முகாம் வாழ்க்கையை விட மோசமாக வாழ்கின்றோம்: பூந்தோட்டம் முகாமில் இருந்து குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் கவலை
முகாம் வாழ்க்கையை விட மோசமாக வாழ்கின்றோம் என பூந்தோட்டம்முகாமில் இருந்து புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, காணிகள் அற்ற நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வவுனியா, பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்டசின்னஅடம்பன் இராசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட இவ் 150 வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டிருந்தார்.
சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் 68 வீடுகளும், புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் 82 வீடுகளும் அமைக்கப்பட்டு லைக்கா ஞானம் கிராமம் என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த யூன் மாதம் முதல் முகாமில் இருந்து வெளியேறி புளியங்குளம், பரசங்குளம் கிராமத்தில் லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் அமைக்கப்பட்ட 82 வீடுகளிலும் குடியேறியுள்ள மக்கள் பல்வேறு அஅசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த சில தினங்களாக வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக லைக்கா ஞானம் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் சிலவற்றின் கூரைகள் காற்றில் தூக்கியெறியப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்ட வீடுகளின் கூரைப்பகுதிகள், சமையலறையின் புகை போக்கும் பகுதி என்பவற்றின் ஊடாக மழை நீர் நேரடியாகவே வீட்டிற்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.