எதிர்பாலினத்தவருடன் ஏற்படும் ஈர்ப்பு தான் காதலுக்கு அடிப்படை!! வீட்டை உலுக்கும் காதல் பூகம்பம்!

வீட்டை உலுக்கும் காதல் பூகம்பம்
‘இந்த பெண் பார்க்க நல்லவளாகத்தானே தெரிந்தாள். எப்படி திடீரென்று காதலில் விழுந்தாள்?’ என்று காதலில் விழுந்த இளம் பெண்களை விமர்சிப்பவர்கள் உண்டு. காதலைவைத்து ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று கணிக்கக்கூடாது. ஏன்என்றால், குறிப்பிட்ட வயதில் ஏற்படும் பருவமாற்றம் இயற்கையாகவே காதலைத் தூண்டுகிறது. அதற்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாக இருக்கிறது. அந்த உணர்வு எழும்போது எதிர்பாலினர் மீது ஈர்ப்பு உருவாகி, அது சிலருக்கு காதலாக மாறிவிடுகிறது.

குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கும்போது பெற்றோர்கள் அவர்கள் மீது அலாதி அன்பைப் பொழிவார்கள். அதனால் குழந்தைகளுக்கு தேவையான பாசமும், பாதுகாப்பு உணர்வும் வீட்டிலேயே கிடைக்கும். போதிய நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டு அவர் களின் உள்ளுணர்வுகளை புரிந்துகொள்வார்கள். குழந்தைகளும் தங்கள் உணர்வுகளை பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளும்.

பிள்ளைகள் 15 வயதை கடக்கும்போது பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் ‘பிசி’ ஆகிவிடு கிறார்கள். குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதில் மும்முரமாகிவிடுகிறார்கள். அதற்காக அதிக நேரத்தை செலவிடு கிறார்கள். அதன் காரணமாக பிள்ளைகளுக்கு கொடுத்து வந்த முக்கியத்துவம் குறையத் தொடங்கி விடு கிறது. அவர்களிடம் அன்பு செலுத்துவதிலும், பாதுகாப்பு கொடுப்பதிலும் தொய்வு ஏற்பட்டு விடுகிறது. அந்த சமயத்தில் வெளியிலாவது அன்பு செலுத்துவதற்கு ஆள் கிடைக்குமா? என்று ஏங்க தொடங்கி விடுகிறார்கள்.

அவர்களின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளும் வெளிநபர்கள், சின்ன சின்ன மாற்றங்களையும் கண்டுபிடித்து விசாரிக்கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். பாராட்டுகிறார்கள். பாதுகாப்பு உணர்வை வழங்குகிறார்கள். சோகத்துடன் இருந்தால் ஆறுதலாக பேசி அவர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்கள். நாளடைவில் இருவருக்கும் இடையே இணக்கம் அதிகமாகிவிடும். பெண்ணாக இருந்தால் நெருங்கிய தோழிகளாகவும், ஆணாக இருந்தால் நண்பர்களாகவும் தங்களுக்குள் நட்பை வளர்த்துக்கொள்வார்கள். அதுவே எதிர்பாலினத்தவர் களாக இருந்தால் தொடரும் நட்பு, பின்பு காதலாக மாறி விடுகிறது.

13-14 வயதில் ஆண்-பெண் இருவரும் தங்களை பற்றி தாங்களே சுய மதிப்பீடு செய்யத் தொடங்கி விடுகிறார்கள். தங்களை சிறந்தவர்களாக, பெரியவர்களாக கருதிக்கொள்கிறார்கள். அதற்குரிய அங்கீகாரத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். வீட்டில் இருப்பவர்களிடம் இருந்து அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் அது ஒரு ஏக்கமாகமாறும். அந்த ஏக்கத்தை எதிர்பாலினர் தீர்த்துவைக்கும்போது அதுவும் காதலாக மாற வாய்ப்பிருக்கிறது.

‘காதல் இயற்கையானது, அந்தந்த வயதில் அது உருவாகத்தான் செய்யும்’ என்ற பொதுவான கருத்து கொண்டவர்களாக பெற்றோர்கள் இருந்தாலும், தங்கள் மகள் காதல்வசப்படுகிறாள் என்பதை அறிந்தாலே கலங்கிப்போகிறார்கள். அவர்களுடைய காலகட்டத்தில் காதலுக்கு ஆதரவானவர்களாக இருந்தாலும் தங்கள் மகள் காதலித்தால் மனம் உடைந்து போய்விடுகிறார்கள். அதுவரை கலகலப்பாக இருந்த வீடு மகள் மீது தொற்றிக்கொண்ட காதலால் துக்க வீடாக மாறுவிடுகிறது. வீட்டுக் குள்ளே பெரும் பூகம்பமே வெடித்துவிடுகிறது.

காதலில் விழுந்த காரணத்துக்காக மகளை தனிமைப்படுத்திவிடுகிறார்கள். ஒருசிலர் வீட்டுக்குள்ளே அடைத்துவைத்து சித்தரவதை செய்கிறார்கள். ஒருசிலர் நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கிறார்கள். பெற்றோரின் இதுபோன்ற செயல்பாடுகள் பிள்ளைகள் மனதில் ஆத்திரத்தை உருவாக்கிறது. அதன் வெளிப்பாடாக தற்கொலை முயற்சியில் ஒருசிலர் ஈடுபடுகிறார்கள். சிலர் வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்துவிடுகிறார்கள்.

மகள் காதல்வசப்பட்டிருந்தால் பெற்றோர் பக்குவமாக நிலைமையை கையாளவேண்டும். மகளை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கக்கூடாது. தடாலடியாக காதலை கைவிட்டுவிடுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. அதே நேரத்தில் நீ காதலித்தது சரிதான் என்று சொல்லவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட மனநிலையில் அணுக வேண்டும்.

‘உன்னை நான் சுதந்திரமாக வளர்த்தேன். உனக்கு காதலிக்கும் உரிமை இருக்கிறது. அதே சமயத்தில் உன் எதிர்காலத்தை பற்றியும் நீ சிந்திக்க வேண்டும். இப்போது நன்றாக படித்தால்தான் எதிர்காலத்தில் வேலை கிடைக்கும். அதன் மூலம் சொந்தக்காலில் உன்னால் நிற்க முடியும். இப்போது உன் படிப்புக்கு எங்கள் பண உதவி தேவை. பாதுகாப்பும் தேவை. சமூக ஒத்துழைப்பும் தேவை. நீ படித்து முடித்து வேலைக்கு சென்றுவிட்டால், அதன் பிறகு உன் இஷ்டப்படி முடிவு எடுக்கலாம். அதற்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்.

அப்போது உன் காதலுக்கு நாங்களும் ஆதரவாக இருப்போம். இப்போதைய உன் காதலை மறுபரிசீலனை செய். அந்த நபர் யார்? அவர் என்ன படிக்கிறார்? அவருடைய எதிர்கால திட்டம் என்ன? எதிர்கால வாழ்க்கையை எப்படி வடிவமைக்கப்போகிறார்?’ என்பது போன்ற கேள்விகளை பக்குவமாக எழுப்பி, நிதானமாக யோசிக்கவைத்து, அவளுடைய சிந்தனையை தூண்டிவிடும் செயல்களில் பெற்றோர் ஈடுபட வேண்டும். இது நல்ல முடிவை உருவாக்கும். இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு காதல் வசப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அவளுடைய காதல் வலுவானதாக இருந்தால் அந்த நபரிடம் எதிர்கால திட்டத்தை பற்றி கேட்க ஆரம்பித்துவிடுவாள். அதனால் முரண்பாடான காதலர்கள் ஒதுங்கிவிடுவார்கள்.

இன்னொரு வகை காதலும் இருக்கிறது. ஒருசில பெண்கள் ரவுடிகள், முரட்டுத்தனமானவர்கள் வீசும் காதல் வலையில் விழுந்து விடுவார்கள். அவர்களிடம் பக்குவமாக உபதேசம் செய்தாலும் புரிந்துகொள்ளும் மன நிலையில் இருக்க மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில் மனநல ஆலோசகர்களை அணுகுவது சிறந்தது. அவர்களுடைய காதல் தீவிரமாக இருந்தால் கவுன்சலிங் மூலம் எடுத்துச் சொல்லி புரியவைக்கலாம்.

காதலிப்பவர்களில் இன்னொரு வகையினரும் இருக்கிறார்கள். அவர்கள் ‘செக்ஸ்’ சார்ந்த எண்ணத்தோடுதான் பழகுவார்கள். முதலில் கொஞ்ச நாட்கள் காதல் மழை பொழிவார்கள். பின்னர் உடல் தொடர்புக்கு அணுகுவார்கள். ‘நான் உன் எதிர்கால கணவனாக வரப்போகிறவன்தானே. படுக்கையை பகிர்ந்து கொள்வதில் தவறில்லையே. இருவரும் சேர்ந்து எல்லாமாதிரியும் புகைப்படம் எடுத்து கொள்வதும் தப்பில்லை’ என்ற மாதிரியான சூழலை உருவாக்குவார்கள். அதுபோன்று நடந்து கொள்வதற்கு உடன்பட்டுவிடக்கூடாது. இது மிக கடுமையான பின் விளைவுகளை உருவாக்கிவிடும்.

முதலில் இனக்கவர்ச்சிக்கும்-காதலுக் கும் உள்ள வேறுபாட்டை பெண்கள் அறிய வேண்டியது முக்கியம். உணர்வுரீதியான ஒரு ஈர்ப்பே இனக்கவர்ச்சி. அது உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தாது. இது பருவமாற்றத்தால் ஏற்படும் ஒருவகை கிளர்ச்சிதான். இது ஒரு காலகட்டத்தில் காணாமல் போய்விடும்.

ஆனால் காதல் இனக்கவர்ச்சியைக் கடந்தது. எதிர்பாலினத்தவருடன் ஏற்படும் ஈர்ப்பு தான் காதலுக்கு அடிப்படை என்றாலும், அந்த ஈர்ப்பானது சில கட்டங்களை கடந்துதான் காதலாகப் பரிணமிக்கும்.