பெண்கள் சுமங்கலியாக இருக்க……….

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று வரும் கருட பஞ்சமி விரதத்தை சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து 10 ஆண்டுகள் விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்.

கருட பஞ்சமி விரதம் இருப்பது எப்படி?
கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும், ஆவணி மாதம் வளர்பிறையில் பஞ்சமி அன்று அமிர்தத்தைக் கொண்டு வந்ததாலும், அன்றைய தினம் ‘கருட பஞ்சமி’ ஆனது.

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள் கொண்ட கோலங்கள் போட வேண்டும்.

நடுவில் ஒரு பலகை போட்டு அதன் மேல் வாழை இலையை விரித்து பச்சரிசியை கொட்டி வைத்து நமது சக்திக்கு ஏற்றப்படி வெள்ளி, தாமிரம் அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் உருவம் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும்.

பாம்பின் படத்தின் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கௌரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பத்து முடியுள்ள நோன்பு கயிற்றை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி, சகல விதமான செல்வங்களையும் அடைவர். இந்த பூஜை செய்வதால் நாகதோஷம் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.