கடற்படை அடியோடு மறுப்பு! தமிழக மீனவர்களை நாம் சுடவில்லை!

தமிழக மீனவர்கள் மீது தாம் துப்பாக்கி சூடு நடத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா கடற்படையினர் நிராகரித்துள்ளனர். கச்சதீவு மற்றும் நெடுந்தீவு கடற்பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தம்மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், ஸ்ரீலங்கா கடற்படையினர் அது தொடர்பான தமது மறுப்பை வெளியிட்டுள்ளனர்.

201711280948172114_Sri-Lankan-government-likely-to-release-116-TN-fishermen-on_SECVPFஇலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிக்கின்றார்கள் எனவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் வட பகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டிவருகின்றனர். இவ்வாறான சூழலில் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்காவின் கடற்றொழில் அமைச்சும் ஸ்ரீலங்கா கடற்படையும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இதன்கீழ் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்தகாலங்களில் பல மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களின் மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யபபட்டிருந்தன.

இந்த நிலையில் கச்சதீவு மற்றும் நெடுந்தீவு கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தம்மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இதனால் 100 ற்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடிச் சாதனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தமிழக மீனவர்கள் கூறியிருந்தனர். எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள ஸ்ரீலங்கா கடற்படையினர் ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 தமிழக மீனவர்களை கைதுசெய்துள்ளதாக கூறியுள்ளனர்.

தமிழக மீனவர்களின் 5 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீரியல்வளத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலக அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.