ஹெலிகாப்டரும் விமானமும் நடுவானில் மோதி விபத்து!

இங்கிலாந்தின் பக்கிங்காம்ஷைர் பகுதியில் ஒரு விமானமும் ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையோ, இரண்டிலும் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கையோ உடனடியாகத் தெரியவில்லை.

விபத்து நடந்த இடம்.
விபத்து நடந்த இடம்.

வாட்டெசன் மாளிகை அருகே உள்ள மரங்கள் அடர்ந்த வாட்டெசன் மலைப் பகுதிக்கு அவரசரகால ஊர்திகள் கிரீன்விச் நேரப்படி நள்ளிரவு 12.06க்கு அழைக்கப்பட்டன.

விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு தமது குழுவினரை விசாரணைக்காக அங்கு அனுப்பியுள்ளது.

ஹை வைகோம்ப் விமானதளத்தில் இருந்து வந்த இரண்டு விமானங்களே மோதிக்கொண்டதாக அத்தளத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பலர் இந்த விபத்தில் இறந்திருப்பதாக, அதற்குமேல் இந்தக் கட்டத்தில் கூற முடியாது என்றும் தென் மத்திய ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. உயிர்களைக் காப்பதே முன்னுரிமை என்கிறது தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீஸ். ஓய்வில் இருந்த தீயணைப்பு வீரர் மிட்ச் மிஸ்ஸென் தமது தோட்டத்தில் இருந்து நடுவானில் நடந்த இந்த மோதலை பார்த்துள்ளார்.

வாட்டெசன் மாளிகை. இதன் அருகில்தான் விபத்து நடந்தது.
வாட்டெசன் மாளிகை. இதன் அருகில்தான் விபத்து நடந்தது.

உடனே அவசரகால சேவைகளுக்கு தகவல் சொன்ன இவரால், தமது காரில் சென்று விபத்து நடந்த இடத்தை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

வாட்டெசன் மலைப் பகுதியில் இந்த மோதலுக்குப் பிறகு இருந்து புகை கிளம்பியதாகவும், அப்பகுதியை நெருங்குவது கடினம் என்றும் டிவிட்டர் பதிவுகள் கூறுகின்றன.

விபத்து நடந்த இடம் பரபரப்பாக இருப்பதாகவும், சிதைவுகள் விழுந்த இடம் மரங்கள் அடர்ந்ததாக இருப்பதால் அங்கு செல்வது கடினம் என்றும் கூறுகிறார் பிபிசி செய்தியாளர் ஃபில் ஷீப்கா. விபத்தில் எத்தனை பேர் சிக்கியிருப்பார்கள் என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் ஏதும் சொல்லவில்லை என்று கூறும் அவர் விபத்து காரணமாக முதலில் மூடப்பட்ட பல சாலைகள் பிறகு திறக்கப்பட்டுவிட்டன என்கிறார்.

விபத்து நடந்த இடத்தல் இருந்து 20 மைல் தொலைவில் உள்ள ‘வைகோம்ப் ஏர் பார்க்’ விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியை அளிக்கிறது.