மாணவிக்கு மயக்க ஊசி போட்டு, டாக்டர் ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் ..

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் டாக்டர் ரவீந்திரன் (47). இவர் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.

இவரது ஆஸ்பத்திரிக்கு பல மாவட்டங்களில் இருந்து நர்சிங் கல்லூரி மாணவிகள் பயிற்சிக்காக வருவார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு இங்கு வந்தார்.

திண்டுக்கல்லில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வரும் இவருடன் சேர்த்து மொத்தம் 10 மாணவிகள் ஆஸ்பத்திரியில் பயிற்சி பெறுகின்றனர்.

சம்பவத்தன்று கொடைக்கானல் மாணவிக்கு சளித்தொல்லை அதிகமாக இருந்தது. இதற்காக டாக்டர் ரவீந்திரனிடம் மாணவி மாத்திரை கேட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் சளி அதிகமாக இருப்பதால் ஊசி போட்டுக் கொள்வது நல்லது என கூறி இடுப்பில் ஊசி போட்டார். பின்னர் உனக்கு ரத்தம் குறைவாக இருக்கிறது, இதற்காக மேலும் ஒரு ஊசி போட்டுக் கொள் என கூறி மயக்க ஊசியை போட்டுள்ளார்.

இதனால் மாணவி மயக்கமடைந்ததும் டாக்டர் ரவீந்திரன் ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அரை மயக்கத்தில் இருந்த மாணவியால் டாக்டரை முழுமையாக தடுக்க முடியவில்லை. என்றாலும் போராடி டாக்டரின் பிடியில் இருந்து மாணவி தப்பி ஓடினார். அப்போது மாணவி ஆஸ்பத்திரி வளாகத்தில் மயங்கி விழுந்தார்.

இதைபார்த்த சக மாணவிகள் தண்ணீர் தெளித்தனர். சிறிது நேரத்திற்கு பின் சகஜ நிலைக்கு திரும்பிய மாணவி நடந்த சம்பவங்களை கூறினார். இதைக்கேட்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் இதுபற்றி டாக்டரின் மனைவியிடம் நடந்த சம்பவங்களை கூறினர். அவர் மாணவிகளிடம் இனிமேல் இதுபோன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறி சமாளித்தார். ஆனால் டாக்டர் ரவீந்திரன் இதேபோன்ற பல மாணவிகளிடமும் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார், எனவே அவரால் இனிமேல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என கருதிய மாணவிகள் இதுபற்றி கோவையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் மைய ஒருங்கிணைப்பாளர்கள் சுலேகா, உமா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் டாக்டர் ரவீந்திரனின் அத்துமீறல்களை கூறி மாணவிகள் கண்ணீர் வடித்தனர். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில் டாக்டர் ரவீந்திரன் மீது கோவை மாநகர கிழக்கு பிரிவு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மசுதாபேகம் மற்றும் போலீசாரும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து டாக்டர் ரவீந்திரன் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சிறப்பு சட்டம் 2012-ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.