திருகோணமலை, திருக்கோணேஸ்வரம் ஆலயம் இந்து பக்தர்களுடைய ஆசியாவின் கேந்திர நிலையமாக ஸ்தாபிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உறுதியளித்துள்ளார்.
திருகோணமலை, கோணேஸ்வரா ஆலயத்தின் நிர்வாக சபையின் அழைப்பின்பேரில் நேற்றைய தினம் விசேட பூஜையில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் இங்கிருந்து மத அனுஸ்டானங்கள், விசேட வழிபாடுகள், திருவிழாக்கள் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்கு விசேட ஒழுங்குகளை செய்து தருவதாகவும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
மேலும், இந்து பக்தர்களின் நலன் கருதிய திட்டங்களை முன்னெடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது சுற்றுலா அபிவிருத்தி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆசியாவில் இந்துக்களின் கேந்திர நிலையமாக மாற்றுவதன் ஊடாக தாய்வான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் மேலும் ஐரோப்பியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது மத அனுஸ்டானங்களை மேற்கொண்டு தங்கி நின்று சுதந்திரமாக நாட்களை கழித்து விட்டு செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உன்னதமான சமூக நல்லிணக்கத்திற்கு, அடித்தளமாக மாறுவதற்கும் இதனூடாக அதிக வாய்ப்புக்கள் கிட்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.