அண்மையில், மட்டக்களப்பு நாவலடிப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் பிடிபட்டதோடு, பெருமளவு பாம்புகளும் கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது.
அவ்வாறு பிடிக்கப்பட்டவை மற்றும் கரையொதுங்கியவை ஒருவகை மீன் இனமே. இவை பாம்புகள் அல்ல என்று மட்டகளப்பு அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.சி.எஸ்.மொஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கடற்கரையோரபகுதிகளில் மீனவர்களால் பிடிக்கப்பட்டவை மற்றும் கரையொதுங்கியவை பாம்புகள் என மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியமை குறித்தும், இவ்வாறான பாம்புகள் கரையொதுங்குவது சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று தெரிவிக்கப்பட்டமை தொடர்பிலும் இடர்முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் கருத்து வெளியிட்டார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
சுனாமி அனர்த்தம் ஏற்படுமாயின் அதற்கு முன்னர் கடலில் உள்ள பெரும்பாலான மீன்கள் கரைக்குவரும். அவ்வாறு வரும் பட்சத்திலேயே சுனாமி அனர்த்தம் குறித்து சிந்திக்க முடியும் .
சமீபத்தில் பிடிபட்ட பாம்பு என்று கருதப்பட்ட ஒரு வகை மீன் இனம் வெப்பகாலத்தில் சுத்தமான கடல் நீரில் தனது இனம்பெருக்க நடவடிக்கைளை மேற்கொள்ளும். இதனாலேயே இது கரையோர பகுதிகளில் காணப்பட்டன.
2010ஆம் ஆண்டு இந்த மீன் இனம் தொடர்பான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்விலேயே இது பாம்பு அல்ல ஒரு வகை மீன் என்று கண்டறிப்பட்டது. அத்துடன் இந்த மீன் வகையானது, இக்காலப்பகுதிகளிலேயே இனப் பெருக்கம் மேற்கொள்ளும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.