பதுங்கியிருந்த ஆவா குழுவுக்கு பிணை!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு மற்றும் வவுனியாவில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் உறுப்பினர்கள் ஐவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஐவருக்கு பிணை வழங்கி யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

எனினும் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவரான இக்ரம் தொடர்ந்தும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்களான முஸ்லிம் இளைஞரான இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து கடந்த நவம்பர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

அடுத்த இரண்டு நாள்களில் வவுனியா நகர் பகுதியில் வைத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் இக்ரமுக்கு எதிராக 4 வழக்குகளை பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது இக்ரமிடம் கைக்குண்டு மீட்கப்பட்டதாகத் தனியாக முன்வைக்கப்பட்ட வழக்கில் அவரது விளக்கமறியல் வரும் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

ஏனைய 3 வழக்குகளிலும் இக்ரம் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார்.