இலங்கை சிறுவர்களுக்காக பிரித்தானியாவில் உயிரை பணயம் வைத்த தமிழர்!

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவி புரியும் நோக்கில், இலங்கையர் ஒருவரை உயிரை பணயம் வைத்து சாகசம் செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

british

தனது உயிரை துச்சமென மதித்து ஜோசப் ஜெயகுமார் என்ற 68 வயதுடைய தமிழர் 500 அடி உயரத்தில் இருந்து காற்றில் நடக்கும் சாகசத்தை புரிந்துள்ளார்.

பல ஆண்டுகளாக ஜோசப் ஜெயக்குமார் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு உதவும் நிறுவனம் ஒன்றின் நிதி ஆதரவாளராக செயற்பட்டு வருகின்றார்.

அதற்கமைய அவர் கடந்த புதன்கிழமை 8000 பவுண்ட் சேகரிப்பதற்காக சிறிய ரக விமானம் ஒன்றின் உதவியுடன் நாற்காலியில் அமர்ந்து 500 அடி உயரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்களின் பிள்ளைகளுக்கு உதவுவதற்காக இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரித்தானியாவில் Coppice வீதியின் Woodley பகுதியில் வாழும் ஜெயகுமார் Boeing Stearman என்ற சிறிய ரக விமானத்தில் 135 கிலோ மீற்றர் வேகத்தில் 500 அடி உயரத்திற்கு அனுப்பப்பட்டார்.

அவர் தனது சாகசத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“நான் இதனை செய்திருக்கிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. இது பயங்கரமானதாக இருந்தாலும், நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் மற்றும் உற்சாகமாக இருந்தேன், இதுவரை எனக்கு நிதி வழங்கிய அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை சொல்ல விரும்புகிறேன். நிதி திரட்டும் பக்கம் நன்கொடைகளுக்கான இன்னமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உதவ விரும்புபவர்கள் தொடர்ந்து உதவலாம்.

இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் ஏற்பட்ட அழிவுகளின் விளைவுகளை பயங்கரமானாகும். யுத்த்தில் பெற்றோரை இழந்த நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கு நீண்டகால மறுவாழ்வு வழங்குவதே நோக்கமாகும்.

எனது முதுகுவலியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நிதி திரட்டு நிகழ்ச்சிகளை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது..” என ஜெயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் அரோபனம் சிறுவர் நிதியம் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 20 சிறுவர்களுக்கு உதவி ஆரம்பிக்கப்பட்டு தற்போது அந்த நிதியத்தினால் 600 சிறுவர்களுக்கு உதவிகள் வழங்கும் வரை வளர்ந்துள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.