இந்தக் கடிகாரத்தில் 12 மணியானால் உலகம் அழிந்து விடும்…

டைம்பாம்கள் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. சினிமாக்களில் 10, 9, 8, 7, 6,…. என எண்கள் தலைகீழாக எண்ணப்படுவதும், அதற்குள் அதைச் செயலிழக்க வைக்க ஹீரோ சாகசங்கள் பல புரிவதும், விறுவிறுப்பாகக் காட்சிகளை நகர்த்தி விடும். மூன்று நிமிடங்கள், இரண்டு நிமிடங்கள் இருக்கும் போதே அதைச் செயலிழக்க வைக்காமல், கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் சென்று, கடைசி பந்தில் சிக்ஸர் தூக்கும் தோனி போல, இறுதியாக ஒரு நொடி இருக்கும்போது மட்டுமே வெடிகுண்டைச் செயலிழக்க வைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு டைம்பாம்தான் இந்த அழிவின் கடிகாரம் எனப்படும் ‘டூம்ஸ்டே கிளாக்’  (Doomsday Clock). என்ன அந்த வெடிகுண்டின் நேரம் முடிந்தால் ஒரு கட்டத்தை தகர்க்கும். இந்த அழிவின் கடிகாரம் 12 மணியைத் தொட்டால், உலகம் முழுவதும் அடுத்த நொடி அழிந்திருக்கும் என எடுத்துக் கொள்ளலாம்.

Doomsday Clock

ஆம். அது ஒரு கடிகாரம்தான். என்ன… ‘இருக்கிறது. ஆனால் இல்லை’ ரகத்தைச் சேர்ந்தது, அவ்வளவே! அழிவின் கடிகாரம் என்னும் இது, உண்மையில் ஓர் உருவகம். ஒரு குறியீடாக மட்டுமே பார்க்கப்படும் இது, நமக்குப் பூமியின் அழிவைக் குறித்து எச்சரிக்கை மணி அடிக்கிறது. அணு ஆயுதப் போர், புவி வெப்பமயமாதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித இனம் பாதிப்படைதல் என்ற மூன்று விஷயங்கள் எப்போதெல்லாம் பூதாகரமாகி உலக அரங்கில் தலைப்புச் செய்தியாக, ஒரு விவாதப் பொருளாக இருக்கிறதோ, அப்போதெல்லாம், இதன் முள் நள்ளிரவை நோக்கி மெல்ல மெல்ல நகரத் தொடங்கும். இதை யார் இயக்குகிறார்கள், இதுவரை எத்தனை முறை இதன் முற்கள் நகர்ந்திருக்கின்றன என்றெல்லாம் பார்க்கும் முன், இதன் வரலாற்றைப் பார்த்து விடுவோம்.

யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கப்பட்டது?

1947ம் ஆண்டு. Bulletin of the Atomic Scientists (அணு விஞ்ஞானிகளின் பத்திரிகை) என்ற பத்திரிகையை நடத்தி வந்த விஞ்ஞானிகள், அப்போதைய சோவியத் யூனியன் அணு ஆயுதங்களை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சி நடத்துவதைக் கண்டு அஞ்சினர். ஓர் ஆயுதம் உருவாக்கப்படுவது எதற்கு? எதிரிகளைத் தாக்கத்தானே? அப்படி அணு ஆயுதம் கொண்டு இந்த உலகம் தாக்கப்பட்டால் பேரழிவு ஏற்படுமல்லவா? எனவே, ஆயுதம் உருவாக்கப்பட்ட நாளன்றே நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம், அப்படி ஒரு பேரழிவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதானே? அதையே அவர்களும் முன்மொழிந்தார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாடும் அணு ஆயுதங்களை உருவாக்கத் தொடங்கும் போது அந்த அழிவு நாள் நம்மை மேலும் நெருங்குகிறது என்ற எண்ணம் உருவாகாமல் இல்லை. அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இந்த அழிவின் கடிகாரத்தின் முக்கியப் பணி.

இதை உருவாக்கிய அணு விஞ்ஞானிகள் இந்த அழிவு நாளை நள்ளிரவுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். காரணம், நள்ளிரவு நேரம்தான் பொதுவாக எல்லோருக்கும் பயம் ஏற்படுத்தக் கூடியது. இந்தக் கடிகாரம் என்ற ஒன்று உருவகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே அணு ஆயுதம் என்பது புழக்கத்தில் இருப்பதால், கடிகாரத்தின் நேரமானது எப்போதும் நள்ளிரவிற்கு மிக அருகிலேயே இருக்கிறது. உலக நிகழ்வுகளின் அடிப்படையில், அதன் சிறிய முள் எப்போதும் 11 மணியைத் தாண்டியே நிற்க, நிமிட முள் மட்டும் 12க்கு மிக அருகில் வரை சென்று கபடி ஆடிக் கொண்டே இருக்கின்றது. நிறுவப்பட்டது முதல் இந்த அழிவின் கடிகாரம் எந்தெந்த நேரங்களைக் காட்டியது எனப் படத்தில் காணலாம்.

1947-2018 வரை கடிகாரம் காட்டிய நேரங்கள்

அழிவின் கடிகாரத்தில் தற்போது மணி என்ன?  

1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது, அணு ஆயுதங்கள் குறித்த ஆராய்ச்சியில் சோவியத் யூனியன் இருந்ததால், அப்போது மணி 11:53. அதாவது நள்ளிரவிற்கு இன்னும் 7 நிமிடங்கள். அதன் பிறகு, அவ்வப்போது நடக்கும் முக்கிய அணு ஆயுதப் போர் குறித்த நிகழ்வுகளின் அடிப்படையில், பெரிய முள் மட்டும் இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. 1952ம் ஆண்டின் இறுதியில், அமெரிக்கா, முதன்முதலாக தெர்மோ நியூக்ளியர் கருவியைச் சோதனை செய்ததால், 1953ம் ஆண்டின் தொடக்கத்தில் கிலி ஏற்படுத்தும் விதமாக, கடிகாரம் 11:58 என்று காண்பித்தது. அதாவது நள்ளிரவிற்கு இன்னும் இரண்டே நிமிடங்கள்! 1974ம் ஆண்டு இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்திய போதும், 1965ல் இந்தியா – பாகிஸ்தான் யுத்தம் நிகழ்ந்த போதும், இதன் முற்களில் மாற்றங்கள் ஏற்பட்டன.Doomsday Clock

2017ம் ஆண்டு ட்ரம்ப் பதவியேற்ற போது, நள்ளிரவிற்கு இன்னமும் இரண்டரை நிமிடங்கள் என்று காண்பித்தது. இதனிடையே, ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர்கள் அணு ஆயுதங்கள் ஏவும் பட்டனை அழுத்திவிடுவேன் என்று மாறி மாறிப் பொறுப்பின்றி பேசி வருவதாலும், அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் புவி வெப்பமயமாகி கொண்டு வருவதாலும், தற்போது, கடிகாரத்தில் கூடுதலாக அரை நிமிடம் குறைந்து மணி 11:58ல் நிற்கிறது. அதாவது, இன்னும் இரண்டு நிமிடத்தில் உலகம் அழியும் என்ற உருவகச் செய்தியை சொல்லி, அது நம்மை எச்சரிக்கை படுத்துகிறது. கிட்டதட்ட, 65 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 2018ம் வருடம்தான், அழிவின் கடிகாரம் 11:58 என்ற அபாயகரமான நேரத்தைக் காண்பித்திருக்கிறது. இது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மிக மோசமான காலகட்டம் என்பதை வெளிப்படையாகவே அந்தக் கடிகாரம் நமக்குக் கூறுகின்றது.

அணு ஆயுத அழிவு மட்டும்தானா?

முதலில் அணு ஆயுதத்தால் ஏற்படப்போகும் அழிவு குறித்து மட்டும் எச்சரிக்கை செய்ய இது நிறுவப்பட்டது. அதாவது அந்தக் கடிகாரத்தின் முள் நகர வேண்டுமென்றால், அதற்கு அணு ஆயுதப் போர் மட்டுமே காரணியாக இருக்க முடியும். ஆனால், பின்னாளில், மேலும் சில வழிகளில் மனிதக் குலத்திற்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதை உணர்ந்தனர். இதனால், 2007ம் ஆண்டு புவி வெப்பமயமாதல், அணுக்கழிவு, மனிதக் குலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அறிவியல் முயற்சிகள் எனக் கூடுதல் அளவுருக்கள் (Parameters) சேர்த்துக் கொள்ளப்பட்டன.

அணு ஆயுதப் பேரழிவு

உலக அரங்கில் இதற்கு மதிப்பு எப்படி?

‘டூம்ஸ்டே கிளாக்’ (Doomsday Clock) என்ற இந்த ‘இருக்கு – இல்லை’ கடிகாரம், ஓர் அணு ஆராய்ச்சி பத்திரிகையால் 70 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டாலும், இன்று வரை அதற்கு உலக அளவில் தனி மதிப்பு உண்டு.

“இதைப் பார்க்கும் போது எல்லாம் அணு ஆயுதங்கள் குறித்த பயமும், அது உலகையே அளித்து விடும் என்ற எண்ணமும் உலகத் தலைவர்கள் அனைவருக்கும் தோன்றுகிறது. இதற்காகவே, பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்ட அணு ஆயுதங்கள் தவறாக கூட வெடித்து விடக் கூடாது என்ற முனைப்புடன் செயல்படுகின்றனர்” என்று பல்வேறு அமைப்புகள் இதை வரவேற்றுள்ளன.

ஒரு சில அமைப்புகள், “இந்தக் கடிகாரம் எப்படிச் செயல்படுகிறது, எதை வைத்து இந்த அணு விஞ்ஞானிகள் முற்களை நகர்த்துகிறார்கள் என்பதே புரியவில்லை. நள்ளிரவிற்கு மிக அருகிலேயே முற்களை வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த மனித இனத்தையும் எப்போதும் பயத்திலேயே வைத்திருப்பது எப்படி நன்மை பயக்கும் என்பதே புரியவில்லை” என்று காரசாரமாக எதிர் கருத்து பேசுகின்றன. அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. உங்கள் கருத்து என்னவென்று பதிவு செய்யலாமே?