நம்பர்-1 என்பதே இலக்கு; ஆனால் ஒரு வருடத்திற்குள் முடியாது- இலங்கை கேப்டன் சொல்கிறார்

நம்பர்-1 என்பதே இலக்கு; ஆனால் ஒரு வருடத்திற்குள் முடியாது- இலங்கை கேப்டன் சொல்கிறார்

இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஜிம்பாப்வே 3-2 எனக் கைப்பற்றி சரித்திர சாதனைப் படைத்தது. இந்த தோல்விக்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் ஒட்டுமொத்த கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

இதனால் டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன சண்டிமல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை அணியை நம்பர்-1 இடத்திற்கு கொண்டு வருவதே தனது குறிக்கோள் என்றும், ஆனால் அது ஒரு வருடத்திற்குள் நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சண்டிமல் கூறுகையில், ‘‘என்னுடைய இறுதி இலக்கு என்னவெனில், இலங்கை அணி உலகத் தரவரிசையில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இது ஒரே நாளிலோ, ஒரு ஆண்டிலோ நடந்து விடாது.

நாங்கள் கடுமையாக உழைத்து அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். நாங்கள் இளம் வீரர்களை பெற்றுள்ளோம். அவர்கள் தங்களது அனுபவத்தை வெளிக்கொண்டு வரவேண்டும். படிப்படியாக நாங்கள் முன்னேற வேண்டும். தற்போதைய 7-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு, அதற்குப்பின் 5-வது இடத்திற்கு. இப்படி நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது’’ என்றார்.

2010-ல் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை அணி தற்போது, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளது.