தினகரனுக்கு எதிராக சசிகலா? குடும்பத்திற்குள் குமுறல்..

தினகரனின் தூதை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி… இனி கச்சேரி ஆரம்பம்…

சென்னை: இருபது வினாடி வீடியோவை வைத்துக் கொண்டு அரசியல் ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் தினகரனும் இளவரசி குடும்பமும். இந்த மோதலை வெகுவாக ரசிக்கத் தொடங்கியிருக்கின்றனர் ஆளும்கட்சியினர்.

1487132897-1234‘தினகரனின் துரோகம் குறித்து சசிகலா விரைவில் அறிக்கை வெளியிடுவார்’ என கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வரும்போதெல்லாம் உற்சாகமாகப் பேட்டியளிப்பார் தினகரன். அந்த உற்சாகம் அன்று அவரிடம் தென்படவில்லை.

சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு

செய்தியாளர்களிடம் பேசும்போதும், ‘ இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். தற்போது அவர் மௌன விரதம் இருக்கிறார். ஜெயலலிதா நினைவுநாள் தொடங்கி அவர் மௌன விரதம் இருந்துவருகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் எங்களை ஆதரித்துள்ளனர். தொண்டர்களும், மக்களும் தற்போது நடைபெறும் ஆட்சியைப் புறக்கணித்துள்ளனர். கட்சியிலிருந்து எங்களை நீக்க அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுச்செயலாளருக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கிறது.

கிருஷ்ணபிரியா ஹேப்பி

மக்களால், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பதவி அதிகாரத்தால் ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் இந்த அரசு தானே கவிழ்ந்துவிடும்’ எனப் பேட்டியளித்தார். அதேநேரம், சிறைக்குள் நடந்த விஷயங்களை தீவிரமாக அலசத் தொடங்கியுள்ளனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். இந்த மௌன விரத தகவலைக் கேட்டு பலமாக சிரித்திருக்கிறார் கிருஷ்ணபிரியா.

மவுன விரதம் தெரியாதாமா?

‘சசிகலா மௌனவிரதம் இருப்பதைப் பற்றித் தெரியாமலா தினகரன் சிறைக்குச் சென்றார். அவரிடம் பேசும் மனநிலையிலேயே சசிகலா இல்லை’ எனக் கூறியிருக்கிறார். தினகரன் குறித்து கிருஷ்ணபிரியா தெரிவிக்கும் கருத்துக்களை விவேக் தரப்பினர் விரும்புவதில்லை. ‘ எதிர்மறையான கருத்துக்களைக் கூறிக் கொண்டிருப்பதால் நமக்குத்தான் நஷ்டம். மக்கள் மத்தியில் நம் குடும்பத்தின் மோதல்தான் பெரிதாகத் தென்படும். சில காலம் அமைதியாக இரு’ என கிருஷ்ணபிரியாவுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

பட்டியலிட்ட தினகரன்

” குடும்ப உறுப்பினர்களின் பேட்டி, எதிர்ப்பேட்டிகளைப் பற்றியும் குறைகூறியிருக்கிறார் தினகரன். ‘ நான் ஒன்றைக் கூறினால் அதற்கு எதிராக வேறு ஒரு கருத்தைக் கூறுகிறார்கள். ஐ.டி ரெய்டில் உள்நோக்கம் இருக்கிறது’ என்றால், ‘ உள்நோக்கம் எதுவும் இல்லை’ என்கிறார். கிருஷ்ணாவின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போய் கொண்டிருக்கிறது. கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தலுக்கு முதல்நாள் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டார். அந்தநேரத்தில் ஜெயானந்தின் செயல்பாடுகள்தான் எனக்கு ஆறுதலாக இருந்தது’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

விவேக்கிற்கு எதிராக கூட்டணி

“அவர் கூறிய கருத்துக்களுக்கு எந்தவித விளைவையும் சசிகலா காட்டவில்லை” என விவரித்த இளவரசி தரப்பு பிரமுகர் ஒருவர், ” ஆரம்பகாலத்தில் இருந்தே திவாகரன் குடும்பத்தோடு முரண்பட்டுக் கொண்டிருந்தார் தினகரன். சசிகலாவின் அண்ணி சந்தானலட்சுமியின் மறைவின்போதுதான் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். அதன்பிறகும் மறைமுக யுத்தம் இருந்து வந்தாலும், ஜெயானந்தை ஒதுக்கியே வைத்திருந்தார் தினகரன். ‘ என்னைப் புரிந்து கொண்டது அவன் மட்டும்தான்’ எனப் பேசத் தொடங்கியிருக்கிறார். விவேக்குக்கு எதிராக இவர்கள் இருவரும் ஒன்றுகூடிவிட்டதை உணர முடிகிறது” என்றார்.

ஆளும் தரப்பு குஷி

அதேநேரம், சசிகலா குடும்பத்துக்குள்ளேயே கிளம்பும் எதிர்ப்புகளை தங்களுக்கு சாதகமாகப் பார்க்கின்றனர் ஆளும்கட்சியினர். இதுகுறித்து நிர்வாகிகளிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘ தினகரனின் துரோகத்தை எல்லாம் சசிகலா தாமதமாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறார். வீடியோவை வெளியிட்டு கடைசிநேர நிலவரத்தை மாற்றிவிட்டார். இதுவே சசிகலாவுக்கு செய்த துரோகம்தான்.

இதுவரையில் தினகரனால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் யாரையும் பலி கொடுக்கத் தயங்க மாட்டார். அவரது துரோகத்தைக் கண்டித்து விரைவில் சசிகலாவிடம் இருந்து அறிக்கை வரும் பாருங்கள்’ என சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார். குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் மோதல்களின் எதிரொலியாக தினகரனை அவர்களே கவனித்துக் கொள்வார்கள் எனவும் ஆளும்கட்சியினர் நம்புகிறார்கள்.