திடீரென முளைத்தெழுந்த சிவலிங்கம்!

யாழ், பொன்னாலையில் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று திடீரென முளைத்துள்ளது. ஈழத்துச் சிதம்பரம் என வர்ணிக்கப்படும் காரைநகர் சிவன் கோயிலின் தேர்த் திருவிழாவான நேற்றுக் காலையில் சிவலிங்கம் தோன்றியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.வீதியால் சென்றவர்கள் சிவலிங்கத்தைக் கண்டு இறங்கிச் சென்று வழிபட ஆரம்பித்தனர்.பொன்னாலைச் சந்திக்கு அருகாமையில் வெட்டவெளியில் இந்தச் சிவலிங்கம் தோன்றியுள்ளது. சுமார் நான்கரை அடி உயரமானது இந்தச் சிவலிங்கம். இரவோடு இரவாக வாகனத்தில் கொண்டு வரப்பட்டு அது அங்கு வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.குடிநீர் வினியோகத்துக்காகப் பொன்னாலை வீதியின் கரையே குழாய்கள் தாழ்க்கப்பட்டு வருகின்றன. குழாய் தாழ்க்கப்படுவதற்காக வெட்டப்பட்டு குழியிலிருந்து எடுக்கப்பட்ட கற்கள், மணல் என்பவற்றை அள்ளி ஓர் இடத்தில் குவித்து விட்டு அதன் மேல் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது.நேற்று, ஆங்கில புத்தாண்டு தினமாகும், ஈழத்துச் சிதம்பரம் என்று வர்ணிக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் தேர்த் திருவிழாவும் நேற்று இடம்பெற்றது. இதனால் அதிகமான பக்தர்கள் அந்த வீதியால் சிதம்பரத்துக்குச் சென்றனர்.திடீரென முளைத்திருந்த சிவலிங்கத்தை ஆச்சரியத்துடன் பார்தது மட்டுமன்றி இறங்கி வணங்கியும் சென்றனர்.வடக்கில், புதுவிதமாக வெட்டவெளியில் காட்டு வெயிலுக்குள் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று அங்கு வந்த சிலர் பேசிக் கொண்டனர்.