இராணுவ சிப்பாய் ஒருவர் செய்த திருட்டு செயல் !

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் இராணுவ சிப்பாயொருவர், கையடக்கத் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

sri-lanka-army-415x260

வல்லவ பகுதியைச் சேர்ந்த, மல்லவத்தகே றொசான் நிலாந்த (வயது 27) என்ற இராணுவ சிப்பாயே 38,500 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் குறித்த இராணுவ சிப்பாய் நேற்று இரவு கொழும்பில் இருந்து யாழ். நோக்கிப் சென்ற புகையிரதத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் இருந்த 38,500 பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் 700 ரூபா பணத்தினையும் திருடியுள்ளார்.

குறித்த சிப்பாய் திருடியதைக் கண்ட பெண் பயணி புகையிரத பொலிஸாருக்கு இந்த விடயம் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார். இந்த தகவலின் பிரகாரம் யாழ். புகையிரத்தில் வைத்து இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவரை யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.