சீனாவின் மிகப்பெரிய அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பெட்ரோசைனா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவமானது டேலியன் துறைமுக நகரையே அதிர்வடையச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று ஏற்பட்ட பாரிய தீயை சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், இதனால் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அரச ஊடகமொன்று இன்று அறிவித்துள்ளது. குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இரு மாதங்களுக்கு முன்னர் பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று இத்தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உள்ளூர் அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். லியோனிங் மாகாணத்தில் அமைந்துள்ள சுத்திகரிப்பு ஆலையானது, மூன்று கச்சா எண்ணெய் வடிகட்டல் பிரிவுகளை கொண்டுள்ளது.
இதன் மூலம் நாளொன்றுக்கு 4 இலட்சத்து 10 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற அனர்த்தத்தில் ஆலைகளின் கச்சா செயலாக்க நடவடிக்கைகளில் பாதிப்பில்லை என தெரிவித்த அதிகாரிகள், வெளியீட்டில் சிறிய குறைப்பு ஏற்படலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.