சுமார் 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது, உயிரினங்களும் வாழ்ந்துள்ளன.
அதன்பின் செவ்வாய்கிரகத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதிய காரணத்தினால் அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என நம்பப்பட்டு வருகின்றது.
இதற்கான சான்றாக இன்றும் செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதிய சுவடு காணப்படுகின்றது. இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிதம் பூமியை வந்தடைந்தன கூறப்படுகிறது.
மனிதர்களாகிய நமக்கு செவ்வாய் கிரகம் தான் அடிப்படை என பல விஞ்ஞானிகள் தீர்க்கமாக நம்புகின்றார்கள். இதை தொடர்ந்து செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட தொடங்கின.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5–ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மங்கள்யான் விண்கலம் 2014 செப்டம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை அனுப்பி உள்ளன.
செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது நாசா.
இந்த நிலையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா போதிய நிதி ஆதாரம் இல்லாததால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முடியாது என ஒப்புகொண்டுள்ளது.
சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் எதிர்கால சாத்தியக்கூறு தொடர்பாக விண்வெளி நிறுவனம் பல ஆண்டுகளாக செய்தி வெளியிட்டு வருகிறது.
விண்வெளி வீரர்கள் மற்றும் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோனாடிக்ஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த 12 ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்ப முடியாது என நாசா ஒப்பு கொண்டுள்ளது.
நாசாவின் மனித விண்வெளி விமான தலைமை அதிகாரி வில்லியம் ஜெர்ஸ்டென்மயர் கூறியதாவது:-
செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பவது மிக எளிதான காரியம் அல்ல அதற்கு நிறைய நிதி ஆதாரங்கள் வேண்டும். செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவது குறித்து நாம் ஒரு தேதியை நிர்ணயம் செய்ய முடியாது. அதற்கான காரணம் உண்மையில் நிதி ஆதாரம் அது குறித்து விவாதித்தோம்.
செவ்வாய்கிரகத்தில் சமதளமான மேற்பரப்புகளும் இல்லை. அதற்குள் நுழைவது, அங்கு தரை இறங்குவது ஆகியவை நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.என கூறினார்.