இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பில் நேற்றையதினம் தமிழக சட்ட மன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது முன்னெடுத்த வேலைத்திட்டங்களை, தற்போதைய எதிர்ட்சித் தலைவர் எம்.கே.ஸ்டாலின் நேற்றைய அமர்வில் பட்டியலிட்டார்.
இதன்போது எழுந்த மீன்பிடித்துறை மாநில அமைச்சர் டி.ஜெயகுமார், இலங்கையில் ஆயிரக் கணக்கான மக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டமையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியா? என்று கேள்வி எழுப்பினார்.
இதனை அடுத்து ஸ்டாலினும், திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் எழுந்து கூச்சல் எழுப்பினர்.
முன்னைய முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எதிராகவும், தமிழ் தேசியத்துக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுத்ததாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதன்போது, ஜெயலலிதா தீவிரவாதத்துக்கு எதிராக செயற்பட்டார் என்று, மாநில மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி குறிப்பிட்டார்.