எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாதெனில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என கூட்டெதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டை சீர்குலைத்ததை போன்று கிராமத்தையும் சீர்குலைக்கத் தருமாறு தற்போது கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
மகிந்த ராஜபக்சவிற்கு மீண்டும் ஒரு முறை தேர்தலில் போட்டியிட முடியாது என இவர்கள் சந்தோசமாக கூறுகின்றனர்.
மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இவர்கள் முட்டுக்கட்டை இடுவார்களாயின் யுத்தத்தை வெற்றிக்கொள்ள உந்துசக்தியாக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் முன்னிறுத்தப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு கோத்தபாய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த மற்றும் கோத்தபாய யுகம் ஒன்று இந்த நாட்டில் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







