வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தின் அருகே வசிக்கும் மக்கள் 15 ஆண்டுகளுக்கு பின் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 250 ஏக்கர் பரப்பளவில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பறவைகளுக்கான சீசன் தொடங்கும்.
இந்த காலத்தில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி சைபீரியா, நியூசிலாந்து, ரஷியா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளின் பறவைகளும் வருவது வாடிக்கை. இந்த சரணாலயத்தில் உள்ள ஏரியில் உள்ள மீன்கள் தான் இங்கு வரும் பறவையினங்களுக்கு உணவாக இருந்து வந்தது.
இதனிடையே வறட்சி காரணமாக ஏரி வறண்டுபோனதால் பறவைகள் வரத்து இந்த ஆண்டு நின்றுபோனது. இதனால் 15 ஆண்டுகளாக பறவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பட்டாசுகளை வெடிக்காத அப்பகுதி மக்கள், இந்த ஆண்டு பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.