தனக்கு எதிரான அலையை சாதுரியமாக காய்நகர்த்தி வெற்றிகரமாக பிரதமர் பதவியை தக்கவைத்த ரணில்!!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்துள்ள நிலையில்,ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து செயலாற்ற முடியாது என தெரிவித்திருந்தனர்.அதேபோல ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரதமருக்கு எதிராக கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக 47 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓப்பம் இட்டு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாகவுன் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை சமாளித்து தனது தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவும் சாணக்கியமான ஒரு நகர்வை முன்னெடுத்துள்ளார்.கட்சியின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை என அனைவரையும் ஒரே தடவையில் சந்திக்காமல் 5 குழுக்களாக சந்தித்து கட்சியின் எதிர்காலம் தலைமைத்துவம் என்பன குறித்து கருத்து கேட்டுள்ளார்.அனைவரையும் ஒரே தடவையில் சந்தித்தால் தனக்கு எதிராக அதிகமான எதிர்ப்பு கிளம்பும் என்பதை அறிந்துகொண்ட பிரதமர் ரணில் கட்சியின் முக்கியஸ்தர்களை குழுக்களாக அதாவது சிரேஷ்ட அமைச்சர்கள் ,அமைச்சர்கள் ராஜாங்க பிரதி அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் , பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் என ஐந்து குழுக்களாக தனித்தனியே சந்தித்து கருத்து கேட்டுள்ளார்.

ஒவ்வொரு தனிக்குழுக்குள்ளேயும் தனக்கு ஆதரவான ஆணியை கொண்டு எதிர்ப்பு வெளியிட்ட தரப்பினரை சமாளித்து தனது தலையை பாதுகாக்கும் நகர்வை மிக சாதுர்யமாக நகர்த்தியுள்ளார்.இந்த காய் நகர்த்தலை அரசியல் சாணக்கியமாகவே பார்க்க வேண்டியுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்களே குறிப்பிடுகின்றனர். தற்போது கொழும்பிலிருந்து வெளியாகும் உறுதியான தகவல்களின் படி பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு எந்தவித சிக்கலுமின்றி பதவிக்காலம் முடியும் வரை தொடரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.