பல்லவர் காலத்து ஓவியங்களா, பாண்டியர் காலத்து ஓவியங்களா? சித்தன்னவாசல் ஓவியங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், பெரிய சுற்றுலாத்தலமோ, பொழுதுபோக்கு அம்சமோ கிடையாது. ஆனாலும் வரலாறுகளை தனக்குள் புதைத்துக்கொண்டு கடந்த காலத்தின் சாட்சியாக கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அதில் முதன்மையாக இருப்பது சித்தன்னவாசல்.

புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்குச் செல்லும்  சாலையில், 16 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது சித்தன்னவாசல். இதற்கு, ‘தென்னிந்தியாவின் அஜந்தா குகை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அன்னவாசல் என்ற ஊருக்கு முன்னதாக உள்ளது இந்த ஊர். குடைவரைக் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு, நாம் பேருந்தைவிட்டு இறங்கி 2 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். சிரமம் பார்க்காமல் நடந்துசென்றால், இரண்டாயிரத்துக்கும் முற்பட்ட காலத்தின் சமூகப் பதிவுகளை  ஓவியங்களாகவும் குடைவரைக் கலைகளாகவும் தனக்குள் பொத்திவைத்திருப்பதை ரசிக்கலாம்.

சித்தன்னவாசல்

“அன்னவாயில் என்பது  மருவி `அன்னவாசல்’ என்று அழைக்கப்படுகிறது. அன்னவாசலின் முற்பகுதிதான் சித்தன்னவாசல். `சித்தானம் வாசஹ்’ என்னும் வடமொழி சொற்களிலிருந்து இந்தப் பெயர் வந்தது” என்கின்றனர் தொல்பொருள் ஆய்வாளர்கள். இதற்கு `துறவிகள் இருப்பிடம்’ எனப் பொருள். சித்தன்னவாசல் ஓவியங்கள், ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.600 – 630) சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மனால் வரையப்பட்டவை எனச் சொல்லப்படுகிறது.

பல்லவர் காலத்துக்கு முன்னர் கோயில்கள் செங்கற்களாலும், மரத்தாலும், மண்ணாலும், உலோகங்களாலும் கட்டப்பட்டுவந்தன. குகைக்கோயில்களையும் – குடவரைக் கோயில்களையும் தமிழகத்தில் முதன்முதலில் கட்டியவர் மகேந்திரவர்மன்தான். இவர் சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாறியவர். சித்தன்னவாசல் சமண மத மையமாக இருந்ததை, இங்கு உள்ள கல்வெட்டுகளும் இந்த ஊரைச் சுற்றியுள்ள பழைமையான சமணச் சின்னங்களும் வெளிப்படுத்துகின்றன.

மலையின் மேல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மலை மேல் ஏறி கிழக்குப் பக்கமாக வந்தால், புகழ்பெற்ற சமணர் படுக்கைகளைக் காணலாம். மொத்தம் ஏழு படுக்கைகள் இருக்கின்றன. தலை வைத்துக்கொள்ள தலையணைபோல் மேடாகச் செதுக்கிவைத்துள்ளனர். இயற்கையில் அமைந்த தாழ்வாரம் மாதிரி உள்ளது குகை. பாறையில் ஆறு அங்குல ஆழத்துக்கு வழவழப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் படுக்கைகளில்தான் சமண முனிவர்கள் படுத்து உறங்கினார்களாம். பாறை படுக்கைகளில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் மொழி கல்வெட்டு உள்ளது. கி.பி. 8-9ம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சமணத் துறவிகளின் பெயர்களும் அதில் உள்ளன. இந்தப் பகுதி `ஏழடிப்பட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

சித்தன்னவாசல்

கி.பி.10-ம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் இந்தக் குகையில் தங்கியிருக்க வேண்டும் என்பதற்கு, இங்கு உள்ள கல்வெட்டுகளே ஆதாரம். கோயிலுக்குச் செல்லும் பிரிவு சாலையின் கிழக்குப் பகுதியில் அந்தக் காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பதற்குப் பயன்படுத்திய கல்லறைகளும் – முதுமக்கள்தாழியும் காணப்படுகின்றன. ஆடல் – பாடல் – நாடகம் – ஓவியம் – சிற்பம் போன்ற கலைகள் பல்லவர் காலத்தில் சிறப்பு பெற்றிருந்தன.

மன்னன் குணபரன் (முதலாம் மகேந்திரவர்மன்), ஓவியத்திலும் சிற்பக்கலையிலும் ஈடுபாடுகொண்டிருந்தார். `சித்திரகாரப்புலி’ என்னும் பெயரும் இவருக்கு உண்டு. `தட்சிண சித்திரம்’ என்னும் ஓவிய நூலுக்கு இவர் உரை எழுதியிருப்பது வரலாறு. குகையின் மேல்புறத்தில் உள்ள ஓவியங்கள் உருவத்திலும் நிறத்திலும்  உலகப் புகழ்பெற்றவை. அதிலும் மூன்று ஓவியத் தொகுதிகள்தாம் மிகச் சிறப்பானவை. அரசன், அரசியின் முன்னால் நடனமாடும் பெண்களை இந்த ஓவியங்கள் சித்திரிக்கின்றன.

மன்னன் தலையில் சிறந்த வேலைப்பாடுகள்கொண்ட மணிகள் பதிக்கப்பட்ட மணிமகுடமும், அவரது கழுத்தில் மணிகள் பதித்த மாலைகளும் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் தொங்குகின்றன. ராணியின் தலையில்  மணிமகுடம்  அழகாக வரையப்பட்டுள்ளது. காதுகளில் வளையங்கள் காணப்படுகின்றன. `இருவரும் மகேந்திரவர்மனும் அவருடைய மனைவியும்’ என்று ஒரு சாரார் கூறுகின்றனர். `இல்லை இல்லை. அதில் இருப்பது, ஸ்ரீவல்லப பாண்டியனும் அவர் மனைவியும்தான்’  என்று இன்னொரு சாரார் வலியுறுத்துகின்றனர்.

பண்டையகால தமிழகம், ஓவியக் கலையிலும் நடனக் கலையிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடைந்திருந்த சிறப்பை இந்த ஓவியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஓவியங்களைக் கண்ட அப்பர் சுவாமிகள் ‘கைந்நின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே’ எனப் பாடியுள்ளார்.

9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் இந்தக் குகை செப்பனிடப்பட்டது. இளங்கௌதமனார் என்னும் சமணத் துறவி அவறீபசேகரன் ஸ்ரீவல்லப பாண்டியனுடைய உதவியைப் பெற்று இந்தக் குடவரைக் கோயிலை (கி.பி.815 – 862) புதுப்பித்திருக்கிறார். “சித்தன்னவாசல் ஓவியங்கள், பல்லவர் காலத்து ஓவியங்கள்” என்று வரலாற்று ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறிவந்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுகளிலிருந்து அந்த ஓவியங்கள் பாண்டியர் காலத்தவை என்று தெரியவந்துள்ளது. மேல் விதானத்தில் உள்ள ஓவியம் ஒரு தாமரைக்குளத்தைக் காட்டுகிறது. அதில் தாமரை மலர்களும் மலராத மொட்டுகளும் சிவன் பக்தர்களாகிய சமணப் பெரியோர்களும் காட்சியளிக்கின்றனர்.

சித்தன்னவாசல்

இடதுபக்கத் தூணில் நடன மங்கையின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவரது இடதுகைகள் பெருமிதத்துடன் மார்புகளின் குறுக்கே நீட்டிக்கொண்டிருக்கின்றன. வலக்கையில் உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்கின்றன.  இடக்கையில் விரல்கள் அழிந்து காணப்படுகின்றன. வலதுபக்கத் தூணில் நடன மங்கை தனது இடது கையைத் துதிக்கைபோல் வளைத்திருக்கிறாள். இவளது முகம் சோகமாக இருக்கிறது. மேலும், இந்த ஓவியத்தில் பறவைகள், மீன்கள், எருமை மாடுகள், யானை என பல உயிர்களும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.

இரு சமணர்கள் கைகளால் தாமரை மலர்களைப் பிடித்துக்கொண்டு குளத்தின் அழகை ரசிப்பது போன்று ஓர் ஓவியமும் நம்மை ஈர்க்கிறது. நடுமண்டபத்தை அடுத்து இருப்பது கோயில். வலப்பக்கமும் இடப்பக்கமும் சமண தீர்த்தங்கர் சிலையும், சமணத் தலைவர் சிலையும் உள்ளன. சுவர் ஓவியங்கள் இடைக்காலத்தில் வெளியே தெரியாமல் மறைந்திருந்தன. 1919-ம் ஆண்டில் இதை கண்ட டி.ஏ.கோபிநாத ராயர் என்பவர், புதுச்சேரியில் வாழ்ந்த பிரெஞ்சுக்காரரான முயோ தூப்ராய் என்பவருக்குத் தெரிவித்தார். இவர் பல்லவர்கால கலை மற்றும் வரலாற்றை ஆய்வு செய்துவந்தார். அவர் சித்தன்னவாசலுக்கு வந்து, சுவர் ஓவியங்களின் பெருமையை உலகுக்குத் தெரிவித்தார். சித்தன்னவாசல், இப்போது சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துவருகின்றனர்.

சித்தன்னவாசல்

2 1/2 ஏக்கர் நிலத்தில் 10 அடி ஆழம் உள்ள செயற்கைக்குளம் ஒன்று உருவாக்கப்பட்டு, படகுக் குழாமாக மாற்றப்பட்டுள்ளது. சிறுவர் பூங்கா, தமிழன்னை சிலை, மகாவீரர் சிலை ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஊருக்கு கோடை விடுமுறையின்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் வருகின்றனர். தவிர, மண்ணின் பெருமையை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் பல சமூகச் செயற்பாட்டாளர் குழுக்கள் இங்கு வருகின்றன. நாமும்கூட ஒருமுறை அவசியம் காணவேண்டிய சித்திரங்கள் பேசும் அற்புதமான இடம், இந்தச் சித்தன்னவாசல்.