எனது கணவனை சிறையிலடைத்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம் எனது 15 வயது மகனை மேசன் தொழிலாளியாக மாற்றியிருக்கின்றது.

download

பயங்கரவாதி என அடையாளப்படுத்தி எனது கணவனை சிறையிலடைத்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம் எனது 15 வயது மகனை மேசன் தொழிலாளியாக மாற்றியிருக்கின்றது. என தமிழ் அரசியல் கைதி ஒருவரின் மனைவி கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

2013.12.11ஆம் திகதி எனது கணவனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியாவில் வைத்து கைது செய்தனர். அவர்கள் கைது செய்யும்போது எனது கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தியே கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு 4 வருடங்களாகியும் எனது கணவன் மீது வழக்கு தொடரப்படவில்லை. குற்றச்சாட்டும் கூட சுமத்தப்படவில்லை.

இந்நிலையில் 4 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை கொண்டு நடத்த இயலாத நிலையில் எனது 15 வயது மகன் மேசன் தொழில் செய்து குடும்ப பாரத்தை சுமக்கின்றான்.

நல்லாட்சி என தம்மை தாமே கூறி கொள்ளும் இந்த அரசாங்கம் எனது கணவனை பயங்கரவாதி ஆக்கி சிறையில் அடைத்திருக்கிறது.

அது போதாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நல்லாட்சியில் பாடசாலை சிறுவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தினை பெற்று கொடுப்பேன் என கூறி எனது 15 வயது மகனின் எதிர்காலத்தை அழித்து அவனை மேசன் தொழிலாளி ஆக்கியிருக்கின்றார்.

எனது கணவனை விடுதலை செய்யகோரி கடந்த 4 வருடங்களாக ஜனாதிபதி, பிரதமர், தமிழ் அரசியல் தலைவர்கள் என சகலருக்கும் கடிதங்களை எழுதி களைத்துபோன சூழ்நிலையில் இங்கே வந்திருக்கின்றேன்.

தேர்தல் காலத்தில் இடுப்பளவுக்கு குனிந்து கும்பிடு போட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம். என கூறிய தமிழ் அரசியல்வாதிகள் கூட இன்று அரசியல் கைதிகள் உள்ளார்களா? என கேட்கும் நிலையே உள்ளது.

பலர் நான் எழுதிய கடிதத்திற்கு பதில் கூட அனுப்பவில்லை. சிலர் அனுப்பிய பதில் கடிதத்தில் தண்டணை காலம் நிறைவடைந்த பின்னர் விடுதலை செய்வோம் என கூறியிருக்கின்றார்கள். எனது கணவன் மீது குற்றச்சாட்டே சுமத்த முடியாத நிலையில் எப்படி தண்டணை வழங்க போகின்றார்கள்.

ஏற்கனவே பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக சாட்சிகளை திரட்டவே இவ்வாறான கைதுகள் நடக்கின்றன. திருமணமாகி 15 வருடங்கள் என் கணவருடன் இருந்த எனக்கு அவர் பயங்கரவாதி எனத் தெரியவில்லை.

அவரை பெற்று வளர்த்த பெற்றோருக்கு அவர் பயங்கரவாதி என தெரியவில்லை. ஆனால் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு மட்டும் அவர் பயங்கரவாதி என தெரிந்திருக்கிறது.

எனது கணவன் ஜோசப் செபஸ்தியன் விடுதலை செய்யப்படவேண்டும். இல்லையேல் அரசியல்வாதிகள் அரசியலுக்காக செய்யும் உண்ணாவிரத போராட்டங்கள் போல் அல்லாமல் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நான் செய்வேன்.

எனது கணவன்போன்று பலர் சிறையில் வாடுகின்றார்கள் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என கண்ணீர்மல்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.