புளொட்டுக்கு சிவராம் கொலையுடன் எந்தத் தொடர்புமில்லை!

ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் புளொட் அமைப்பிற்கு எந்தத் தொடர்புமில்லை என அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

siththarthan-720x480மேலும் அதனை நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டதாகவும் சில அச்சு ஊடகங்களே தமது கட்சியை இலக்குவைத்து  தவறான செய்தியை வெளியிட்டுவருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடமே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் எமது கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவர் நீதிமன்றால் முற்று முழுதாக விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்கையில் சிவராம் கொலையுடன் தொடர்புடையவர் எவ்வாறு தேர்தலில் நிற்கிறார் எனத் தெரிவிக்க முடியும்? அத்துடன், புளொட் உறுப்பினர் யார் என்றும் சொல்லப்படவில்லை. தற்போது எமது கட்சி மீது அவதூறைப் பரப்பும் நோக்குடன் சில அச்சு ஊடகங்களால் உண்மைக்கு மாறாகச் செய்தி வெளியிடப்படுகிறது” என்றார்.