இச்சம்பவத்தின் சதி பின்னணியை கண்டறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. ஆனால், அவர் அதை மறுத்து வந்தார். பல்சர் சுனிலை தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகையே திலீப்பின் சதித்திட்டத்துக்கு காரணம் என்றும் அவர்கள் கூறினர். திலீப் அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டு உள்ளார். இன்று காலை கொச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவா துணை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கபட்டார்.
நடிகர் திலீப்புக்கு எதிராக போலீசார் 19 முக்கிய ஆதாரங்களை கண்டு பிடித்து உள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும் 2 வது குற்றவாளியாக நடிகர் திலிப்பும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.முதல் குற்றவாளி சுனிலுக்கு நடிகர் திலீப் இந்த குற்ற செயலுக்கு ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார்.திலீபுக்கு எதிராக சதி மற்றும் கற்பழிப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்து உள்ளனர்.
பாவனா கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனுக்கு எதிராக இரண்டு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து காவ்யா மற்றும் அவரது தாயை போலீசார் இன்று தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பாவனாவை கடத்திய பல்சர் சுனி காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை சென்றது பக்கத்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.