மஹிந்த ராஜபக்ச அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இல்லை

மஹிந்த ராஜபக்ச அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் முனைப்பு காட்டுவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

h21

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதில் காட்டும் தீவிரம், கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பான விசாரணைகளில் சட்ட மா அதிபர் திணைக்களம் காட்டுவதில்லை.

விசாரணைகளில் அரசாங்கம் எவ்வித தலையீடுகளையும் செய்வதில்லை.கடந்த கால ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களை சட்ட மா அதிபர் திணைக்களம் நீண்ட காலம் முடக்கி வைத்திருப்பது தொடர்பில் கேள்வி எழுகின்றது.

இந்தக் கேள்வியை நாம் எழுப்பி வருகின்றோம். இந்த அரசாங்கத்தின் பிழைகள் பற்றி விசாரணை செய்வது நல்லதே, எனினும் கடந்த அரசாங்கத்தின் பிழைகள் பற்றி விசாரணை நடத்தப்படுவதில்லையே? அதில்தான் பிரச்சினை உள்ளது.

புதிய முறைப்பாடுகள் பற்றி துரித கதியில் விசாரணை நடத்தப்படுகின்றது. ஹிருனிகா பிரேமசந்திர இளைஞர் ஒருவரை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 நாட்களில் சட்ட மா அதிபர் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்தது.

சதுர சேனாநாயக்க தொடர்பான முறைப்பாடு ஒன்று தொடர்பில் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வேகமும் ஆர்வமும் மஹிந்த அரசாங்க ஆட்சிக் கால ஊழல் மோசடிகள் குற்றச் செயல்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் காட்டுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்