இரண்டு நாட்களாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா செய்துள்ளது அம்மாநில அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா மாநிலத்தில் முதலமைச்சர் முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர் மற்றும் ஐக்கிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இரு சுயேச்சைகள் என மொத்தம் 8 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
ராஜினாமா செய்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 4 பேர் முன்பு மந்திரிசபையில் இடம்பெற்று இருந்தார்கள்.
அவர்களை முதல்வர் முகுல் சங்மா சமீபத்தில் பதவி நீக்கம் செய்தார். பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் கோன்ராட் கே.சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சியில் இணையப்போவதாக அறிவித்து உள்ளனர்.
தற்போது, தேசிய மக்கள் கட்சி பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியாக செயல்பட்டு வருகிறது.
ஆளும் அரசில் 8 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள போதிலும், இன்னும் சட்டசபையில் 9 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் காங்கிரஸ் பக்கம் உள்ளது.
இதனால் ஆட்சி அமைக்க தேவையான அரசின் பெரும்பாண்மை பலம் 33 ஆக உள்ளதால், அரசுக்கு உடனடியாக ஆபத்து எதுவும் இல்லை.
மேகாலயா சட்டசபையில் மொத்தம் 60 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவி காலம் வருகிற மார்ச் மாதம் 6–ந் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், அங்கு அரசுக்கு ஆதரவாக இருந்து வந்த 8 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து இருப்பது அரசியலில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.