சென்னை:
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் உள்ள இந்த அலுவலகத்தில் நீதிபதி முன்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள்.
தீபா கணவர் மாதவன், தி.மு.க. வக்கீல் சரவணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல மருத்துவ கல்வி முன்னாள் இயக்குனர் நிர்மலா, ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி டீன் நாராயணபாபு ஆகிய இருவரும் கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று நீரிழிவு நிபுணர் தர்மராஜ் மற்றும் ஜெயலலிதா மரண படுக்கையில் இருந்தபோது கைரேகை வாங்கிய டாக்டர் பாலாஜி ஆகிய இருவரும் இன்று ஆஜரானார்கள். நீரிழிவு நோய் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு டாக்டர் தர்மராஜ் விளக்கம் அளித்தார்.
அதுபோல கைரேகை குறித்து டாக்டர் பாலாஜியிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதுவரையில் அரசு டாக்டர்கள் 8 பேரிடமும் தனிநபர் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.