தகுந்த அரச மரியாதையுடன் நல்லடக்கம்!

sarah

யாழ்ப்பாணம் நல்லுர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரது இறுதிக் கிரியைக்கு உச்சக்கட்ட அரச மரியாதை வழங்கப்படவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பணம் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான, பொலிஸ் சார்ஜன்ட் சரத் பிறேமசந்திரவின் பூதவுடல் சிலாபம், குமாரகட்டுவையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 57 வயதான பொலிஸ் சார்ஜன்ட் முன்னாள் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரையே திருமணம் செய்திருந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

சிலாபம் – குமாரகட்டுவ பொது மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் 26ஆம் திகதி மாலை  இடம்பெற்று உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த நல்லடக்கத்துக்காக அரச மரியாதையின் நிமித்தம், உச்சக்கட்ட பொலிஸ் மரியாதை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றியிருந்ததோடு தனது கடமை நேரத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.