தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் இன்னும் மஹிந்தவின் கையாளாக!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் இன்னும் மஹிந்தவின் கையாளாகத்தான் இருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகரை பிரதேச சபைக்கு கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரி.ராயுதனன் என்பவரின் அலுவலகம் மாங்கோணி பாம்கொலணியில் நேற்று மாலை திறந்து

வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்னும் மஹிந்தவின் கையாளாகத்தான் பிள்ளையான் இருந்து கொண்டிருக்கின்றார். எமது தமிழ் பகுதியில் மஹிந்த கட்சி தேர்தலில் இறங்காத படியால் “பிள்ளையான் நீயே வெல்லுவாய் இந்த பகுதிக்கு நீயே பொறுப்பு” என்ற படியால் இவர்கள் எமது தமிழ் மக்களின் பகுதிகளை மீட்டுத்தர போகின்றார்களா? இல்லை… தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பால் மாத்திரமே இது முடியும்.

எங்களது அரச அதிகாரிகள் ஒரு சிலர் தங்களது அதிகரங்களை பயன்படுத்தி எங்களது இனம் சாராதவர்களுக்கு காணிகளை வழங்கியுள்ளனர்.

எமது மக்கள் படகுச் சின்னத்தினை நிராகரித்து வருகின்றனர். ஆனால் சிலர் அதனை நம்பி வாழ்கின்றனர். படகுக்கு அளிக்கும் வாக்குகள் அநீதிக்கு அளிக்கும் வாக்குகளாகும்.

கடந்த காலத்தில் வீட்டுக்கு வீடாக பிள்ளைகளை அடித்து பறித்தவர்கள் யார்? தம்பி பிள்ளையானும், முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் தான். இதற்கு பிரபாகரனா உத்தரவிட்டார்?

தலைவர் பிரபாகரன் தலைமையில் இந்த உத்தரவு இடம்பெற்றிருந்தால் வடமாகாணத்திலும் பிள்ளைகளை பிடித்திருக்க வேண்டுமே.

கிழக்கு மாகாணத்தில் தான் அதிகாரம் மிக்கவர் என்று காட்டுவதற்கும், எமக்கு பெரும் படை வேண்டும் என்று காட்டுவதற்கும் பிள்ளையான், கருணா இணைந்து பிள்ளைகளை கொண்டு சென்றார்கள், தராத பெற்றோர்களுக்கு அடித்தார்கள். இன்று இவர்களால் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் இல்லை.

யார் எமது தமிழினத்தை அழித்தார்களோ அவர்கள் முதலமைச்சராக மற்றும் பிரதியமைச்சராக இருந்தவர்கள். சௌகரியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒருவர் செய்த பாவத்திற்கு உள்ளே இருக்கின்றார். அது சிறு தண்டணை தான் இறைவன் பெரிய தண்டனை வழங்குவார்.

எங்களது இனத்திற்கு துரோகம் செய்தவர்கள், எங்களது மக்களின் அழிவுக்கு காரணமானவர்கள், இன்று மட்டக்களப்பான் என்றால் காட்டிக் கொடுப்பவன் என்ற பெயரை

வாங்கித் தந்தவர்கள். இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா சற்று சிந்தியுங்கள் என யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.