முகத்தில் எண்ணெய் வழியுதா…?

உங்களுக்கு இருப்பது எண்ணெய் பசை சருமமா? சரும பிரச்சனையால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா? எவ்வளவு அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தியும் பலன் இல்லையா? என்ன செய்வதென்றே தெரியவில்லையா? கவலையை விடுங்கள்.

இப்பிரச்சனைக்கு ஆயுர்வேதம் சிலவற்றை பரிந்துரைக்கிறது. அவற்றை எண்ணெய் பசை சருமத்தினர் தினந்தோறும் பின்பற்றினால், நிச்சயம் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.

தண்ணீர்

நீரை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். பின் ஒரு ஐஸ் கட்டியை துணியில் கட்டி, முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை என சில வாரங்கள் தொடர்ந்து செய்ய, முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

பால்

பாலில் உள்ள மருத்துவ பண்புகள், எண்ணெய் பசை சருமத்தினருக்கு வரும் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். அதற்கு பாலை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலையிலும், இரவில் தூங்கும் முன்பும் செய்து வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெயை பசையைத் தடுக்கலாம்.

அதிலும் பாலுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கலந்து பயன்படுத்தினால், முகத்தில் உள்ள அதிகளவு எண்ணெய் பசை முற்றிலும் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.

கற்றாழை

கற்றாழை பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. மேலும் இது அனைவரது வீட்டிலும் எளிதில் வளர்ப்பதற்கு ஏற்ற செடியும் கூட. இந்த செடியின் இலையை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரில் கழுவி வர, முகத்தில் உள்ள அதிகப்படியாக எண்ணெய் பசை நீங்குவதோடு, சரும பிரச்சனைகளும் அகலும்.

முட்டை மற்றும் எலுமிச்சை

முட்டையின் வெள்ளைக்கருவுடன், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரால் முகத்தை மீண்டும் கழுவ வேண்டும். இச்செயலால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தலாம்.

வேப்பிலை

வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் இந்த வேப்பிலை நீரால் முகத்தை தினமும் கழுவி வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீயல் பண்புகள் பருக்கள் அதிகம் வருவது தடுக்கப்படுவதோடு, முகத்தில் உள்ள அதிகளவு எண்ணெய் பசையும் நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.