ஆக்ரோசமான விராட் கோலிக்கு ஏற்ற வகையில் என்னை தயார் செய்ய வேண்டும்: அஸ்வின்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் தலைமையின் கீழ் சுமார் இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஆனால் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் தலைமையில் விளையாடியதில்லை. இலங்கை அணிக்கெதிராக ஒரேயொரு தொடரில் மட்டும் அஸ்வின் விராட் கோலியின் தலைமயின் கீழ் விளையாடியுள்ளார்.

2010-ம் ஆண்டில் இருந்து ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின், டோனி தலைமயின் கீழ் 6 வருடங்கள் விளையாடி உள்ளார்.

விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்பதால் டோனிக்கும் தனக்கும் இடையிலான கம்யூனிகேசனை விட விராட் கோலிக்கு தனக்கும் இடையிலான கம்யூனிகேசன் மாறுபட்டதாக இருக்க போகிறது. இதனால் அதற்கு ஏற்றவாது தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், விராட் கோலியுடன் இணைந்து செயல்படுவது குறித்து கூறுகையில் ‘‘விராட் கோலிக்கும் எனக்கும் இடையிலான உரையாடல் மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது. டோனியுடன் விளையடியதுபோல் தற்போது இருக்கப்போவதில்லை. டோனி கேப்டனாக இருக்கும்போது தகவல்கள் கீப்பரிடம் (டோனி கேப்டன்) இருந்து கிடைக்கும்.

தற்போது விராட் கோலி ஷார்ட் மிட்விக்கெட் அல்லது ஷார்ட் கவர் போன்ற திசையில்தான் பீல்டிங் செய்வார். இதனால் தகவல் பரிமாறப்படும் இடம் மாறுவதால் வித்தியாசமாக இருக்கப்போகிறது. விராட் கோலியின் தகவல்களை பெற்று சிறப்பாக செயல்பட முயற்சி செய்வோம்.

நான் விரட் கோலியின் தலைமையின் கீழ் ஆர்.சி.பி. அல்லது வேறு ஏதாவது அணியிலேயோ விளையாடியது கிடையாது. ஒரேயொரு தொடரில்தான் (இலங்கை) கோலியின் தலைமையில் விளையாடியுள்ளேன்.

தற்போதைய சூழ்நிலையில் விராட் கோலியின் தலைமையில் சற்று ஆக்ரோஷசமாக விளையாட வேண்டியிருக்கும். அதனால் ஒரு விஷயம் என்னவென்றால் அதற்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வேன். மிடில் ஓவரின்போது நெருக்கடியாக பந்து வீசி விக்கெட்டுக்களை கைப்பற்ற வேண்டும் என்று கோலி ஆசைப்படுவார். அதற்காக சில ரன்களை விட்டுக்கொடுக்க நேரிடும். உண்மையிலேயே சில ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுக்களை கைப்பற்றுவது மோசமான விஷயம் அல்ல.

ஆனால் டோனி மிடில் ஓவர்களில் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியாவிட்டாலும் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று சுழற்பந்து வீச்சாளர்களிடம் வலியுறுத்துவார்.

டோனி ஒருநாள் தொடரில் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். ஏனெனில் அவர்தான் விக்கெட் கீப்பர். மேலும் அவரது அனுபவம் அவரை முன் நிறுத்தம். இதுதான் முக்கியமான செல்லப்போகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை அவரிடம் பெற்று அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சி செய்வோம்.

டோனி தொடக்க வீரராக களம் இறக்கியதால் எனது கேரியர் மாறியது: ரோகித் சர்மா

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த டோனியின் கேப்டன் கிரிக்கெட் வாழ்க்கை நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்து லெவன் அணிக்கெதிராக இந்தியா ‘ஏ’ அணி மோதிய ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது.

அவர் தலைமையின் கீழ் விளையாடியதை அனைத்து வீரர்களும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ரோகித் சர்மா டோனி பற்றி கூறுகையில் ‘‘தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்ற முடிவு எனது கிரிக்கெட் கேரியரை மாற்றியது என்று நம்புகிறேன். இந்த முடிவு டோனியால் எடுக்கப்பட்டது.

டோனி என்னிடம் வந்து நீங்கள் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் சிறப்பான விளையாடுவீர்கள். உங்களால் கட் ஷாட் மற்றும் புல்ஷாட்டுகளை சிறப்பாக அடிக்க முடியும். தொடக்க வீரராக வெற்றி பெற தகுதிகள் உள்ளது அதற்குப் பின்னர்தான் நான் சிறந்த பேட்ஸ்மேன் ஆனேன். என்னுடைய சிறந்த விளையாட்டை புரிந்து கொள்வதற்கும் சூழ்நிலைக்கு ஏற்ப சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு உதவியாக இருந்தது’’ என்றார்.

அஸ்வின், ஜடேஜாவை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும்: பேர்ஸ்டோவ்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா 4-0 எனக் கைப்பற்றியது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் 352 ரன்கள் குவித்தார். சராசரி 44 ஆகும். விக்கெட் கீப்பராக 11 கேட்சுகள் பிடித்தார்.

இன்றைய 2-வது பயிற்சி ஆட்டத்தில் 64 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து 282 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘நான் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை நான் டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டு இருக்கிறேன். அவர்கள் சிறந்த திறமையை பெற்றிருக்கிறார்கள் என்பது எங்களுத்துத் தெரியும். ஒருநாள் தொடருக்கான வெள்ளைப் பந்தில் இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் நன்றாக ஸ்விங் செய்வார்கள். இதை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்வார்கள். இதனால் இந்த தொடர் சவாலாக இருக்கும்’’ என்றார்.

2-வது பயிற்சி ஆட்டம்: இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

இங்கிலாந்து லெவன் – இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் இன்று பகல் ஆட்டமாக மும்பையில் நடைபெற்றது. இன்றைய போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ராய் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஹேல்ஸ் 53 பந்தில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் நதீப் பந்தில் பெவிலியின் திரும்பினார்.

அடுத்து வந்த பேர்ஸ்டோவ் 64 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த வீரர்கள் சுழற்பந்தில் சிக்கித் திணறினார்கள். நதீம் மற்றும் ரசூல் ஆகியோரின் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 282 ரன்கள் சேர்த்தது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் பர்வேஸ் ரசூல் 3 விக்கெட்டும், சங்வான், டின்டா, நதீம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. ரகானே, ஷெல்டன் ஜாக்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவரில் 119 ரன்கள் சேர்த்தது. ஜாக்சன் 59 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து இளம் வீரரான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களம் இறங்கினார். 19 வயதே ஆன அவர், இங்கிலாந்தின் பந்து வீச்சுக்கு சற்றும் அஞ்சாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய ரகானே 83 பந்தில் 91 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரெய்னா அதிரடியாக விளையாடி 34 பந்தில் 45 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்தியா ஏ அணி 39.4 ஓவரிலேயே 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த நிலையில் 283 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10 ஆண்டுகளுக்கு பின் சிரஞ்சீவி நடித்த படம் நாடு முழுவதும் ரிலீஸ்!

10 ஆண்டுகளுக்குப்பின் சிரஞ்சீவி நடித்த படம் 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக  விளங்கியவர் நடிகர் சிரஞ்சீவி. ஆந்திரா- தெலுங்கானாவில் இவரது படங்கள் வசூலை குவித்து வந்தன. இந்த நிலையில் இளம்  நடிகர்களின் வருகையால் சிரஞ்சீவிக்கு மவுசு குறைய ஆரம்பித்தது. வரிசையாக அவரது படங்கள் தோல்வியை தழுவியது.

இதனால் 2007-ம் ஆண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு 2008-ம் ஆண்டு பிரஜ்ஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் தனிக்கட்சி  தொடங்கினார். அடுத்த ஆண்டு(2009) நடந்த ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் அவரது கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி  பெற்றது. அதன் பிறகு அவரது கட்சி எழுச்சி பெற முடியாமல் போனது.

இதையடுத்து சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரசில் இணைத்து விட்டார். அவருக்கு முதலில் எம்.பி. பதவி வழங்கிய காங்கிரஸ்  பின்னர் அவரை மத்திய மந்திரியாகவும் நியமித்தது.

இந்த நிலையில் இழந்த புகழை நிலைநிறுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். ஏற்கனவே  149 படங்களில் நடித்திருந்த சிரஞ்சீவி தனது 150-வது படமாக ‘கைதி நம்பர் 150’ என்ற பெயரில் புதிய படத்தை தொடங்கினார்.

இது தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் தழுவல் ஆகும். 10 ஆண்டுகளுக்கு பின்பு சிரஞ்சீவி சினிமாவில் நடித்ததால் தெலுங்கு  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று நாடு முழுவதும் சிரஞ்சீவி படம் ரிலீஸ் ஆனது. மொத்தம் 1000  தியேட்டர்களில் படம் வெளியானது.

ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் சிரஞ்சீவி படம் பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார்  வந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். 10 ஆண்டுக்குப்பின் சிரஞ்சீவி படம் வெளியானதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு  அதிகரித்து விற்கப்பட்டது. தியேட்டர்களில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது.

‘ஆன்லைனில்’ சில விநாடிகளிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. தியேட்டர் கவுண்டர்களில் டிக்கெட்டுகள் வாங்க  ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். சில நிமிடங்களில் தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து “ஹவுஸ் புல்”  போர்டுகள் தொங்கவிடப்பட்டன.

படத்தை பார்த்த ரசிகர்கள் கூறும் போது, சிரஞ்சீவி வழக்கமான உற்சாகத்துடன் சண்டை காட்சிகளில் நடித்து இருப்பதாகவும்,  நடன காட்சிகளிலும் நடிப்பிலும் எப்போதும் போல் தனது பாணியில் ஸ்டைலாக நடித்து இருப்பதாகவும் உற்சாகத்துடன்  தெரிவித்தனர்.

ஆந்திர பல்கலைக்கழக மாணவர் அனில் குமார் கூறுகையில், சிரஞ்சீவி இளமையுடனும் எழுச்சியுடனும் நடித்து இருக்கிறார்,  ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து உள்ளார் என்றார். சிரஞ்சீவி படத்தை அவரது மனைவி சுரேகா மற்றும் குடும்பத்தினர்  ஜதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு சென்று பார்த்தனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி டி.ராஜேந்தருடன், சிம்பு மவுன போராட்டம்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், தடையை நீக்க கோரியும் தனது வீட்டின் முன்னால் மவுன போராட்டம் நடத்தப்போவதாகவும், தமிழர்கள் அனைவரும் இதேபோன்று மவுன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் நடிகர் சிம்பு அறிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு சென்னை தியாகராயநகர் மாசிலாமணி தெருவில் உள்ள தனது வீட்டின் முன்னால் கருப்பு சட்டை அணிந்து சிம்பு மவுன போராட்டம் நடத்தினார். அவரது தந்தையும், லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர், தாய் உஷா, டைரக்டர் ராம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கருப்பு கொடியுடன் திரண்டு இருந்தனர். ‘ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்’, ‘ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கு’, ‘பீட்டா அமைப்பே வெளியேறு’ என்பன போன்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

அந்த பகுதி முழுவதும் கருப்பு கொடி கம்பங்களும் நடப்பட்டு இருந்தன. மாசிலாமணி தெருவில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசாரும் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். 10 நிமிடங்கள் சிம்பு மவுன போராட்டம் நடத்தினார். அதன் பிறகு போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:-

நமது பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மீட்டு எடுக்கவும், காப்பாற்றவும் இந்த மவுன போராட்டத்தை நடத்தி உள்ளோம். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும், தமிழர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நான் சினிமாவில் மட்டும் கதாநாயகன் இல்லை. மக்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் வீதியில் இறங்கி போராடுகிற மனிதன். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஒரு ஆரம்பம் தான் இந்த போராட்டம். ஜல்லிக்கட்டு நடந்தே தீரும். ரசிகர்கள் நீங்கள் முன்னே செல்லுங்கள். உங்கள் பின்னால் நான் வருகிறேன். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி தந்தே தீரவேண்டும். பிரச்சினை செய்தால் வேறு மாதிரி விளைவுகள் ஏற்படும்.

இவ்வாறு சிம்பு பேசினார்.

கொம்பு மீச கெட்டப்பில் மிரட்டும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவரும் விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன்  தேர்வு செய்து வருகிறார். கடந்த வருடம் இவரது நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகி சாதனை படைத்தன. அதேபோல இந்த  வருடக் கணக்கை தனது ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தொடங்கவிருக்கிறார்.

இந்நிலையில் விக்ரம் வேதா படத்தில் ஒருபகுதியை நடித்த விஜய் சேதுபதி, தற்போது, ‘ரேணிகுண்டா’ புகழ் பன்னீர்செல்வம்  இயக்கத்தில் ‘கருப்பன்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தில் கொம்பு வச்ச  தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கவிருக்கிறார். மேலும்  வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க உள்ளார்.

இதுதவிர ‘கவண்’, ‘கருப்பன்’, ‘விக்ரம்-வேதா’, ’96’, ‘அநீதி கதைகள்’ உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

விஜயின் `பைரவா’ படத்தின் முதல் நாள் வசூல் சாதனை!

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பைரவா’ திரைப்படம் உலகமெங்கும் நேற்று வெளியானது. தமிழகத்தின் முன்னணி ஹீரோவான விஜய்யின் படம் என்பதால், மிகுந்த எதிபார்ப்புக்களுக்கு மத்தியில் வெளிவந்த ‘பைரவா’ திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

பொதுவாகவே விஜய், அஜித் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிலையில், தமிழகத்தில் `பைரவா’ படத்தின் முதல்நாள் வசூல் சுமார் 20 கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் விஜய் படத்தின் முதல் நாள் வசூலில் `பைரவா’ சாதனை படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படம் வெளியான அன்றே இணையதளங்களிலும் ரிலீசாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது  குறிப்பிடத்தக்கது.

கன்னடத்தில் டப் செய்யப்படும் அஜித் படம்!!

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2015ல் வெளியான மெகா ஹிட் படம் ‘என்னை அறிந்தால்’. அஜித் கேரியரில்   முக்கியமான படமாக அமைந்த ‘என்னை அறிந்தால்’ ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமைந்தது. இதில் அஜித் ஜோடியாக   த்ரிஷாவும், காமெடியனாக விவேக் மற்றும் வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியான   பாடல்களும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தை பிற மொழிகளில் டப்பிங் செய்ய முயற்சி செய்யப்பட்டது.  இந்நிநிலையில், தற்போது, இப்படம் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

கன்னடத்தில் பிறமொழிகளின் டப்பிங் படங்கள் நீண்ட நாட்களாக வெளியாகாத நிலையில், தற்போது அஜித் நடித்துள்ள  `என்னை அறிந்தால்` படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

யூடியூபிற்கு போட்டியாக புதிய களத்தில் கால்பதிக்கும் பேஸ்புக்!

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. இதன்படி, பேஸ்புக்கில் அப்லோடு செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறான வீடியோக்களின் இடையில் மட்டும் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும். (வழக்கமாக யூடியூப் வீடியோக்களில் ஆரம்பத்திலேயே விளம்பரங்கள் தடைக்கல்லாக வந்து நிற்பது குறிப்பிடத்தக்கது)

மேற்படி விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களைப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரங்களின் ஊடாக கிடைக்கும் லாபத்தில் 55 சதவீத தொகையை வீடியோக்களை வெளியிடும் நபர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் விளம்பரம் மூலமாக மட்டும் சுமார் 700 கோடி டாலர்(96 சதவீதம்) அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியின் பெரும்பகுதி, கைபேசி மூலமாக வரும் விளம்பர வருவாய் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நிலவரத்தின்படி, நாளொன்றுக்கு 5 கோடி மக்கள் பேஸ்புக்கில் வீடியோக்களை காண்கின்றனர். அவர்கள் அனைவரும் வீடியோக்களை பார்க்கும் நேரம் அன்றாடம் சராசரியாக 10 கோடி மணிநேரமாக உள்ளது. இந்த பயன்பாட்டை சாதகப்படுத்திக் கொள்வதுடன் வருமானமாக்கும் முயற்சியில் பேஸ்புக் தற்போது களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மிஷேல் ஒபாமா தன் கணவரிடம் என்ன கேட்டார் தெரியுமா..?

உலகின் உச்ச அதிகாரம் கொண்ட அந்த ஆணின் குரல், தன் முக்கியமான உரையில், தன் மனைவி பற்றிக் குறிப்பிடும்போது அன்பாலும் நன்றியாலும் நெகிழ்கிறது.

”25 ஆண்டுகளாக எனக்கு மனைவியாக, என் குழந்தைகளுக்குத் தாயாக மட்டுமல்ல, என் மனதுக்கு நெருக்கமான தோழியாக உடன் பயணித்திருக்கிறாய்.

உனதில்லை என்றாலும், பல பொறுப்புகளை நீ விரும்பி எடுத்துக்கொண்டாய். அவற்றை உன் நல் இயல்பாலும், தைரியத்தாலும் செய்து முடித்தாய். இந்த வெள்ளை மாளிகையை, அனைவருக்குமான இடமாக நீ மாற்றினாய்.

வரும் தலைமுறையினரின் இலக்கு மேன்மையானதாக இருக்கும். ஏனெனில், அவர்கள் உன்னை ரோல்மாடலாகக் கொண்டிருக்கிறார்கள். நீ என்னைப் பெருமைப்பட வைத்தாய். நீ நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்தாய்!”

சிகாகோவில், அமெரிக்க அதிபராக தன், இறுதி உரையை பராக் ஒபாமா நிகழ்த்தியபோது, முன் வரிசையில் அமர்ந்திருந்த தன் மனைவியின் கண்களைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொன்னவர்,

ஒரு சந்தர்ப்பத்தில் தன் கைக்குட்டையை கண்களில் ஒற்றிக்கொள்ள, அந்த அரங்கில் இருந்த 18,000 பேரும் நெகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

இதே சிகாகோவில்தான் பராக் ஒபாமாவும், மிஷேலும் சந்தித்துக்கொண்டனர். இதே சிகாகோவில்தான் இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்களும் பிறந்தனர்.

”எனக்கும் மிஷேலுக்கும், வாழ்வின் அனைத்து அத்தியாயங்களும் இந்த சிகாகோவில்தான் ஆரம்பித்தன” என தன் ஃபேஸ்புக் போஸ்டில் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா.

ஆம்… ஒபாவின் அனைத்து அறிக்கைகளிலும், மிஷேலின் பெயர் நீங்காமல் இடம் பிடித்திருக்கும். அந்தளவுக்கு அவர் இல்வாழ்க்கை, பொதுவாழ்க்கை இரண்டிலும் இரண்டறக் கலந்தவர் மிஷேல்.

எண்பதுகளின் இறுதியில், சிகாகோவில் உள்ள சிட்லே ஆஸ்டின் சட்ட நிறுவனத்தில் மிஷேல் பணிபுரிந்தபோது, அங்கு புதிதாகப் பணிக்குச் சேர்ந்தார் ஒபாமா.

அவருக்கு மிஷேல்தான் பாஸ். சில மாதங்களில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. 1992-ம் ஆண்டு, அது திருமணத்தில் முடிந்தது. அப்போது, ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவார் என்றோ, மிஷேல் அமெரிக்காவின் முதல் குடிமகள் ஆவார் என்றோ அந்தத் தம்பதிக்குத் தெரியாது.

என்றாலும், அவர்களின் வாழ்க்கை நோக்கமும் செயல் ஆக்கமும் கொண்ட பாதையிலேயே சென்றுகொண்டிருந்தது. சோஷியாலஜி பட்டம் பெற்று, சட்டம் படித்த மிஷேலுக்கு மக்கள் சேவையில் விருப்பம் அதிகம்.

எனவே, வழக்குரைஞராகத்தான் வகித்த வேலையை உதறி, சிகாகோ மாநகர திட்ட மற்றும் வளர்ச்சித் துறையில் உதவி ஆணையராகும் அளவுக்கு பொதுவாழ்வில் முன்னேறினார்.

இன்னொரு பக்கம், தன் மகள்கள் மலியா, சாஷாவுக்கு ஓர் அம்மாவாக அவர் எந்தளவுக்குத் தேவைப்படுவாரோ, அதை நிறைவாகக் கொடுக்கவும் அவர் தவறவில்லை.

2007. ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கணவரின் வெற்றிக்கு உழைக்க, தன் பணிகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் மிஷேல்.

ஆனால், அதற்கு பதில் பரிசாக தன் கணவர் சிகரெட் பழக்கத்தை விடவேண்டும் என்று அவரிடம் உறுதிபெற்றுக் கொண்டார். தொடர் பயணங்கள், பிரசாரங்கள் எனச் செல்ல வேண்டிய சூழல்.

மிஷேல் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டார். வாரத்தில் ஓர் இரவு மட்டுமே வெளியே தங்குவது, இரண்டு நாட்கள் தொடர் பிரசாரத்தின் இறுதி இரவை தன் மகள்களுக்கு மட்டுமானதாக ஆக்குவது.

‘உங்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொள்வீர்கள்?’ என்று அமெரிக்காவின் குடிமகளான மிஷேலிடம் கேட்கப்பட்டபோது, ‘முதலில், மலியா, சாஷாவின் அம்மாவாக’ என்ற தன் பதிலுக்கு எப்போதும் உண்மையாக இருப்பவர் மிஷேல்.

2008 அமெரிக்கத் தேர்தலில் ஒபாமா வென்றதில், மிஷேலின் உழைப்புக்கு மிகப் பெரிய பங்குண்டு. அதை ஒபாமாவே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

பிரசாரத்தின்போது சில பத்திரிகைகள் ‘ஆங்ரி பிளாக் உமன்’ என்ற அடைமொழியுடனே எப்போதும் தன்னைக் குறிப்பிட்டதில் தொடங்கி, அனைத்து விமர்சனங்களையும் கடந்து, தன் கணவர், மகள்களுடன் மிஷேலின் கறுப்பினக் குடும்பம் வெள்ளை மாளிகையில் குடியேறியபோது, உலகமே ஆச்சர்யமாகத்தான் பார்த்தது.

அதன் பின் மிஷேல் அமெரிக்காவின் முதல் குடிமகளாக மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம், உலகுக்கு செய்திதான். வெள்ளை மாளிகையில் முதல் முறையாக ஆர்கானிக் தோட்டம் நிறுவினார் மிஷேல்.

இந்தத் தலைமுறை குழந்தைகளின் ஒபிஸிட்டி பிரச்னைக்குத் தீர்வு காண ‘லெட்ஸ் மூவ்’ என்ற இயக்கத்தை அவர் ஆரம்பிக்க, அதற்கான தேசிய அளவிலான அரசின் செயல் திட்டங்களை வகுத்தார் ஒபாமா.

‘ரீச் ஹையர்’ என்ற இயக்கத்தை நிறுவி, ஒவ்வொரு அமெரிக்க மாணவரும் நிச்சயமாக மேற்படிப்பு பெறுவதற்கான சூழலை மேம்படுத்தினார்.

‘லெட் கேர்ள்ஸ் லேர்ன்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து, மாறுபட்ட சூழல்களில் வசிக்கும் பதின் பருவப் பெண்கள் கல்வி பெறும் வாய்ப்புகளை அதிகரித்தார்.

இதுபோன்ற செயல்பாடுகளால்தான், தன் இறுதி உரையில் தன்னையும், நாட்டையும் பெருமைப்படுத்தியதாக தன் மனைவியைக் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா.

மிஷேல், தன் ஆடைகளாலும் அதிகம் கவனிக்கவைத்தவர். ஆரம்பகால தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் துணைகளிலேயே, சுவாரஸ்யம் குறைந்த, பிரபலத்தன்மை இல்லாதவர் இவர்தான்’ எனக் குறிப்பிடப்பட்டவர் மிஷேல்.

ஆனால், 2006ல் ‘எசன்ஸ்’ இதழ் வெளியிட்ட ‘உலகின் ஆளுமைமிக்க 25 பெண்கள்’ பட்டியலிலும், ‘உலகின் மிகச் சிறந்த ஆடை ரசனைகொண்ட 10 நபர்கள்’ பட்டியலிலும் அந்த கறுப்பழகி இடம் பிடித்தது, காலத்தின் பதில்.

மிஷேல், மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர். 2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஒபாமா அதிபரானபோது மிஷேல் நிகழ்த்திய உரை உட்பட, வரலாற்றில் இடம்பிடித்த அவரின் உரைகள் பல. அவற்றின் கருப்பொருளாக, பெரும்பாலும் தன் கணவரையே கொண்டிருக்கிறார் மிஷேல்.

முன்னே நடந்து செல்லும் தன் மனைவிக்கு குடைப்பிடித்தபடி, அமெரிக்க அதிபர் அவர் பின்னால் நடந்துவரும் புகைப்படம், ஜோடியாக பால் ரூம் நடனம், கட்டியணைத்தபடி, முத்தம் கொடுத்தபடி, மகள்களுடன் ரிலாக்ஸ் தருணங்கள் என… இந்த வெள்ளை மாளிகை தம்பதியின் ஒவ்வொரு புகைப்படமும், க்யூட் ரசனையைத் தரும்.

இதோ… அமெரிக்க அதிபராக இறுதி உரை நிகழ்வின் முடிவிலும், தன் மனைவியின் கரம் பற்றியே நிற்கிறார் ஒபாமா.

இறப்பதற்கு முன் கடாபி பேசிய இறுதிவார்த்தைகள்: வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

லிபியாவின் முன்னாள் பிரதமர் முயம்மர் கடாபி இறப்பதற்கு முன் மருத்துவமனையில் கூறிய இறுதி வார்த்தைகள் வெளியாகியுள்ளது.

மரணப்படுக்கையில் கடாபி கூறியதாவது, 40 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறேன்.

மக்களுக்கு தேவையான வீடு, மருத்துவமனை, பள்ளிக்கூடம், அவர்கள் பசியில் இருக்கும் போது உணவு கொடுத்தேன். பாலைவனமாக இருந்த Benghazi நகரத்தை விளைநிலைமாக மாற்றினேன். அமெரிக்கா தாக்குதல்களில் இருந்து எழுந்து நின்றேன்.

அவர்கள் என்னை கொல்ல முயன்று என் வளர்ப்பு குழந்தையைக் கொன்றனர். பின்னர், ஆப்ரிக்க ஆணையத்திடம் பணம் கொடுத்து ஆப்ரிக்க மக்களுக்கு உதவினேன்.

மக்கள் குழுவே நாட்டை வழிநடத்தும் வகையில் மக்கள் உண்மையான ஜனநாயகத்தை புரிந்து உதவ என்னால் ஆன அனைத்து உதவியை செய்தேன்.

ஆனால், அது ஒருபோதும் போதுமானதாக அமையவில்லை. சுயநலம் காரணமாக 10 வீடு, வசதி என வாழும் மக்கள் திருப்தி அடையவில்லை என சிலர் என்னிடம் கூறினர்.

 மேலும், அமெரிக்கர்கள் மற்றும் பிற நாட்டினருக்கு ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தேவை என கூறினர். இது ஒரு மோசமான திட்டம் என உணர்ந்தேன்.

அமெரிக்காவில் எந்த இலவச மருந்து, எந்த இலவச மருத்துவமனைகள், எந்த இலவச வீடுகள், எந்த இலவச கல்வியும் இல்லை. மக்கள் பிச்சை அல்லது சூப் பெற நீண்ட வரிசைகளில் போக வேண்டியிருந்தது.

எங்களிடமிருந்து சுதந்திரம் உட்பட அனைத்து இலவசத்தை தங்கள் வசப்படுத்த என்னுடைய சிறிய ஆப்ரிக்க மகன் ஓபாமா என்னை கொல்ல வேண்டும் என முடிவு செய்தான்.

முதலாளித்துவம் என்ற பெயரில் அதை கைப்பற்ற அமெரிக்க இராணுவ வரலாற்றில் இடம்பெறும் வகையில் நான் பெரிய படையின் தாக்குதலுக்கு உள்ளானேன்.

நான் இறக்க விரும்பவில்லை, என் மக்கள், நாட்டை பாதுகாக்க நான் இறக்க வேண்டுமெனில் அது தானாக நடக்கும். என் கடைசி மூச்சு வரை மக்களுக்காக போராடுவேன் இதற்கு இறைவன் உதவு புரிவான் என கடாபி கூறியுள்ளார்.

குண்டுபெண்ணுக்கு சிகிச்சையளிக்க ரூ.2 கோடி செலவில் தனியார் ஆஸ்பத்திரியில் தனிஅறை!

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரை சேர்ந்த பெண் எமான் (வயது 36). இவருக்கு 11 வயது இருந்தபோது பக்கவாதத்தாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். படுக்கையிலேயே 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரது உடல் எடை நாளுக்கு நாள் பெருகி, தற்போது 500 கிலோ எடையுடன் காட்சி அளிக்கிறார். உலகிலேயே குண்டான பெண்ணாகவும் கருதப்படுகிறார். அதிகரித்துக்கொண்டே செல்லும் உடல் பருமனால் அவர் மிகவும் அவதி அடைந்து வருகிறார்.

இதையடுத்து, உலகின் அனைத்து நாடுகளாலும் கைவிடப்பட்ட நிலையில், எமானுக்கு மும்பையை சேர்ந்த டாக்டர் முப்பஷால் என்பவர் உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள முன்வந்தார். வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜிடம் எமானின் நிலை குறித்து டாக்டர் எடுத்துக்கூறி, அவருக்கு விசா கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் எமானை இந்தியா அழைத்து வருவதற்கு எகிப்தில் இருந்து நேரடி விமானங்கள் கிடையாது. அரை டன் எடை கொண்ட அவரை ஏற்றிவர தனியார் விமான நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன.

இதனையடுத்து அவரை இந்தியா கொண்டு வருவதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. எமான் அகமதுக்கு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்கிடையே எமான் அகமதுக்கு அறுவை சிகிச்சை செய்யும் வகையில் ரூ.2 கோடி செலவில் கிர்காவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி பிரத்யேக அறையை உருவாக்கி வருகிறது. 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த அறை ஆஸ்பத்திரியின் தரை தளத்தில் கட்டப்படுகிறது.

இதில் டாக்டர்கள் அறை, கண்காணிப்பாளர் அறை, 2 கழிவறைகள், வீடியோ கான்பரன்சிங் அறை ஆகியவை இடம் பெறுகின்றன. மேலும் குண்டுபெண்ணை கொண்டு செல்லும் வகையில் அறையின் வாசல் மிகப்பெரியதாக அமைக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம்: சீனா புதிய திட்டம் அறிவிப்பு!!

தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பல்வேறு பகுதிகளில் மணல், கற்களை கொட்டி செயற்கை தீவுகளை, சீனா அமைத்து வருகிறது. மேலும் விமானப்படை தளம், கலங்கரை விளக்கம், கடற்படை தளம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது.

இதனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேஷியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பானுக்கு ஆதரவாக, அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், சர்ச்சக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம் கட்டப்போவதாக சீனா புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுத்தமான எரிசக்தியை உருவாக்கும் பொறுட்டு 5 ஆண்டு திட்டம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.

டாடா சன்ஸ் குழுமத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமனம்!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் டாடா. இந்த குழுமத்திற்கு உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பலவிதமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரத்தன் டாடா பொறுப்பு வகித்தார். அதன்பின்னர் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகிக் கொள்ள, சைரஸ் மிஸ்திரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமை பொறுப்பு வகித்து வந்த சைரஸ் மிஸ்திரி, கடந்த அக்டோபர் 24-ம்தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். அந்த குழுமத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களால் சைரஸ் மிஸ்திரிக்கு சிக்கல் உருவானதாக கூறப்பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்வதாக சைரஸ் மிஸ்திரி அறிவித்தார்.

சைரஸ் மிஸ்திரி நீக்கத்தைத் தொடர்ந்து ரத்தன் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய தலைவரை தேர்வுக் குழு முடிவு செய்யும் வரை ரத்தன் டாடா இடைக்கால தலைவராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டாடா குழுமங்களின் புதிய நிறுவனத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள டாடா சன்ஸ், ‘‘அவர் அடுத்த மாதம் 21-ந்தேதியில் இருந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார்’’ என்று கூறியுள்ளது.

2009-ம் ஆண்டிலிருந்து டாடா கன்சல்டன்சி சர்வீஸ் தலைவராக பதவி வகித்து வரும் சந்திரசேகரன் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுக்கு நம்பிக்கையுடன் காத்திருந்தோம், நல்ல செய்தி இதுவரை வரவில்லை: பன்னீர் செல்வம் பேட்டி!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்போது, “சென்னைக்கு தேவையான குடிநீரை கிருஷ்ணா நதியில் இருந்து பெறுவதற்காக சென்றிருந்தேன். ஆந்திர முதல்வரை சந்தித்து கூடுதல் நீர் தருமாறு வலியுறுத்தினேன்” என்று கூறினார்.

மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம், ஆனால் நல்ல செய்தி இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக, குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர மாநிலத்தின் தலைநகரம் அமராவதிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.

அங்கு ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா ஆகியோரும் உடனிருந்தனர்.

சசிகலா முதல்வர் ஆகலாமா? மக்கள் தீர்ப்பு இதுதான்!

அதிமுக பொது செயலாளர் சசிகலா அடுத்து தமிழகத்தின் முதல்வராக முயற்சித்து வருகிறார்.

அவர் முதல்வராக ஆகலாமா என பிரபல வார நாளிதழ் எடுத்த மெகா கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த முடிவுகள் மக்கள் சசிகலாவுக்கு எதிராக இருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளது.

மொத்தம் 11 ஆயிரத்து 174 பேரிடம் சசிகலா முதல்வர் ஆவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதில் 75.13 சதவீத மக்கள் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். அவர் முதலமைச்சராக வரக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.

சட்ட பஞ்சாயத்து இயக்கம் என்னும் தனியார் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆன்லைன் சர்வேயில் சசிகலா முதல்வர் ஆக எதிர்ப்பு தெரிவித்து 97 சதவீத மக்கள் வாக்களித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னீர் செல்வத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

முதல்வராக பொறுப்பேற்ற பன்னர் பன்னீர் செல்வம் கையில் எடுத்த முதல் முயற்சி வெற்றி அடைந்துள்ளது.

பருவமழை பெய்யாத காரணத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆந்திர மாநிலத்திடமிருந்து கிருஷ்ணா நீர் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பன்னீர் செல்வம் ஆந்திரா சென்றுள்ளார்.

அங்கு, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அதிகாரிகளை சந்தித்து பன்னீர் செல்வம் பேச்சு நடத்தினார். தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும்.கிருஷ்ணா நீர் கிடைத்தால் மட்டுமே சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்.

எனவே, ஏப்ரல் வரை தொடர்ச்சியாக, 4 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என, பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில், போதிய நீர் இருப்பு இல்லாததால், 2.5 டி.எம்.சி மட்டும் உடனடியாக வழங்குவதாக ஆந்திர முதல்வர் உறுதி அளித்தார்.மேலும், தமிழக அரசு செலுத்த வேண்டிய பராமரிப்பு கட்டணம் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப் பட்டது.

தமிழகம், 443 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என ஆந்திரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைசெலுத்த, தமிழக முதல்வர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

மேலும், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை, ஆந்திரா விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆந்திரா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க முதல்வர் பன்னீர் செல்வம் எடுத்த முதல் முயற்சிக்கு கிடைத்த பலனாக ஆந்திர அரசு, 2.5 டி.எம்.சி தண்ணீர் தர முன் வந்துள்ளது.

மிரட்டி பணிய வைக்க முடியாது: ஜெ.வின் அண்ணன் மகள் தீபா அதிரடி!

என்னை சந்திக்க வரும் தொண்டர்களை சிலர் மிரட்டுவதாக தெரியவந்துள்ளது. யாரையும் மிரட்டி, அவர்களுக்கு பணிய வைக்க முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து, முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவிய நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கிடையில், சசிகலா தலைமைப் பதவிக்கு எதிர்க்கும் சில அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் தினமும் தீபாவின் வீட்டிற்கு அவரை பார்ப்பதற்காக வருகின்றனர். அவர்களிடம் தீபா, அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபா பேரவை ஆரம்பித்து, உறுப்பினர் சேர்க்கையையும், அதிமுகவினர் துவங்கி விட்டனர்.

சேலத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா அதிமுக என்ற பெயரில் புதிய இயக்கத்தையும் ஆரம்பித்து கொடி, சின்னம் ஆகியவற்றையும் அறிவித்து விட்டனர். இந்த இயக்கம் தீபா தலைமை தாங்கி நடத்துவதற்காக துவங்கப்பட்ட இயக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தீபா குறித்த அவதூறுகளை அதிமுக வட்டாரங்கள் பரப்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், தீபா கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய தீபா, நான் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறேன்; கிறிஸ்தவராக மாறி விட்டேன் என, இப்போது சொல்லவில்லை.

என் அத்தை ஜெயலலிதா இறந்த சில நாட்களில், நான், அவர் மரணத்தில் ஒளிந்து கிடக்கும் மர்மம் விலக வேண்டும் என சொல்ல ஆரம்பித்த, சில நாட்களிலேயே இப்படி, செய்தி பரப்ப துவங்கி விட்டார்கள்.

அப்போதே நான் சொன்னேன். நான், எல்லா மத பண்டிகைகளுக்கும், அந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ரம்ஜான் நாளில், முஸ்லிம்களுக்கு வாழ்த்துச் சொன்னேன். உடனே, நான் முஸ்லிம் மதத்துக்கு மாறி விட்டேன் என சொல்ல முடியுமா?

அரசியல் ரீதியில், நான், பலம் பெற்று விடுவேன் என்ற அச்சத்தில், சிலர் இப்படியெல்லாம் செய்தி பரப்புகின்றனர். அதில் கவனம் செலுத்தி, நேரத்தை வீணடிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பத்தை, அந்த விஷயத்திலும் நான் நிறைவேற்ற மாட்டேன்.

என்னை சந்திக்க வரும் தொண்டர்களை சிலர் மிரட்டுவதாக தெரியவந்துள்ளது. யாரையும் மிரட்டி, அவர்களுக்கு பணிய வைக்க முடியாது. நடப்பது, நல்லவிதமாக நடந்தே தீரும்” என்று தெரிவித்துள்ளார்.

தாய் மண்ணையும் இழக்கும் மகிந்த!

ஹம்பாந்தோட்டையில், சீனா – இலங்கை கைத்தொழில் பேட்டையை ஆரம்பிக்கும் நிகழ்வை சீர்குலைக்க ராஜபக்சவினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் சீன அரசாங்கம் ராஜபக்சவினர் மீது கடும்கோபத்தில் இருப்பதாக ராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது சீன அரசாங்கத்தோடு நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார்.

இந்தியாவிற்கு முன்னுரிமை கொடுப்பதாகக் காட்டிக்கொண்டு சீனாவை அனைத்து தன்பக்கம் வைத்திருந்தார்.

குறிப்பாக மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது, இலங்கை சீனாவின் இன்னொரு மாநிலமாக மாறியிருந்தது என அக்காலகட்டத்தில் விமர்சிக்கப்பட்டதுடன், இந்தியாவின் எதிர்ப்பையும் சம்பாதித்திருந்தார்.

எனினும், சீனாவுடனான அவரின் நெருக்கம் குறைந்திருக்கவில்லை. சீனாவுடனான மகிந்தவின் தொடர்பானது இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் கடும் சவாலாகவே இருந்தது.

இந்நிலையில் தான் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்த முன்னின்று உழைத்தது அமெரிக்காவும், இந்தியாவும். மகிந்த ராஜபக்சவின் ஆட்சி நாட்டில் இல்லாது செய்யப்பட்டு, மைத்திரி, ரணில் தலைமையிலான மாற்று அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

ஆட்சிப்பீடம் ஏறிய மைத்திரி- ரணில் அரசு ஆரம்பத்தில் சீனாவுடனான நெருக்கத்தை குறைத்திருந்தாலும், காலப்போக்கில் சீனாவின் தேவையை இன்றைய அரசாங்கம் உணர்ந்தது.

மகிந்த ராஜபக்சவின் பாணியில் நட்பை புதுப்பித்துக்கொண்டது மைத்திரி – ரணில் அரசு. நாட்டின் அபிவிருத்தியில் சீனாவின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

குறிப்பாக ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்திக்கு சீனாவுடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ராஜபக்சவினரை அழைத்து உத்தேச அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக தெளிவுப்படுத்தியுள்ளதுடன் இது ராஜபக்சவினர் ஆட்சியில் இருக்கும் போது சீனா முன்வைத்த திட்டம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த நாமல் ராஜபக்ச, இந்த அபிவிருத்திப் பணியை தமது குடும்பத்தினர் எதிர்க்கவில்லை.

இதேவேளை இது குறித்து சீன தூதரகம் நாமல் ராஜபக்சவிடம் உறுதிமொழி ஒன்றையும் பெற்றுக்கொண்டுள்ளது.

ராஜபக்சவினர் வழங்கிய இந்த உறுதிமொழிக்கு அமையவே அன்றைய தினம் சீனாவின் முதலீட்டாளர்களை ஹம்பாந்தோட்டைக்கு அழைத்திருந்தது.

எனினும் உறுதிமொழியை வழங்கிய நாமல், அதனை கடைப்பிடிக்கவில்லை.

ஹம்பாந்தோட்டையில், சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.

ராஜபக்சவினரின் தூண்டுதலால் ஹம்பாந்தோட்டையில் அன்றைய தினம் பதற்றத்தை ஏற்படுத்தியதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் தமது தூதரகத்தில் வாக்குறுதியை வழங்கிய நாமல் ராஜபக்சவே முன்னணியில் வந்து கற்களை வீசி மக்களை தூண்ட காரணமாக இருந்தமை குறித்து சீனா கடும் கோபத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

யுத்தத்தின் ஆரம்பத்தில் ராஜபக்சவினருக்கு உதவிகளை வழங்கிய அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ஜப்பான் ஆகிய சகல நாடுகளை ராஜபக்சவினர் தமது ஆட்சிக்காலத்தில் பகைத்து கொண்டனர்.

சீன அரசாங்கம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தின் போது, மகிந்தவிற்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியான காலக்கட்டங்களின் போதெல்லாம் பல்வேறுவிதமான உதவிகளை வழங்கியிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர் பார்க்கப்பட்டிருந்த வேளையிலும் கூட சீன அரசாங்கம் நேரடியாக இலங்கைக்கு தன்னுடைய ஆதரவினைக் காட்டி நின்றதுடன், இலங்கையை காப்பாற்றியும் இருந்தது.

அதுமாத்திரமல்லாது, ஆட்சியை இழந்த மகிந்த ராஜபக்சவினை சீன அரசாங்கம் கைவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்தாண்டு மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வமாக சீனாவிற்கு அழைத்துப் பேசியிருந்தது.

ஆனால், சீன அரசாங்கம் இன்றைய அரசாங்கத்தோடு போட்டிருக்கும் ஒப்பந்தத்திற்கு எதிராக செயற்படமாட்டோம் என வாக்குறுதி வழங்கிவிட்டு, மக்களை அதற்கு எதிராக தூண்டிவிட்டமையானது, சீனாவை சீற்றமடைய வைத்திருக்கிறது.

இதற்கிடையில் நாட்டில் செல்வாக்கு இழந்துவரும் மகிந்த ராஜபக்சவின் சொந்த பிரதேசமும் பறிபோய்க்கொண்டிருக்கிறது.

தன்னுடைய ஆட்சிக்காலத்தின் போது, அனைத்து அபிவிருத்திகளையும் சீனாவைக் கொண்டு ஹம்பாந்தோட்டையில் முன்னெடுத்திருந்தார் மகிந்த.

ஆனால், இன்று அதே சீனாவைக் கொண்டு அதே ஹம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்ய மைத்திரி, ரணில் அரசாங்கம் முன்னின்று செயற்படும் பொழுது அது மகிந்த ராஜபக்சவிற்கு பயத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டில் பெரும்பாலான இடங்களில் செல்வாக்கை இழந்தவர்கள், இனி சொந்த மாவட்டத்திலும் செல்வாக்கு இழந்துவிடுவோமா என்னும் ஏக்கமே இது.

இதனால் தான் நெருங்கிப் பழகிய சீனாவையும் பகைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.

இதுவரை காலமும் சீனாவை நம்பியிருந்த மகிந்த ராஜபக்ச இப்பொழுது அந்த அரசாங்கத்தையும் பகைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆபத்தென்றால் சீனாவிடம் ஓடிய மகிந்த இனி எத்திசை நோக்கி ஓடுவாரோ? ஹம்பாந்தோட்டையின் செல்வாக்கையும் இழப்பார் போன்றே தோன்றுகிறது.

தாய் மண்ணே கைவிடும் நிலைவந்தாலும் வரும்.