தனது மெய்ப்பாதுகாவலராக இருந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவியின் காலில் நீதிபதி மா.இளஞ்செழியன் வீழ்ந்து கதறியழுத சம்பவத்தைக் கண்டு, ‘ஆழமாக நெகிழ்ந்தேன்’ என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை, உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவியின் காலில் வீழ்ந்து நீதிபதி மா.இளஞ்செழியன் கதறி அழுதார். இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும் தனது கீச்சகத்தில் இந்தக் காணொலியைப் பகிர்ந்திருந்தார். அத்துடன் ‘ஆழமாக நெகிழ்ந்தேன்’ என்று கருத்தும் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, சிங்கள ஊடகங்களில் நீதிபதி மா.இளஞ்செழியனின் மேற்படி சம்பவத்துக்கு, நேற்றும் பலரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். நீதிபதியின் மனிதாபிமானத்துக்கு முன்பாக இனவாதம் தோற்றுவிடும் என்றும் பதிவிட்டுள்ளனர்.