திராவிடம் என்பது மக்கள் சக்தி : கமல்ஹாசன்

திராவிடம் என்பது வாக்குகளின் எண்ணிக்கை இல்லை. திராவிடம் என்பது மக்கள் சக்தி. திராவிடத்தை யாராலேயும் அழிக்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

murasoli

முரசொலி பத்திரிகையின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த மேடையில் தொடர்ந்தும் பேசிய அவர்,

நான் ரசித்த முதல் தமிழ் சிவாஜியுடையது. அதன் பின்னர், அந்தத் தமிழுக்குச் சொந்தக்காரர் கலைஞர் என்று தெரிந்தது முதல் நான் அவரின் ரசிகன்.

இந்த விழாவில் என்னை அழைத்த போது, ரஜினி இந்த விழாவுக்கு வருகிறாரா பேசுகிறாரா? என்று கேட்டேன். அவர் பேசவில்லை என்றதும், நானும் பார்வையாளராக கலந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

இப்போது தற்காப்பு முக்கியமில்லை, தன்மானமே முக்கியம். இந்த விழாவில் கலந்து கொள்கிறேன் என்றதுமே, நீங்க கழகத்தில் சேரப் போகிறீர்களா? என்று கேட்கிறார்கள்.

சேருவது என்றால் 1989-ல் கலைஞர் அழைத்த போதே சேர்ந்திருப்பேன். அரசியல் பேசுவதற்கான மேடை இது இல்லை.

ஒருவரை ஒருவர் கிண்டல் செய்பவர்கள் இங்கு ஒரே மேடையில் இருக்கிறார்கள். இந்தக் கலாசாரத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று தான் நான் இங்கு வந்தேன்.

திராவிடம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமோ தென்னிந்தியாவில் மட்டுமோ இருப்பது இல்லை. சிந்து நாகரிகம் முதலே திராவிடம் உள்ளது.

‘ஜனகனமன’யில் திராவிடம் உள்ள வரை திராவிடம் இருக்கும் திராவிடம் என்பது வாக்குகளின் எண்ணிக்கை இல்லை. திராவிடம் என்பது மக்கள் சக்தி. திராவிடத்தை யாராலேயும் அழிக்க முடியாது” என்று பேசினார்.

இந்நிகழ்வில், நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகக் கலந்து கொண்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றுள்ளார். இவர்கள் தவிர, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து தமிழக அரசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சருக்கான போட்டி அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக அதிமுக இப்பொழுது பல துண்டுகளாாக நொருங்கிப் போய் கிடக்கின்றது. திமுக கருணாநிதி உடல் நலக்குறைவால் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவார் எனவும், இந்த இடைவெளியை நிரப்புவார் என்றும் அவரின் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அண்மையில் நடிகர் கமல் தன்னுடைய அரசியல் கருத்துக்களை அதிரடியாக தெரிவித்து வருகிறார். குறிப்பாக அவரின் அரசியல் கருத்துக்கள், அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறி என்கின்றன தமிழக ஊடகங்கள்.

தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் கமல், இப்பொழுது, முரசொலியின் பவள விழா மேடையில் பேசியதும் தமிழக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.