நான் தான் ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி பெங்களூர் பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நான் தான் ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி  பெங்களூர் பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி:

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரி உரிமை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதாவும் (வயது 38) ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரியுள்ளார்.

ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அம்ருதா, இதுகுறித்து  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்க வேண்டும் என்றும், அவர் என் தாய்தான் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும்  கூறியுள்ளார்.

‘1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி ஜெயலலிதாவின் மகளாக நான் பிறந்தேன். என் வளர்ப்பு தாய் சைலஜா 2015-ல் இறந்துவிட்டார். வளர்ப்பு தந்தை சாரதி இந்த ஆண்டு மார்ச் 20-ம்தேதி இறந்துவிட்டார்.  ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, ஜெயலலிதாதான் என் தாய் என்பதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும்’ எனவும் அம்ருதா கூறியுள்ளார்.

அம்ருதாவின் கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது. நீதிபதி மதன் பி  லோகூர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை ஆய்வு செய்கிறது. அப்போது, அம்ருதாவின் மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா? என்பது தெரியவரும்.