
சுற்றுச்சூழல் குற்றத்தை விவரிக்கும் அதிர்ச்சியளிக்கும் புகைப்படம், இந்த ஆண்டின் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களின் (WPY) போட்டியில் முதலிடம் பிடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹ்லுஹுலுய் (hloo-hloo-i) இம்ஃபொலொஜி வனச் சரணாலயத்தில் ஒரு கறுப்பு நிற காண்டாமிருகம் சரிந்த நிலையில் இருப்பதை, தென்னாப்பிரிக்கரான ப்ரெண்ட் ஸ்டிர்டனால் படம் பிடித்துள்ளார்.
வேட்டைக்காரர்கள் ஓசையின்றி சுடுகின்ற துப்பாக்கி மூலம் அந்த விலங்கைக் கொன்ற பின்னர் அதன் முன்புற கொம்பை வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.
காண்டாமிருக உடல் பாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது தொடர்பான புலனாய்வின் ஒரு பகுதியாக இந்த படத்தை ஸ்டிர்டோன் எடுத்துள்ளார்.
தனது விசாரணையின்போது இதுபோல முப்பதுக்கும் அதிமான குற்றச் சம்பவங்களை புகைப்படக் கலைஞர் பார்வையிட்டார். அனுபவங்கள் மன சோர்வை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
“எனக்கு முதல் குழந்தை பிப்ரவரியில் பிறக்கவுள்ளது. எனக்கோ 48 வயதாகிறது. புகைப்பட நிருபராக மற்ற பணிகள் மீது நான் நம்பிக்கை இழந்ததன் காரணமாகவே இவ்வளவு இடைவெளி எடுத்துக் கொண்டேன் என நினைக்கிறேன்.” என்று அவர் கூறுகிறார்.
லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் தமது படத்துக்கான விருதை ஒரு நள்ளிரவு நிகழ்ச்சியின்போது பெற்றுக் கொண்ட ஸ்டிர்டான், யாருடைய உத்தரவின்பேரிலோ காண்டாமிருகத்தின் கொம்பை வெட்டிய செயலை ஊள்ளூர்வாசிகள் சிலர் செய்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்.
ஒரு இடைத்தரகருக்கு விலங்கின் இரண்டு கொம்புகளை விற்பது வழக்கமான நடைமுறை. அந்த தனி நபர் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு வெளியே குறிப்பாக, மொசாமிபீக் வழியாக சீனா அல்லது வியட்நாமுக்கு அவற்றைக் கடத்துவார் என்று அவர் கூறுகிறார்.
அந்த ஆசிய நாடுகளில், காண்டாமிருகத்தின் கொம்புக்கு தங்கம் அல்லது கோகேயினை விட அதிக விலை மதிப்பு உள்ளது.
ஒரு வித தவறாக வழிநடத்தப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் காண்டாமிருகத்தின் கொம்பு, அதன் கால் விரல் நகங்கள் போன்றவை புற்றுநோய் முதல் சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சைக்கு பயன்படும் என கருதப்படுவதால் அவற்றின் உடல் உறுப்புகளை வைத்து வர்த்தகம் நடைபெறுகிறது.
இது பற்றி ப்ரெண்ட் ஸ்டிர்டன் கூறுகையில், “விருதை வெல்லவும், இதுபோன்ற படத்தை தேர்வுக் குழு அங்கீகரிக்கவும் – நாம் வித்தியாசமான காலத்தில் வாழ்கிறோம் என்பதையும் இது உண்மையான பிரச்னை என்பதையும் விளக்க வேண்டியிருக்கிறது” என்றார்.
மேலும், அழிவின் ஆறாவது கட்டத்தில் இவை இருப்பது உண்மை. இந்த காண்டாமிருகங்கள் மட்டுமின்றி பல அரியவகை உயிரினங்களையும் நாம் மிக வேகமாக இழந்து வருகிறோம். இந்த படத்தை தேர்வு செய்ததற்காக தேர்வுக் குழுவுக்கு நன்றியுடையவனாவேன். ஏனென்றால், இந்த பிரச்னையை மாற்றுக் களத்துக்கு கொண்டு செல்ல இந்த விருது உதவும் என்றார் ப்ரெண்ட்.

இந்த ஆண்டின் வனவிலங்கு புகைப்படக்காரர் தேர்வுக் குழு தலைவரான லுவிஸ் ப்ளேக்வெல் கூறுகையில், காண்டாமிருகத்தின் படம் தேர்வுக் குழு மத்தியில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார். இந்தப் படத்தை பார்த்து மக்கள் வெறுப்படையலாம், அதிர்ச்சி அடையலாம். ஆனால், அது உங்கள் கவனத்தை ஈர்த்து அது பற்றி மேலும் அறிய உங்களைத் தூண்டும். அதன் கொம்பு வெட்டப்பட்ட கதையின் பின்னணியை அறியும் ஆர்வத்தை ஏற்படுத்தும். அதை அறிந்து கொள்வதில் இருந்து நீங்கள் பின்வாங்க முடியாது. உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த உங்களை அது தூண்டும் என்று லுவிஸ் ப்ளேக்வெல் கூறினார்.
இளம் மேற்கத்திய கொரில்லாவுக்கு சீமை பலாக்காய் வழங்கியபோது எடுத்த அமைதியான படம், இந்த ஆண்டின் இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதுக்குத் தேர்வாகியுள்ளது.
இந்த படத்தை எடுத்தவர் நெதர்லாந்தை சேர்ந்த டேனியல் நெல்சன். 15 முதல் 17 வயதுடையவர்களின் பிரிவின்கீழ் இவரது படம் தேர்வாகியுள்ளது.
இந்த கொரில்லாவின் வயது ஒன்பது. இதை காங்கோ குடியரசின் ஒட்ஸாலோ தேசிய பூங்காவில் பராமரிப்பாளர்கள் கேக்கோ என்று அழைக்கின்றனர். கொரில்லாவை பார்க்க அவர்கள் நெதர்லாந்து புகைப்படக் கலைஞரை அழைத்துச் சென்றனர்.
மேற்கத்திய கொரில்லாக்கள் மிகவும் ஆபத்தானவை. இறைச்சி, எபோலா வைரஸ் போன்ற குறிப்பிடத்தக்க நோய் சிகிச்சைக்காக சட்ட விரோதமாக அவை வேட்டையாடப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை சுருங்கி வருகிறது. மேலும், சுரங்கங்கள் மற்றும் பனை எண்ணெய் தோட்டங்களுக்காக அவை வாழ்ந்த இடங்கள் அழிக்கப்படுகின்றன.
தற்போது 18 வயதாகும் டேனியல், இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருது பற்றி தனது ஆறாவது வயதிலேயே அறிந்திருந்ததாகக் கூறுகிறார். அது பற்றி கேள்விப்பட்ட உடனேயே அதனால் ஈர்க்கப்பட்டதாகவும், அப்போது முதல் வனச்சரணாலங்களைச் சுற்றி வருவது, படம் எடுப்பது மற்றும் வனப் பராமரிப்பு ஆகியவை தமது வாழ்வின் ஆசைகளாயின என்று அவர் கூறுகிறார்.
டபிள்யூபிஒய் பிரிவு வெற்றியாளர்களை மற்றவர்களை அறிவோம்.

இந்த படம் கான்டம்ப்ளேஷன் என்று அழைக்கப்படுகிறது. இதை எடுத்தவர் பீட்டர் டெலானி. விலங்கு ஓவியங்கள் பிரிவில் இந்த படம் தேர்வாகியுள்ளது. உகாண்டாவின் கிபாலே தேசிய பூங்காவில் உள்ள வனத்தில் ஓய்வெடுக்கும் ஒரு மனிதக் குரங்கு படத்தில் உள்ளது. பீட்டர் அடிப்படையில் அயர்லாந்துவாசி. ஆனால், டபிள்யூபிஒய் மீதான ஆர்வத்தால் ஆஃப்ரிக்காவுக்கு வந்து, அங்கு தமது புகைப்படத் தொழிலைத் தொடர்கிறார்


‘க்ராப் சர்ப்ரைஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் கில்லிகனால் எடுக்கப்பட்டது. முதுகெலும்பில்லாத உயிரினங்கள் பிரிவைச் சேர்ந்த உயிரினம் இவை என கோரப்பட்டுள்ளது. டாஸ்மானியாவின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள மெர்குரி கனவாயில் சிலந்தி நண்டுகளின் தொகுப்புக்குள் ஒரு ஆக்டபஸ் நுழைந்து தமது இரையைத் தேர்வு செய்வதாக இந்த படம் உள்ளது.


‘டோனு வூ’ அமெரிக்கா இந்த படத்தை ஒரு பெரிய கூட்டம் என்று அழைக்கிறார். பாலூட்டிகளின் நடத்தையை இந்த படம் விளக்குகிறது. விந்தணு திமிங்கலங்களை படம் பிடிப்பதில் டோனு சிறந்த நிபுணர். இலங்கையின் வடகிழக்கு கடல் பரப்பில் இந்த திமிங்கலங்களின் கூட்டம் காணப்பட்டது. இதுபோன்ற நிகழ்வை கேமிராவில் படம் பிடிப்பது மிக, மிக அரிதானது.


வழக்கத்துக்கு மாறான இந்த படம், தி ஐஸ் மான்ஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. பிரான்ஸை சேர்ந்த லாரன்ட் பல்லெஸ்டா இந்த படத்தை கிழக்கு அண்டார்டிகாவில் ப்ரெஞ்ச் அறிவியல் தளமான டுமொன்ட் டி உர்விலே அருகே உள்ள கடலுக்கடியில் எடுத்தார். பனிப்பாறையின் அடிப்பகுதியை படத்தில் காணலாம். பல படங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு இது. பூமியின் சுற்றுச்சூழல் பிரிவில் இந்த படம் தேர்வாகியுள்ளது.


பனை எண்ணெய் தோட்டத்தில் பிழைத்தவர்களை விளக்கும் இந்த படம், பெர்டீ கெகோஸ்கியால் எடுக்கப்பட்டது. சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கான ஒற்றைப் பட விருது இவருக்கு இவர் தேர்வாகியுள்ளார். போர்னியோ தீவில் உள்ள கிழக்கு சபாவில் இந்த படம் எடுக்கப்பட்டது. பனை எண்ணெய் தோட்டத்தில் மீள் நடுகைக்காக இந்த பகுதி சுத்தம் செய்யப்படும்போது, மூன்று தலைமுறை யானை கூட்டத்தை புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். இந்த தோட்டப்பகுதிக்குள் விலங்குகள் வரும்போது அவை பெரும்பாலும் சுடப்படும் அல்லது விஷம் வைத்து கொல்லப்படும் என்கிறார் பெர்டீ.


‘தி க்ரிப் ஆஃப் தி குல்ஸ்’ எனப்படும் பருத்த அலகு கொண்ட ஆலா வகை பறவையை இத்தாலியைச் சேர்ந்த எகடெரினா பீ படம் பிடித்துள்ளார். தனது கேமிராவில் அவற்றின் காட்சிகள் பதிவதற்காக ரொட்டித் துண்டுகளை வீசி அவற்றை விளையாடச் செய்து படம் எடுத்துள்ளார். எகடெரினாவின் வயது வெறும் ஐந்தரை மட்டுமே.

உலக புகைப்படத் துறையில் தனக்கே உரித்தான பெருமை போட்டிகளில் ஒன்று டபிள்யூபிஒய்.
1964-ஆம் ஆண்டில் தொடங்கியது முதல் பிபிசியின் வனவிலங்கு இதழில் அதன் படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பங்கேற்கும் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், இந்த ஆண்டு 92 நாடுகளில் இருந்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தற்போதைய போட்டியை லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நடத்தியது.
சிறந்த படங்களின் கண்காட்சி, தெற்கு கென்சிங்டனில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அடுத்த ஆண்டுக்கான போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் வரும் திங்களன்று தொடங்குகிறது






