இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு கட்டணம் குளறுபடி காரணமாக உஷா என்பவருடன் பிரச்னை ஏற்பட்டது. உஷா, ஒவ்வொருவரையும் தவறாகச் சொல்லியிருப்பது தெரிந்தது. உறவாடிக் கெடுப்பது போல அவர் செயல்பட்டது தெரியவந்தது. இதனால், வேறு ஒருநபரிடம் பராமரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த சம்பவம், எங்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. வாடகை வீட்டில்கூட இப்படி நடக்காது. மின்சாரத்தை கட் பண்ணுவது, ஏ.சி. இணைப்பைத் துண்டிப்பது, மாடிப்படிகளில் எண்ணெய்யை ஊற்றிவிடுவது போன்ற செயல்கள் நடந்தன. இது, அடுக்குமாடியில் குடியிருந்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.

எல்லோரும் சேர்ந்து உஷா மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அப்போது, போலீஸார் உஷாவை எச்சரித்து அனுப்பினர். பின்னர், உஷாவின் டார்ச்சர் அதிகமானது. அப்போதுகூட நான் அமைதியாக இருந்தேன். சூட்டிங்கில் இருக்கும்போது, எனக்கு ஆதரவாக வந்தவர்களுக்கு உஷாவால் தொல்லை அதிகமானது.
சம்பவத்தன்று போலீஸ் உயரதிகாரி ஒருவர், வீட்டில் உஷாவிடம் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்த போலீஸ் அதிகாரியையும் என்னையும் தவறாக பேசினார் உஷா. அதை நான் தட்டிக்கேட்டேன். இதனால் வாக்குவாதம் அதிகமானது. அப்போது, உஷா என்னைக் கடுமையாகத் தாக்கினார். அதை அருகிலிருந்தவர்கள் தடுக்க முயன்றனர். அவர் என்னைத் தாக்கியதைத் தடுக்கவே லேசாகக் கடித்தேன். எங்களுக்கு நடந்த தகராறில், உஷாவின் குழந்தை நடுவில் மாட்டியதால், நான் என்ன செய்வதென்று திகைத்தேன்.
என்னைக் குறித்த தவறான தகவல்களைச் சொல்லிவருகிறார் உஷா. அவர், டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தவுடன், நான் புகார் கொடுத்திருக்க வேண்டும். நம்முடைய சட்டத்தில் ஒரு பெண் தாக்கப்படும்போது தற்காப்புக்காக, நகத்தையும் பற்களையும் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். மக்கள்தான் என்னுடைய முதல் கடவுள். இன்று நடக்கும் விசாரணையில், காவல்துறையில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.