில் நாகரிகமாக நடந்துகொள்ளாததற்கு எதிரானது. போலீஸார் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் காதலர் தினத்தை எதிர்த்துப் போராடுவோம். எங்கள் சமூகப் பெண்கள் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களால் கவரப்படுவது இந்தக் காலத்தில் அதிகரித்து வருகிறது. காதலர் தினத்துக்கும் ‘லவ் ஜிகாத்’துக்கும் தொடர்பிருக்கிறது” என்றார். பஜ்ரங் தள் அமைப்பின் அகமதாபாத் நகர தலைவர் ஜிவாலித் மேத்தாவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவின் தொகாடியா காதலர் தினம் கொண்டாடுபவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று தன் கட்சித் தொண்டர்களுக்கு ஆணையிட்டதாகச் சமீபத்தில் செய்தி வெளியானது நினைவுகூரத்தக்கது.