வடக்கு தெற்கின் நிலையும் உள்ளூராட்சி தேர்தலும்!

உள்­ளூ­ராட்சித் தேர்தல் பிர­சா­ரங்கள் சூடு பிடிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. தேசிய மட்­டத்தில் எதிர்க்­கட்­சி­களை விமர்­சிக்­கின்ற தேர்தல் பிர­சா­ரங்­க­ளுடன், ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுந்­திரக் கட்­சியும் தங்­க­ளுக்குள் பிணை முறி விவ­கா­ரத்தில் மோதிக் கொண்­டி­ருக்­கின்­றன.

நாட்டின் முக்­கிய பெரும் அர­சியல் கட்­சி­க­ளா­கிய ஐக்­கிய தேசிய கட்­சிக்கும், ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்குமிடையே ஏற்­பட்­டுள்ள குற்றம் சுமத்­து­கின்ற சொற்­போ­ரா­னது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இருப்பு குறித்து அர­சியல் வட்­டா­ரங்­க­ளிலும், பொது­மக்கள் மத்­தி­யிலும் பல சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றது.

இரண்டு தேசிய கட்­சி­களும் இணைந்து அமைத்­ததே ஆட்சி அதி­கா­ரத்தில் உள்ள நல்­லாட்சி அர­சாங்­க­மாகும். அதி­கா­ரத்தில் உள்ள இரண்டு கட்­சி­களும் அர­சாங்­கத்தைக் கொண்டு நடத்­து­வ­தற்­காக செய்து கொண்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி முற்றுப்பெற்­று­விட்­டது. முடி­வுக்கு வந்­துள்ள புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தைப் புதுப்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஆயினும், 2020 ஆம் ஆண்டு வரையில் இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்­சியை நடத்­து­வது என்று தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இந்தப் பின்­ன­ணி­யி­லேயே பிணைமுறி விவகா­ரத்தில் ஊழல் மோசடி செயல்­களில் ஈடு­பட்­ட­வர்கள் பார­பட்­ச­மின்றித் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­த­தை­ய­டுத்தே இரு கட்­சி­க­ளுக்குமிடை­யி­லான இந்த முறுகல் நிலை தலை­தூக்­கி­யது.

ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்டு, பாராளு­மன்­றத்தில் விவா­தத்­திற்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிணை முறி விவ­காரம் தொடர்­பாக நடத்­தப்­பட்ட விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்கை பாரிய அள­வி­லான நிதி­மோ­சடி இடம்­பெற்­றுள்­ளது என தெரி­வி-த்­தி­ருக்­கின்­றது. அத்­துடன் மோச­டியில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என பல­ரு­டைய பெயர்­க­ளும்­கூட வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளன. அவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் அந்த அறிக்கை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இவ்­வாறு நாட்டு மக்­க­ளு­டைய பணத்தில் நிதி­மோ­ச­டியில் ஈடு­பட்­ட­வர்கள் தண்­டிக்­கப்­ப­டுவார்கள் என கடுந்­தொ­னியில் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, குற்றம் செய்­த­வர்­களைத் தண்­டிப்­ப­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒத்­து­ழைக்க வேண்டும் என்று பகி­ரங்­க­மாக வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

முன்­ன­தாக பிணை முறி விவ­கா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தியின் மீது சொற்கணை­களை ஏவி­யி­ருந்­தனர். அதனால் உணர்ச்சி வசப்­பட்ட ஜனா­தி­ப­தியை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆசு­வா­சப்­ப­டுத்தி அமை­தி­ய­டையச் செய்­துள்ளார். பிணைமுறி விட­யமே பாராளு­மன்­றத்தை சமர்க்­க­ள­மாக்­கி­யி­ருந்­தது.

மறு­பக்­கத்தில் ஆட்சி அதி­கா­ரத்தை எந்த வகை­யி­லா­வது கைப்­பற்­றி­விட வேண்டும் என்று துடித்துக்கொண்­டி­ருக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக விடு­த­லைப்­பு­லி­களின் நாட்டைப் பிரிக்­கின்ற கைங்­க­ரி­யத்­திற்கு அர­சாங்கம் துணை­போ­யி­ருப்­ப­தாகப் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு பிரி­வினைவாத ரீதியில் நாட்டை தாரை­வார்த்துக் கொடுப்­ப­தற்கு அரச தரப்­பினர் முயன்று வரு­கின்­றார்கள் என்று சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வாத நோக்கில் பிழை­யான பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தை சிங்­கள மக்கள் மத்­தியில் பொல்­லாத அர­சாங்­க­மாக உரு­வ­கித்துக் காட்­டு­வ­தற்கு பிணை­முறி விவ­காரம் அவ­ருக்கும் பொது எதி­ர­ணி­யி­ன­ருக்கும் நல்­ல­தொரு வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருப்­பதைத் தெளி­வாகக் காண முடி­கின்­றது.

அரச தரப்­பி­னரும் சளைக்­க­வில்லை. அவ­ருக்குப் பதி­ல­டி­யாகப் பல்­வேறு விட­யங்­களை வெளிப்­ப­டுத்தி பிர­சா­ர­ங்கள் மூல­மாக அவ­ரையும் அவ­ரு­டைய தலை­மை­யி­லான குழு­வி­ன­ரையும் கடு­மை­யாக சாடி வரு­கின்­றனர்.

பிணைமுறி சொற்­போரும் பாராளு­மன்ற சர்ச்­சையும் இருந்த நிலை­யி­லேயே, இரண்டு தேசிய அர­சியல் கட்­சி­களும் இணைந்து அமைத்­துள்ள கூட்டு அர­சாங்கம் பத­வியில் தொடர்ந்து இருக்­குமா என்று பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்பும் அள­வுக்கு நிலை­மைகள் மோச­மா­கி­யி­ருக்­கின்­றன.

கூட்டு அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­ட­போது, அமைச்­சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்­சர்­களின் எண்­ணிக்கை பற்­றிய ஒரு நிர்­ணயம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. சிராணி விஜே­விக்­கி­ரம மற்றும் பிய­சேன கமகே ஆகியோர் ராஜாங்க அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டதன் மூலம் அந்த நிர்­ணயம் மீறப்­பட்­டி­ருக்­கின்­றது என்றும், இதனால் அர­சி­ய­ல­மைப்பின் 46 ஆவது சரத்து மீறப்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் பொது எதி­ர­ணியின் பாராளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன பாராளு­மன்­றத்தில் சுட்­டிக்­காட்டி, அதனை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா என்று சபா­நா­ய­கரை நோக்கி கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

அதே­நேரம் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் டிசம்பர் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் நிறைவு பெற்­றுள்ள நிலையில் அமைச்­ச­ரவை தொடர்ந்து இயங்கி வரு­வது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது அல்­லவா என தினேஷ் குண­வர்­தன வின­வி­யிருந்தார்.

புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் நிறைவு பெற்­ற­தை­ய­டுத்து, புதிய ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளதா என்று எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வா­கிய மக்கள் விடு­தலை முன்­னணியின் தலைவர் அனுரகுமார திசா­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் கேட்­டி­ருந்தார். அப்­போது குறுக்­கிட்டுப் பதி­ல­ளித்த அமைச்சர் லக் ்ஷ்மன் கிரி­யெல்ல, இது கூட்டு அரசின் பிரச்­சினை. எதி­ரணி தலை­யிட வேண்­டி­ய­தில்லை என அதி­ர­டி­யாகப் பதி­ல­ளித்தார்.

ஆனால் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுரகுமார திசா­நா­யக்க விட­வில்லை. இது கூட்டு அரசின் பிரச்­சினை மட்­டு­மல்ல. நாட்டு மக்­க­ளு­டைய பிரச்­சினை. என்ன நடக்­கின்­றது என்­பதை மக்கள் அறிந்­தி­ருக்க வேண்டும். இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான புரிந்துணர்வு ஒப்­பந்தம் நீடிக்­கப்­ப­டுமா, இல்­லையா? அவ்­வாறு ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டி­ருந்தால் அதன் நக­லொன்று சபா­நா­ய­க­ருக்குக் கிடைத்­தி­ருக்க வேண்டும். அவ்­வா­றான நகல் கிடைத்­ததா என சபா­நா­ய­க­ரிடம் வின­வினார். அதற்குப் பதி­ல­ளித்த சபா­நா­யகர் அத்­த­கைய நகல் எதுவும் தனக்கு கிடைக்­க­வில்லை என்றும் அது பற்­றிய தக­வல்கள் எதுவும் கிடைக்­க­வு­மில்­லை ­என தெரிவித்தார்.

கூட்டு அர­சாங்­கத்தின் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் நிறைவு பெற்­றுள்ள நிலையில் அமைச்­சர்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கப்­ப­டுமா என்ற நிதி­யொ­துக்­கீடு சம்­பந்­த­மான தனது சந்­தே­கத்தை வெளிப்­ப­டுத்­தினார். அதற்குப் பதி­ல­ளித்த சபா­நா­யகர் கருஜய­சூ­ரிய இதற்கு பிர­த­மரே பதி­ல­ளிப்பார் எனக்கூறினார்.

அர­சாங்­கத்தின் இருப்பு குறித்தும், அமைச்­ச­ர­வையின் நிலைமை, அமைச்­சர்­க­ளுக்­கான நிதி­யொ­துக்­கீடு பற்­றிய கேள்­விகள் எழுப்­பப்­பட்­ட­தை­ய­டுத்து, பாரா­ளு­மன்­றத்தில் அர­சியல் ரீதி­யா­ன­தொரு பர­ப­ரப்பு ஏற்­பட்­டி­ருந்­தது.

எதி­ர­ணி­யி­னரைப் போல பிணைமுறி விவ­கா­ரத்தில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள வார்த்தை மோதலும், அர­சாங்­கத்தின் இருப்பு குறித்து பாரா­ளு­மன்­றத்தில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­களும், அதனைத் தொடர்­ந்து இடம்­பெற்ற சர்ச்­சை­களும், பர­ப­ரப்­பான சூழலும் மக்கள் மத்­தியில் அர­சாங்­கத்தின் இருப்பு குறித்த சந்­தே­கத்தை அதி­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

தமிழ் அர­சியல் அரங்கில் நடக்­க­வி­ருப்­பது என்­னவோ உள்­ளூராட்சித் தேர்­த­லாக இருந்­தாலும், தேசிய மட்­டத்­தி­லான விட­யங்­களைப் பேசு பொரு­ளாக்கி எதிர்த்­த­ரப்­பி­னரை முடிந்த அளவில் தரம் தாழ்த்திக் காட்­டத்­தக்க வகை­யி­லான பிர­சா­ரங்­களே தேசிய அளவில் இடம்­பெற்று வரு­கின்­றன. வட­கி­ழக்கில் வீட்டுச் சின்­னத்தைத் தேர்தல் சின்­ன­மாகக் கொண்­டுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும், உத­ய­சூ­ரி­யனைத் தேர்தல் சின்­ன­மாகக் கொண்ட தமிழ்த்­தே­சிய விடு­தலைக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான பிர­சாரப் போரும் தேசிய அர­சியல் கட்­சி­களின் பாணி­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்து சென்ற ஈ.பி­.ஆர்.எல்.எவ். கட்­சி­யினர், தமிழ் மக்கள் பேர­வையின் அனு­ச­ர­ணை­யுடன் தமிழ்த்­தே­சிய முன்­ன­ணி­யையும் ஏனைய சிவில் அமைப்­புக்கள், பொது­அ­மைப்­புக்­களை உள்­ள­டக்­கி­ய­தாக மாற்று அணி­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­தது.

ஆயினும் அந்த முயற்சி கைகூ­ட­வில்லை. மாறாக, அந்­தக்­கட்சி, தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணி­யுடன் இணைந்து தமிழ்த்­தே­சிய மக்கள் விடு­தலை முன்­னணி என்ற பெயரில் கூட்டு அமைத்து, உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் உள்­ளூராட்சித் தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்­களைத் தாக்கல் செய்­தி­ருக்­கின்­றது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைத் தனி­யா­னதோர் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்து இறுக்­க­மாக அதனைக் கட்­டி­யெ­ழுப்பத் தவ­றி­யது, அந்தக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் ஜன­நா­யக ரீதியில் முடி­வு­களை மேற்­கொண்டு செயற்­படத் தவ­றி­ய­துடன், கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ர­சுக்­கட்­சியை மக்கள் மத்­தியில் வளர்த்­தெ­டுப்­ப­தற்­காக தன்­னிச்­சை­யாகச் செயற்­ப­டு­வது போன்ற விட­யங்­களில் அதி­ருப்­தியை வெளி­யிட்டு ஈ.பி­.ஆர்.­எல்.எவ். கட்சி கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யே­றி­யது.

கூட்­ட­மைப்பின் ஏனைய இரண்டு பங்­கா­ளிக்­கட்­சி­க­ளா­கிய ரெலோ மற்றும் புளொட் ஆகி­யன தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையின் செயற்­பாட்­டிலும், தலை­மைக்­கட்­சியை வளர்த்­தெ­டுப்­ப­தற்­கான அந்தத் தலை­மையின் முயற்­சி­க­ளிலும் அதி­ருப்­தி­ய­டைந்­துள்ள போதிலும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்து சென்று, இன்­றைய அர­சியல் சூழலில் அதனைப் பல­வீ­னப்­ப­டுத்­தக்­கூ­டாது என்ற கார­ணத்தைக்காட்டி தொடர்ந்து, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­லேயே இணைந்­தி­ருக்­கின்­றன.

ஆனாலும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும் தமிழ்த்­தே­சிய விடு­தலைக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான பிர­சாரப் போர் என்­பது ஒன்­றை­யொன்று சாடு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன. முக்­கி­ய­மாக அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து தமிழ்த்­தேசிய கூட்­ட­மைப்பின் 15 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அல்­லது பெறப்­பட்ட தலா 2 கோடி ரூபா தொடர்­பான சர்ச்சை சூடு பிடித்­தி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்தின் வரவு,– செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்து வாக்­க­ளிப்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட இலஞ்சம் என்று ஈ.பி­.ஆர்­.எல்.­எவ். கட்­சியின் செய­லா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­சக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியிருக்­கின்றார். அதனை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும், பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மாவை சேனா­தி­ராஜா திட்­ட­வட்­ட­மாக மறுத்­து­ரைத்­தி­ருக்­கின்றார்.

இந்த நிதி தொடர்­பான தக­வலை பாராளு­மன்ற உறுப்­பினர் முதலில் வெளி­யிட்­ட­போது எவரும் அது குறித்து வாய் திறக்­க­வில்லை. அவ்­வாறு லஞ்­ச­மாகப் பெறப்­ப­ட­வில்லை என்று மறுத்­து­ரைக்­கப்­பட்­டது.

அதன் பின்னர் படிப்­ப­டி­யாக சிலர் அந்த நிதி தங்­க­ளுக்குக் கிடைத்­தது என்­பதை ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். விசே­ட­மாக பாராளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா, அந்த நிதி என்ன வேலைத்­திட்­டங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது தொடர்­பி­லான விப­ரங்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். விசேட நிதி விசேட திட்­ட­மாக்­கி­யி­ருக்­க­லாமே….

வரவு, செலவுத் திட்டம் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒரு தொகை­யினர் அதற்கு ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை என தெரி­வித்­தி­ருந்­தனர். பின்னர் இந்த 2 கோடி ரூபா அவர்­க­ளுக்கு ஒதுக்கப்­பட்­டதன் பின்­னரே அவர்கள் வர­வு – செ­லவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தார்கள் என்று கூறப்­ப­டு­கின்­றது.

அர­சாங்­கத்­தினால் விசே­ட­மாக அபி­வி­ருத்­திக்­கா­கவே 2 கோடி ரூபா வழங்­கப்­பட்­டது என்றால், அந்த விசேட நிதியை மக்­க­ளு­டைய எரியும் பிரச்­சி­னை­க­ளாக உள்ள விசேட தேவை­க­ளுக்­கான வேலைத்­திட்­டங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம்.

அன்­றாடப் பிரச்சி­னை­க­ளாக வாழ்­வா­தா­ரத்­திற்­கான உத­விகள், தொழில்­வாய்ப்­புக்­கான தேவைகள் போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய பொரு­ளா­தாரத் தேவைகள் பல மக்­க­ளுக்கு இருக்­கின்­றன. அவற்றைப் பூர்த்தி செய்­வ­தற்­கான பெரிய அள­வி­லான வேலைத்­திட்­டங்கள் எதுவும் போர்ப்­பி­ர­தே­சங்­களை முழு­மை­யாக உள்­ள­டக்­கிய வகையில் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் இந்த விசேட நிதி வழங்­கப்­பட்­டது என்­ப­தை­யும்­விட வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கே அது அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­டது. எனவே கூட்­ட­மைப்பின் அனைத்து பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அதனைக் கிடைக்கச் செய்து அந்த நிதியை ஒட்­டு­மொத்­த­மாக ஒரு விசேட தேவையைப் பூர்த்தி செய்­வ­தற்­காக, பொரு­ளா­தார அபி­வி­ரு­த்­தியை நோக்­க­மாகக் கொண்ட ஒரு பொது வேலைத்­திட்­டத்தில் பயன்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும்.

பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி வளத்தின் ஊடா­கவே இந்த விசேட நிதி வழங்­கப்­பட்­டி­ருந்­தா­லும்­கூட, அதனை வழ­மை­யான பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதிச் செயற்­பா­டு­க­ளுக்­கான தேவை­க­ளுக்­காகப் பய­ன்படுத்­தாமல் விசேட திட்­டத்­திற்குப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும்.

அது தேவைகள் மிகுந்த மக்­க­ளு­டைய கஷ்டங்­களைப் போக்­கு­வ­துடன் கூட்­ட­மைப்பின் மீதான நன்­ம­திப்­பையும் உயர்த்­து­வ­தற்கு வாய்ப்­ப­ளித்­தி­ருக்கும்.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் நலன்­க­ளையும் தேவை­க­ளையும் பூர்த்தி செய்­கின்ற விட­யமே மக்கள் பிர­தி­நி­தி­களின் மனங்­களில் முதன்மை பெற்­றி­ருந்தால், இந்த விசேட நிதி கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் எல்­லோ­ருக்கும் கிடைக்­கத்­தக்க வாய்ப்பு ஏற்­பட்­டி­ருக்கும். வரவு –செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்த பிர­தி­நி­தி­க­ளுக்கு மாத்­தி­ரமே இந்த நிதி கிட்­டி­யி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

வரவு –செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கா­த­வர்­க­ளுக்கு குறிப்­பாக, தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் முரண்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்­த­னுக்கு அந்த நிதி கிடைக்­க­வில்லை. அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக மக்கள் பிர­தி­நி­தி­க­ளா­கிய தனி மனி­தர்­களை முதன்­மைப்­ப­டுத்­தாமல் அவ­ருக்குப் பின்னால், குறிப்­பாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பின்னால் அணி­தி­ரண்­டுள்ள பாதிக்­கப்­பட்ட மக்­களை மன­திற்­கொண்டு அவ­ரையும் உள்­ள­டக்கி அந்த அரச நிதி பெறப்­பட்டு மக்­க­ளு­டைய தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த நிதி ரொக்­கப்­ப­ண­மாக பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. லஞ்­ச­மா­கவும் வழங்­கப்­ப­ட­வில்லை என்றே விளக்­க­ம­ளிக்­கப்­ப­டு­கின்­றது.

வேட்­பா­ளர்­களின் களமா, தலை­வர்கள் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்­கான களமா?

இந்த நிலையில் ஆளா­ளுக்குக் குறை­களைக் கூறி, கட்­சி­களைத் தரந்­தாழ்த்­து­கின்ற பரப்­பு­ரைகள் இடம்­பெற்று வரு­வ­தையே காண முடி­கின்­றது. தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்பின் தலை­மைக்­கட்­சி­யா­கிய தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செயற்­பா­டு­களை குத்­திக்­காட்டி விமர்­சனம் செய்­வதன் மூலம் அவற்றைப் பொது­மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்தி அந்தக் கட்­சியைத் தேர்­தலில் பல­வீ­னப்­ப­டுத்­து­வதே ஈ.பி­.ஆர்.­எல்.எவ். கட்­சியின் நோக்­க­மாகத் தோன்­று­கின்­றது.

அந்தப் பிர­சா­ரத்­திற்குப் பதி­லடி கொடுக்கும் வகையில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யி­னரும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரும் ஈ.பி­.ஆர்­.எல்.எவ். கட்­சியின் செயற்­பா­டுகள் கடந்த கால நட­வ­டிக்­கை­களை நினை­வு­ப­டுத்தி குத்­திக்­காட்டி பதி­லடி கொடுத்து அந்தக் கட்சி சார்ந்த அணியை தேர்­தலில் பின்­ன­டையச் செய்யும் நோக்­கத்தில் பரப்­புரை செய்து வரு­கின்­றனர்.

இந்தத் தேர்தல் பரப்­புரை செயற்­பாட்டில் மூன்­றா­வது அணி­யாக தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் தலை­மை­யி­லான அணியும் களத்தில் இறங்­கி­யி­ருக்­கின்­றது.

தமிழ் மக்­களின் வாக்­கு­களை வேட்­டை­யா­டு­வ­தற்­காக இந்த அணிகள் மேற்­கொண்டு வரு­கின்ற இந்தப் பிர­சாரப் போரா­னது, மக்­களை கசப்­ப­டை­யவே செய்­தி­ருக்­கின்­றது. தேர்தல் பிர­சா­ரங்­களின் மூலம் மறைக்­கப்­பட்ட உண்­மைகள் இர­க­சி­ய­ங்கள் வெளி­வ­ரு­வது மக்­க­ளுக்குப் பொது­வாக நன்­மை­ய­ளிக்­கத்­தக்­க­வை­யாக இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஆனால், ஆளா­ளுக்கு அர­சியல் சேற­டிக்கும் பாங்கில் செய்­யப்­ப­டு­கின்ற பிர­சா­ரங்கள் மக்­களை வெறுப்­ப­டை­யவே செய்யும் என்­பதைக் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும்.

நடை­பெற இருப்­பது உள்­ளூ­ராட்சித் தேர்தல். அந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர்­க­ளு­டைய கருத்­துக்­க­ளுக்குக் களம் அமைத்துக் கொடுப்­ப­தற்குப் பதி­லாக இரு தரப்­புக்­களின் தலை­வர்கள், முக்­கி­யஸ்­தர்கள் தங்­க­ளு­டைய செயல் வல்­ல­மை­க­ளையும், வீரப்­பி­ர­தா­பங்­க­ளையும் மக்­க­ளிடம் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான கள­மாக இந்தத் தேர்தல் பிர­சாரத் தளத்தைப் பயன்­ப­டுத்­து­கின்ற போக்­கையே காண முடி­கின்­றது.

தேசிய பிரச்­சி­னைகள் குறித்து பேசப்பட வேண்டியது அவசியம். மறுப்பதற்கில்லை. அதேபோன்று மறைக்கப்பட்ட உண்மைகள், ஒளிக்கப்பட்ட இரகசியங்கள் என்பவற்றை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியதும் அவசியம் என்பதும் ஏற்புடையதே. ஆயினும் தேர்தல் களத்தின் தன்மை, தேர்தலில் தெரிவு செய்யப்பட வேண்டிய பிரதிநிதிகளின் செயற்திறன்கள், அவரைப் பற்றிய விபரங்கள் என்பவற்றை மக்கள் அறிந்துகொண்டால்தான் சிறந்த பிரதிநிதிகளை அவர்களால் தெரிவு செய்ய முடியும்.

இந்தத் தேர்தலின் கதாநாயகர்கள், கதாநாயகிகளான வேட்பாளர்களைப் புறந்தள்ளிவிட்டு, கட்சிகளின் முக்கியஸ்தர்களும் தலைவர்களும் இந்தக் களத்தை ஆக்கிரமித்திருப்பது மக்களை எந்த அளவுக்குத் தெளிவுபடுத்தி சரியான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யத் தூண்டும் என்பது தெரியவில்லை.

இது தொகுதி முறையும் விகிதாசார முறையும் கலந்ததொரு தேர்தலாகும். இதில் முன்னிலை பெறுவதும், வாக்களிப்பதற்காக முதலில் அடையாளப்படுத்தப்படுவதும் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சியாகவே இருக்கும். எனவே, இது கட்சியைத் தெரிவு செய்கின்ற ஒரு தேர்தலாக இருந்தாலும், மக்கள் என்னவோ தங்களுடைய அடிப்படைத் தேவைகளை நேர்மையான சரியான வழியில் பாகுபாடின்றி பூர்த்தி செய்து சேவையாற்றக் கூடிய பிரதிநிதிகளையே தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது.

கட்சியிலும் பார்க்க சிறந்த சேவையாற்றத்தக்க பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதன் ஊடாகவே மக்கள் நன்மைகளைப் பெற முடியும். அரசியல் கட்சிகளின் ஊடாக நன்மை பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றே கூற வேண்டும். எனவே தேர்தல் பரப்புரைகளின்போது வேட்பாளர்களை முதன்மைப்படுத்தி, அவர்களால் மக்களுக்கு ஆற்றக்கூடிய, ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த பிரசாரங்களை முன்னெடுப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும்.

உள்ளூராட்சி சபைகளில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களே பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவார்கள் என்றாலும், அவர்கள் அங்கு அரசியல் கட்சி அடையாளங்களைக் கடந்து பொதுச்சேவைகளை முதன்மைப்படுத்திச் செயற்படுகின்ற சூழலே அங்கு காணப்படுகின்றது. இதனை மனதில் கொண்ட பிரசார நடவடிக்கைகளே மக்கள் மத்தியில் செல்வாக்கையும் ஆதரவையும் பெறுவதற்கு உந்து சக்தியாக இருக்கும்.

பி.மாணிக்­க­வா­சகம்